என் மலர்
செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பிச்சை எடுக்கும் போராட்டம்
கடலூர்:
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், வெளி மாநிலத்திற்கு சென்று நீட் தேர்வு எழுத மாட்டோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமை கட்சி மாணவரணி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு பிச்சை எடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.
மாநில மாணவரணி செயலாளர் அருள்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்த் , மாவட்ட தலைவர் சுரேந்தர் , நகர செயலாளர் கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் கையில் சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். வேண்டாம்... வேண்டாம்... நீட் தேர்வு வேண்டாம், வேண்டும்... வேண்டும்... காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய கோரிக்கை அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் நிர்வாகிகள் தண்டபாணி, சுரேஷ், சிலம்பு, ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






