என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி வீரர்கள்
    X
    இந்திய அணி வீரர்கள்

    சேப்பாக்கத்தில் 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் - இங்கிலாந்துக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?

    இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

    சென்னை;

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப் பாக்கம் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.

    முதல் டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். இதனால் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது. இதற்கு இந்தியா 2-வது டெஸ்டில் பதிலடி கொடுக்குமா ? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற 2 டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி விராட் கோலி அணிக்கு இருக்கிறது. 3 வது டெஸ்ட் பகல் இரவாக நடைபெறுவதால் இந்த டெஸ்டில் வெற்றி பெறுவது அவசியமானதாகும். இங்கிலாந்தை பழி தீர்த்து தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது

    சொந்த மண்ணில் 4 ஆண்டுகளுக்கு பிறகும், சென்னையில் 21 ஆண்டுகளுக்கு பிறகும் இந்திய அணி தோற்றதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். பேட்டிங்கும், பந்துவீச்சும் மிகவும் மோசமாக இருந்தது.

    இதனால் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படும். முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அக்‌ஷர் படேல் குணமடைந்துள்ளார்.

    இதையடுத்து அவர் 2-வது டெஸ்ட் போட்டிக்கான தேர்வில் இடம் பெற்றுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. முதல் டெஸ்டில் அணியில் சேர்க்கப்பட்ட ‌ஷபாஸ் நதீம், ராகுல் சாகர் ஆகியோர் திரும்ப பெறப்பட்டுள்ளனர். இதனால் நளைய டெஸ்டில் அக்‌ஷர் படேல் விளையாடுவார்.

    வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டுகளை கைப்பற்றாவிட்டாலும் பேட்டிங்கில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம். ஒருவேளை அவர் நீக்கப்பட்டால் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படுவார்.

    சுழற்பந்தில் அஸ்வின் ஒருவரே நேர்த்தியாக பந்து வீசுகிறார். அவர் கடந்த டெஸ்டில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார். வேகப்பந்தில் மாற்றம் இருக்காது. பும்ராவும், இஷாந்த் சர்மாவும் தொடர்ந்து இடம்பெறுவார்கள்.

    மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்த பிறகு ரகானே இதுவரை நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதேபோல ரோகித் சர்மா கடந்த 3 டெஸ்டிலும் சேர்த்து 147 ரன்களே எடுத்துள்ளார். இதனால் இருவரும் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    கேப்டன் விராட் கோலி, புஜாரா, சுப்மன்கில் , ரி‌ஷப்பண்ட் ஆகியோர் மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் முதல் இன்னிங்சில் அதிக அளவில் ரன்களை குவிக்க முடியும்.

    இந்த டெஸ்டிலும் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 வது டெஸ்டில் ஆடுகளம் மாற்றி அமைக்கப்படுகிறது.

    இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கிறது. கேப்டன் ஜோ ரூட் அந்த அணியின் பேட்டிங்கில் முதுகெலும்பாக இருக்கிறார்.

    அவர் கடந்த 3 டெஸ்டிலும் இரண்டு இரட்டை சதம் உள்பட 3 சதம் அடித்து முத்திரை பதித்து உள்ளார். முதல் டெஸ்டில் ஜோ ரூட் மொத்தம் 258 ரன்கள் குவித்தார்.அவர் தனது ஆதிக்கத்தை நீட்டித்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளார். இந்திய பவுலர்களுக்கு அவர் தொடர்ந்து சவாலாக விளங்குவார்.

    இதுதவிர பென் ஸ்டோக்ஸ், டாம் சிப்லி ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். விக்கெட் கீப்பர் பட்லருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால் பென் போக்ஸ் இடம்பெறுகிறார்.

    முன்னணி வேகப்பந்து வீரரான ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக நாளைய டெஸ்டில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பிராட் அல்லது கிறிஸ் வோக்ஸ் இடம்பெறலாம். ஆண்டர்சன், டாம் பெஸ், ஜேக் லீச் ஆகியோர் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

    இரு அணிகளும் மோதிய 123 டெஸ்டில் இந்தியா 26ல், இங்கிலாந்து 48ல் வெற்றி பெற்றுள்ளன.49 டெஸ்ட் டிரா ஆனது.

    நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×