என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பைசலாபாத்தில் 17 வருடத்திற்குப் பிறகு நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டி
- 2008 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் ஒருநாள் போட்டியில் விளையாடியது.
- அதன்பிறகு நாளை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட இருக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளது. 2008 ஆம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் பேருந்தில் செல்லும்போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு முன்னதாக இக்பால் மைதானத்தில் பாகிஸ்தான்- வங்கதேசம் இடையிலான ஒருநாள் போட்டி நடைபெற்றது.
பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் செல்ல தயக்கம் காட்டின. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்களது போட்டிகளை பாகிஸ்தான் விளையாடியது. சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு படிப்படியாக பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.
கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, முல்தானில் போட்டிகள் நடைபெற்றன. ஆனால் பைசலாபாத்தில் போட்டிகள் நடத்தப்படவில்லை. மோசமான கட்டமைப்பு வசதிகள் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. சில வருடங்களாக கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை பைசலாபாத் இக்பால் மைதானத்தில் நடக்கிறது.
தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமன் பெற்றது. டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 எனக் கைப்பற்றியது. இந்த நிலையில்தான் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.






