search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    100-வது டெஸ்ட்: கோலியின் பேனர்கள் மைதானத்தின் சுற்றுபுறங்களில் வைக்கப்படும்- பஞ்சாப் கிரிக்கெட் சங்கம்

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
    மொகாலி:

    இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது. இது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி பங்கேற்கும் 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த டெஸ்ட் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது. 

    இதுகுறித்து பஞ்சாப் கிரிக்கெட் சங்க பொருளாளர் ஆர்.பி.சிங்லா கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலின்படி டெஸ்ட் போட்டிக்கான பணியில் ஈடுபடுபவர்களை தவிர போட்டியை நேரில் காண பொதுவான பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். மொகாலி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கொரோனா தொற்று பாதிப்புகள் இன்னும் அதிகமாக உள்ளன. எனவே நாங்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகள் அனைத்தையும் பின்பற்றி போட்டியை நடத்துவதே நல்லது. 
    ஏறக்குறைய 3 ஆண்டுக்கு பிறகு மொகாலியில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை நேரில் காணும் வாய்ப்பை ரசிகர்கள் தவறவிடுகிறார்கள். 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராட்கோலியின் பேனர்கள் மைதானத்தின் சுற்றுபுறங்களில் வைக்கப்படும். அத்துடன் இந்த போட்டியின் போது விராட்கோலிக்கு பாராட்டு விழா நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.’ என்றார். அதே சமயம் மார்ச் 12-ந் தேதி பெங்களூருவில் தொடங்கும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை (பகல்-இரவு) காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க கர்நாடக கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

    இதற்கிடையே, மார்ச் 26-ந்தேதி மராட்டிய தலைநகர் மும்பையில் தொடங்கும் 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ‘தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதை பார்க்கையில் ஐ.பி.எல். போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்க முடியும்’ என்று மராட்டிய மாநில விளையாட்டு துறை மந்திரி சுனில் கேதார் நேற்று நம்பிக்கை தெரிவித்தார். எவ்வளவு ரசிகர்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மராட்டிய அரசின் வழிகாட்டுதல் நடைமுறையின்படி 40 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    Next Story
    ×