search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரி‌ஷப்பண்ட் - ரோகித் சர்மா
    X
    ரி‌ஷப்பண்ட் - ரோகித் சர்மா

    ரி‌ஷப்பண்ட் தொடக்க வீரராக களமிறங்கியது குறித்து ரோகித் சர்மா விளக்கம்

    பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இப்படி ஒரு அபாரமான பந்துவீச்சை நான் பார்த்ததில்லை என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    அகமதாபாத்:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்தது.

    சூர்யகுமார் யாதவ் 64 ரன்னும் (5 பவுண்டரி), லோகேஷ் ராகுல் 48 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அல்ஜாரி ஜோசப், ஓடியன் சுமித் தலா 2 விக்கெட்டும், கேமர் ரோச், ஹோல்டர், ஹூசைன், பேபியன் ஆலம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவர்களில் 193 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 44 ரன்னில் வெற்றி பெற்றது.

    புரூக்ஸ் அதிகபட்சமாக 44 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), அகீல் ஹூசைன் 34 ரன்னும் (3 பவுண்டரி), ஓடியன் சுமித் 20 பந்தில் 24 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    பிரசித் கிருஷ்ணா மிகவும் அபாரமாக பந்து வீசி 12 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். 6- வது போட்டியில் ஆடிய அவருக்கு இது சிறந்த பந்துவீச்சாகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக புனே மைதானத்தில் 54 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது.

    ‌ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், முகமது சிராஜ், யசுவேந்திர சாஹல், வாஷிங் டன் சுந்தர், தீபக்ஹூடா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    நேற்றைய போட்டியில் ரோகித் சர்மாவுடன் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரி‌ஷப்பண்ட் தொடக்க வீரராக களம் இறங்கினார். இந்த பரிசோதனை தோல்வியில் முடிந்தது.

    மிடில் ஆர்டரில் விளையாடும் ரி‌ஷப்பண்ட் 34 பந்துகளை சந்தித்து 18 ரன்களே எடுத்தார். இதேபோல ரோகித் சர்மாவும் எளிதில் ஆட்டம் இழந்தார். தொடக்க ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

    வழக்கமாக தொடக்க வரிசையில் ஆடும் தவான் உடல் தகுதியுடன் இல்லை. மயங்க் அகர்வால் தொடக்க வரிசையில் ஆடக்கூடியவர். இதேபோல 4-வது வரிசையில் களம் இறங்கிய லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக ஆடக்கூடியவர்.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்று விட்டதால் தொடக்க வீரர் வரிசை குறித்து விவாதிக்கப்படவில்லை. ஆனாலும் கவாஸ்கர் இதுகுறித்து விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில் ரி‌ஷப்பண்ட் தொடக்க வீரரராக விளையாடியது தற்காலிக பரிசோதனையே அது நிரந்தரம் இல்லை என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மாறுபட்ட முறையில் சிந்தனை செய்து ரி‌ஷப்பண்ட் தொடக்கவீரராக களம் இறக்கப்பட்டார். இதை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றிருப்பார்கள். இது தற்காலிக முயற்சியே நிரந்தரமானது அல்ல. அடுத்த போட்டியில் ஷிகர் தவான் விளையாடுவார். ஒரே ஒரு போட்டிக்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. சிறந்த உணர்வாக கருதுகிறேன். அவர்கள் சில வகைகளில் சவால் கொடுத்தனர். லோகேஷ் ராகுலும், சூர்யகுமார் யாதவும் நல்ல பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர். இருவரிடமும் நல்ல முதிர்ச்சி தெரிந்தது.

    அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இப்படி ஒரு அபாரமான பந்துவீச்சை நான் பார்த்ததில்லை. 6-வது பந்து வீச்சாளராக தீபக் கூடா பயன்படுத்தப்பட்டார். எப்போதுமே பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது அவசியமானது.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இருந்தது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
    Next Story
    ×