என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைத்தீஸ்வரி
    X
    வைத்தீஸ்வரி

    சேத்தியாதோப்பு அருகே இளம்பெண் மர்மமரணம்- போலீசார் விசாரணை

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்தியாதோப்பு:

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள பரதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி ராசுமதி. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    மணிமாறனின் மூத்த மகள் வைத்தீஸ்வரி (வயது 16). 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு புவனகிரியில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் தினமும் வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாவடி வரை நடந்து சென்று அங்கிருந்து பஸ்சில் வேலைக்கு சென்றார்.

    கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற வைத்தீஸ்வரி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து ஒரத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான வைத்தீஸ்வரியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் பரதூர் அருகே முட்புதரில் வைத்தீஸ்வரி பிணமாக கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வைத்தீஸ்வரியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டி.எஸ்.பி.க்கள் ஜவகர்லால், சுந்தரவடிவேல், ஒரத்தூர் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    வைத்தீஸ்வரியின் உடலை பார்வையிட்டனர். அவரது முகம் மற்றும் உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. அங்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றது.

    இதையடுத்து வைத்தீஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வைத்தீஸ்வரியின் தந்தை மணிமாறன் ஒரத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    பிணமாக கிடந்த வைத்தீஸ்வரி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இது தொடர்பாக பரதூர் பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Tamilnews
    Next Story
    ×