என் மலர்
செய்திகள்

விருத்தாசலத்தில் எம்.ஜி.ஆர். சிலை துணியால் மூடப்பட்டது: போலீஸ் குவிப்பு- பதட்டம்
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலை சந்திப்பில் 6 அடி உயரத்தில் எம்.ஜி.ஆர். சிலை ஒன்று உள்ளது. நேற்று நள்ளிரவு திடீரென்று அந்த எம்.ஜி.ஆர். சிலை துணியால் மூடப்பட்டது. மேலும் அந்த சிலை இருந்த இடத்தை சுற்றிலும் தட்டிகள் வைத்து கட்டப்பட்டது.
எம்.ஜி.ஆர். சிலை பராமரிப்பு பணிக்காக மூடி வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கூறினர்.
இன்று திடீரென்று எம்.ஜி.ஆர். சிலை மூடப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
இன்று சென்னையில் இருந்து கார் மூலம் டி.டி.வி. தினகரன் விருத்தாசலம் வழியாக அரியலூர் சென்றார். அவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் அ.தி.மு.க. (அம்மா) அணி மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் விருத்தாசலம் பாலக்கரையில் குவிந்தனர்.
டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள் பாலக்கரை பகுதியில் குவிந்ததால் அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க எம்.ஜி.ஆர். சிலை அருகே 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.






