என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நான் விரும்பும் வீரர்... தனது சாதனையை முறியடித்த இந்திய வீரரை புகழ்ந்த அப்ரிடி
- சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியவை.
- நான் எப்போதும் விரும்பும் ஒரு வீரர் இந்த சாதனையை முறியடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ராஞ்சியில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 3 சிக்சர் பறக்க விட்டார். இதையும் சேர்த்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சிக்சர் எண்ணிக்கை 352 ஆக உயர்ந்தது.
இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் விரட்டிய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். கடந்த 15 ஆண்டுகளாக இச்சாதனை பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி (351 சிக்சர்) வசம் இருந்தது. அவரை ரோகித் சர்மா முந்தினார்.
38 வயதான ரோகித் சர்மா இதுவரை 277 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 33 சதங்கள் உள்பட 11,427 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 352 சிக்சரும், 1,071 பவுண்டரிகளும் அடங்கும்.

இந்நிலையில் நான் எப்போதும் விரும்பும் ஒரு வீரர் இந்த சாதனையை முறியடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியவை. இது இப்போது சிறப்பாக உள்ளது. நான் எப்போதும் விரும்பும் ஒரு வீரர் இந்த சாதனையை முறியடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். டெக்கான் சார்ஜர்ஸ் பயிற்சி செஷன்களின் போது, நான் அவரது பேட்டிங்கைப் பார்த்தேன். அவரது பேட்டிங் திறன் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு நாள் ரோகித் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று எனக்குத் தெரியும், அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்துள்ளார்.
இவ்வாறு அப்ரிடி கூறினார்.






