search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தியேட்டர்கள் மீதான கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
    X

    தியேட்டர்கள் மீதான கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

    தியேட்டர்கள் மீதான கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு அவை அமைந்துள்ள இடங்களைப் பொறுத்து அதிகபட்சமாக 35 சதவீத வரை கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டு வந்தது. பொருட் கள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கேளிக்கை வரி தானாகவே செயலிழந்திருக்க வேண்டும்.

    நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் ஏற்படும் இழப்பு ஜி.எஸ்.டி வரியில் மாநிலத்துக்கு கிடைக்கும் பங்கிலிருந்து ஈடுகட்டப்படும். இதை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன.

    ஆனால், தமிழக அரசு மட்டும் இந்த வரியை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்திருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் இவ்வாறு செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது.

    கேளிக்கை வரி மூலமான வருமானம் தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிகப்பெரிய வருவாய் ஆதாரம் ஆகும். ஆனால், புதிய வரிவிதிப்பின் மூலம் கேளிக்க வரி ரத்து செய்யப்படும் பட்சத்தில் அதை மாநில அரசு தான் அதன் நிதி ஆதாரங்களில் இருந்து ஈடு செய்ய வேண்டுமே தவிர கூடுதலாக இன்னொரு வரி விதித்து திரையரங்குகள் மீதும், படம் பார்க்கும் மக்கள் மீதும் தேவையற்ற சுமையை சுமத்தக்கூடாது.

    உள்ளாட்சி அமைப்பு களின் வரி வருவாய் மீது இவ்வளவு அக்கறை காட்டும் தமிழக அரசு, இதற்கு முன், தமிழில் பெயர் சூட்டப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்டதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு இன்று வரை ஈடு செய்யப்படவில்லை.

    திரைத் துறையில் லட்சக்கணக்கான தினக் கூலித்தொழிலாளர்கள் உள்ளனர். இப்போதே திரையரங்குகளில் வார இறுதி நாட்களைத் தவிர மற்ற நாட்களில் கூட்டம் வருவதில்லை. புதிய வரி விதிப்பால் திரையரங்குகளும், திரைத்துறையும் பாதிக்கப்பட்டால் கூலித் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு திரையரங்குகள் மீதான கேளிக்கை வரி விதிப்பை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    இப்போது எழுந்துள்ள சிக்கலுக்கு கேளிக்கை வரி ரத்து மட்டும் தான் தீர்வே தவிர, கட்டண உயர்வு போன்ற நடவடிக்கைகள் தீர்வல்ல. அது திரையரங்குகள் மற்றும் திரைத்துறையின் அழிவுக்கு வழி வகுக்கும். எனவே, கேளிக்கை வரி விதிப்பை மட்டும் தான் திரைத்துறையினர் வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×