என் மலர்
கிரிக்கெட் (Cricket)

'ஜோ ரூட்டை வீழ்த்தியது தொடரின் சிறந்த பந்து': ஆகாஷ் தீப்புக்கு டெண்டுல்கர் புகழாரம்
- ஜோரூட்டை அவர் அவுட் செய்த பந்து தொடரின் சிறந்த பந்தாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.
- ஜான்டி ரோட்சை போல முகமது சிராஜ் கேட்ச் பிடித்ததை ரசித்தேன்.
மும்பை:
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு கேப்டன் சுப்மன்கில்லின் அபாரமான பேட்டிங்கும் (430 ரன்), ஆகாஷ்தீப், முகமது சிராஜ் (17 விக்கெட்) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சும் காரணமாக இருந்தது.
இந்த டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய (முதல் இன்னிங்சில் 4, 2-வது இன்னிங்சில் 6) ஆகாஷ் தீப்பை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன்கில் கில்லுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இந்திய அணியை அபாரமான வெற்றிக்கு அழைத்து சென்ற அவரை பாராட்டுகிறேன். 2-வது இன்னிங்சில் ரிஷப்பண்ட், கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.
இந்த டெஸ்டில் இந்திய அணி இங்கிலாந்தை முற்றிலுமாக வெளியேற்றிய அணுகுமுறை நன்றாக இருந்தது. பந்து வீச்சாளர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்கள். அவர்கள் பந்து வீசிய நேர்த்தியை சொல்ல தேவையில்லை. ஆகாஷ்தீப் ஒரு தனித்துவமான பந்து வீச்சாளர். ஜோரூட்டை அவர் அவுட் செய்த பந்து தொடரின் சிறந்த பந்தாக இருக்கும் என்பது எனது கருத்தாகும். ஜான்டி ரோட்சை போல முகமது சிராஜ் கேட்ச் பிடித்ததை ரசித்தேன்.
இவ்வாறு டெண்டுல்கர் கூறி உள்ளார்.






