search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரா ஒலிம்பிக், உலக சதுரங்கத்தில் பட்டம் வென்ற 15 விளையாட்டு வீரர்களுடன் முக ஸ்டாலின்
    X
    பாரா ஒலிம்பிக், உலக சதுரங்கத்தில் பட்டம் வென்ற 15 விளையாட்டு வீரர்களுடன் முக ஸ்டாலின்

    பட்டம் வென்ற 15 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.4 கோடி ஊக்கத்தொகை - மு.க.ஸ்டாலின் வழங்கினார்

    பாராலிம்பிக் 2020 போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற டி.மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பாராலிம்பிக் போட்டிகள், ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாட் போட்டிகள் மற்றும் பல்வேறு சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வென்ற 15 தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஊக்கத் தொகையாக மொத்தம் 3 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி சிறப்பித்தார்.

    ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர்களுக்கான பாராலிம்பிக் 2020 போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில், ஜி-63 பிரிவில், 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்ற டி.மாரியப்பன் உயரிய ஊக்கத் தொகையாக 2 கோடி ரூபாய்க்கான காசோலை.

    2020-ம் ஆண்டு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் மூலம் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய அணியின் சார்பாக கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், விஆர். அரவிந்த் சிதம்பரம், ஆர். பிரக்ஞானந்தா மற்றும் ஆர்.வைஷாலி ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் மேற்கண்ட போட்டியின் அணியின் பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு 12 லட்சம் ரூபாய், என மொத்தம் 92 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்.

    டி.மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.

    2021-ம் ஆண்டு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் மூலம் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய அணியின் சார்பாக கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், பா. அதிபன், ஆர்.பிரக் ஞானந்தா, ஆர். வைஷாலி மற்றும் பா.சவிதா ஸ்ரீ ஆகியோருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளும் மற்றும் மேற்கண்ட போட்டியின் ஆண்கள் அணியின் பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பெண்கள் அணியின் பயிற்சியாளர் மோ.ஷ்யாம் சுந்தருக்கு 3 லட்சம் ரூபாய், என மொத்தம் 57 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்.

    கடந்த 4.3.2019 முதல் 15.3.2019 வரை கஜகஸ்தான் நாட்டின், அஸ்தானா நகரில் நடைபெற்ற பிடே உலக சதுரங்க குழு வாகையர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதற்காக பா. அதிபனுக்கு 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை. 2019-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றப.இனியன், 2019-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ஸ்ரீஜா சேஷாத்திரி, 2020ஆம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டங்கள் வென்ற வி.வர்ஷினி மற்றும் பி.வி.நந்திதா ஆகியோருக்கு தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்.

    2020-ஆம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற வி.எஸ். ரத்தன்வேல் மற்றும்மு.பிரனேஷ், 2021-ம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற செல்வி பா. சவிதா ஸ்ரீ ஆகியோ ருக்கு தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் என மொத்தம் 3 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை 15 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

    இந்த நிகழ்வின் போது, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலாளர்- உறுப்பினர் செயலர் ரமேஷ் சந்த் மீனா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    இதையும் படியுங்கள்...லக்கிம்பூர் வன்முறை சம்பவம்: நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

    Next Story
    ×