search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தனூர் அணை நீர்மட்டம் 73.20 அடியாக உயர்ந்தது: விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    சாத்தனூர் அணை நீர்மட்டம் 73.20 அடியாக உயர்ந்தது: விவசாயிகள் மகிழ்ச்சி

    தென் பெண்ணை ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், சாத்தனூர் அணை நீர் மட்டம் உயர்ந்துள்ளது. சாத்தனூர் அணைக்கு தொடர்ந்து நீர் வருவதால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    தண்டராம்பட்டு:

    தென்பெண்ணையாற்று படுகை மற்றும் பெங்களூரு பகுதியில் பெய்த தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அந்த அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இந்த நீர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையை நேற்று முன்தினம் வந்தடைந்தது. தாசில்தார் சஜேஸ் பாபு தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.

    மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர் வரத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். நீர் வரத்து அதிகரித்ததால், தென்பெண்ணையாற்றை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    110 அடியாக உள்ள சாத்தனூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 512 கன அடி நீர் வந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் காலை 72.45 அடியாக நீர் மட்டம் இருந்தது.

    நேற்று காலை 72.55 அடியாக உயர்ந்தது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், இன்று காலை நிலவரப்படி, 1 அடி வரை உயர்ந்து, 73.20 அடியாக சாத்தனூர் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    அதேபோல், 989 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இருப்பு, தற்போது 1000 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. இதற்கிடையே, தென்பெண்ணையாற்றில் 512 அடியாக இருந்த நீர் வரத்து, தற்போது 451 அடி வரை குறைந்துள்ளது.

    ஆனாலும், எதிர்வரும் நாட்களில் அணையின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. சாத்தனூர் அணைக்கு தொடர்ந்து நீர் வருவதால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணையை போல், மேலும் 3 பெரிய அணைகள் உள்ளன. அந்த அணைகளில் உள்ள நீர் இருப்பு விபரம்:

    செங்கம் தாலுகாவில் உள்ள குப்பனத்தம் அணை மொத்த உயரம் 59 அடி. தற்போதைய நீர் மட்டம் 51.17 அடியாகவும், கொள்ளளவு 510 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

    கலசப்பாக்கம் தாலுகா மிருகண்டா அணையின் மொத்த உயரம் 23 அடி. தற்போதைய நீர் மட்டம் 6.23 அடியாகவும், கொள்ளளவு 16 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

    போளூர் தாலுகாவில் உள்ள செண்பகத்தோப்பு மொத்த உயரம் 62 அடி. தற்போது அணையின் நீர் மட்டம் 44.61 அடியாகவும், கொள்ளளவு 132 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

    Next Story
    ×