search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது

    • கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

    இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. மேலும் குடிநீர் தேவைக்காக முதலில் வினாடிக்கு 500 கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது வினாடிக்கு 250 கனஅடியாக குறைக்கப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனாலும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்தது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.03 அடியை தொட்டது. அணைக்கு வினாடிக்கு 1978 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×