search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் கைப்பற்றியதை கொண்டாடும் இந்திய வீரர்கள்
    X
    விக்கெட் கைப்பற்றியதை கொண்டாடும் இந்திய வீரர்கள்

    கடைசி போட்டியில் அபார வெற்றி... இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி அதிகபட்சமாக 80 ரன்கள் விளாசினார்.
    அகமதாபாத்:

    இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இதில், முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது, 4-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

    இந்த நிலையில் தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி 20 ஓவர் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ரோகித் சர்மா, கேப்டன் கோலி இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்கள் குவித்தது. 

    அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல்  80 ரன்கள் விளாசினார். ரோகித் சர்மா 64 ரன்கள் குவித்தார். சூர்ய குமார் யாதவ் 32 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தனர்.

    இதையடுத்து 225 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே தடுமாறியது. துவக்க வீரர் ஜேசன் ராய் ரன் எதுவும் எடுக்காமல் புவனேஷ்வர் குமாரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர் ஜோஸ்பட்லர்-டேவிட் மாலன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் 34 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதேபோல் டேவிட் மாலன், 46 பந்துகளில் 68 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் நிலைக்காததால் ரன்ரேட் வெகுவாக சரிந்தது. 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என கைப்பற்றியது.

    இந்த போட்டியில், இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார்  2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் துவக்க வீரர்கள் இருவரையும் வெளியேற்றினார். ஷர்துல் தாக்கூர் ஒரே ஒவரில் 2 முக்கிய விக்கெட்டுகள் உள்ளிட்ட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழக வீரர் நடராஜன், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் ஒரு விக்கெட் எடுத்தனர்.
    Next Story
    ×