என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் விவசாயிகள் ஒற்றை காலில் நின்று போராட்டம் நடத்தியபோது எடுத்தபடம்.
    X
    கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் விவசாயிகள் ஒற்றை காலில் நின்று போராட்டம் நடத்தியபோது எடுத்தபடம்.

    நிலுவை தொகை வழங்க கோரி கரும்பு விவசாயிகள் ஒற்றை காலில் நின்று அரை நிர்வாண போராட்டம்

    மணல்மேடு அருகே கரும்புக்கான நிலுவை தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் அரை நிர்வாணமாக ஒற்றை காலில் நின்று போராட்டம் நடத்தினர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம், மணல்மேடு அருகே தலை ஞாயிறு கிராமத்தில் என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நிர்வாக சீர்கேட்டின் காரணமாக சர்க்கரை ஆலை சரிவர இயங்காமல் உள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கரும்புக்கான தொகையை ஆலை நிர்வாகத்தினர் வழங்கவில்லை.

    இதுபோன்ற சூழ்நிலையால் இந்த ஆண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை முற்றிலும் இயக்கப்படாமல் முடங்கி கிடக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கரும்புக்கான நிலுவை தொகை வழங்காததை கண்டித்து கடந்த 6-ந் தேதியில் இருந்து கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் காசிநாதன் தலைமையில் விவசாயிகள், கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் காத்திருப்பு போராட்டம், கஞ்சி தொட்டி அமைத்து போராட்டம், அரை நிர்வாணமாக வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம், எலியை வாயில் கவ்வி போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 20-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் அரை நிர்வாணமாக ஒற்றை காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காலம் தாழ்த்தாமல் கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் 110 விதியின் கீழ் சர்க்கரை ஆலையின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக வழங்க வேண்டும், கரும்புக்கான நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×