என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அபிஷேக் சர்மாவை தக்கவைக்க வேண்டும் என கெஞ்சினேன்: ரிக்கி பாண்டிங்
- டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன் குவிப்பவராக இருப்பார்.
- இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மா முக்கியமானவர் என்றார்.
மும்பை:
டி20 உலகக் கோப்பை வரும் 7-ம் தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் இந்தியா பிப்ரவரி 7-ம் தேதி மும்பையில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிக ரன்கள் குவிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார். ஐ.சி.சி. ரிவ்யூ நிகழ்ச்சியில் ரிக்கி பாண்டிங் பேசியதாவது:
அபிஷேக்கின் முதல் ஐபிஎல் பயிற்சியாளர் நான்தான். 17 வயதில் அறிமுகமாகி முதல் பந்திலேயே நேராக பவுலர் தலைக்கு மேல் பவுண்டரி விளாசினார். அந்த கிளாசிக்கல் ஸ்ட்ரெயிட் பேட் ஷாட் இவர் சாதாரண வீரர் அல்ல என்பதை எனக்குக் காட்டியது.
அவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலேயே தக்கவைக்க வேண்டும் என உரிமையாளர்களிடம் கெஞ்சிக் கூத்தாடினேன். அவரை டிரேட் செய்ய வேண்டாம் என பலமுறை சொல்லிப் பார்த்தேன். இவர் ஒரு சூப்பர் ஸ்டார் ஆகப் போகிறார் என அப்போதே தெரிந்தது. இப்போது அதுதான் நடந்திருக்கிறது.
அவர் இந்த 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன் குவிப்பவராக இருப்பார், தொடரிலேயே சிறந்த வீரராகவும் மாறக்கூடிய அளவுக்கு திறமை கொண்டவர். அவர் அப்படி விளையாடினால் இந்திய அணியை தோற்கடிப்பது இன்னும் கடினமாகும். இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் முக்கியமானவர் என தெரிவித்தார்.






