என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாம்  சிப்லி, ஜோ ரூட்
    X
    டாம் சிப்லி, ஜோ ரூட்

    சேப்பாக்கம் டெஸ்ட்: கடைசி ஓவரில் விக்கெட் வீழ்த்திய பும்ரா- முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 263/3

    ஜோ ரூட் 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாச, கடைசி ஓவரில் பும்ரா விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் சேர்த்துள்ளது.
    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 13 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் சர்வதேச போட்டி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு காரணமாக இந்த போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள், 2 வேகப்பந்து வீரர்கள் (பும்ரா, இஷாந்த் சர்மா), 3 சுழற்பந்து வீரர்களுடன் (அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், சாபாஷ் நதீம்) களம் இறங்கியது.

    இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பெறாத பென் ஸ்டோக்ஸ், ஜாஃப்ரா ஆர்ச்சர், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு மீண்டும் திரும்பினார்கள்.

    100-வது டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோரூட் டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ரோரி பேர்ன்சும், சிப்லியும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இங்கிலாந்து அணி நிதானமாக ஆடியது. இதனால் 19.3 ஓவர்களில் அந்த அணி 50 ரன்னை தொட்டது.

    அந்த அணியின் தொடக்க ஜோடியை அஷ்வின் பிரித்தார். ரோரி பேர்ன்ஸ் 33 ரன்னில் அவரது பந்தில் ரி‌ஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 63 (23.5 ஓவர்) ஆக இருந்தது. அடுத்து வந்த லாரன்ஸ் விக்கெட்டை பும்ரா எளிதில் வீழ்த்தினார். அவர் ரன் எதுவும் எடுக்கவில்லை. 63 ரன்னில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை இழந்தது.

    மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்திருந்தது. சிப்லி 26 ரன்னுடனும், ஜோரூட் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. சிப்லி, ஜோ ரூட் அபாரமாக விளையாடினர்.  இவர்கள் இருவரையும் பிரிக்க இந்தியாவின் ஐந்து பந்து வீச்சாளர்களும் திணறினார்கள்.
    ஜோ ரூட்

    டாம் சிப்லி 159 பந்தில் அரைசதம் அடித்தார். இருவரும் 2-வது செசன் முழுவதும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். தேனீர் இடைவேளையின்போது இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. டாம் சிப்லி 53 ரன்களுடனும், ஜோ ரூட் 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஜோ ரூட் 110 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பின் ஜோ ரூட் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். இதனால் இங்கிலாந்து அணியின் ரன் விகிதம் உயர ஆரம்பித்தது.

    ஜோரூ ரூட் சிறப்பாக விளையாடி டாம் சிப்லி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜோ ரூட் 164 பந்தில் சதம் அடித்தார். 51 ரன்னில் இருந்து 100 ரன்னைத்தொட ஜோ ரூட்டுக்கு 54 பந்துகளே தேவைப்பட்டது. 100-வது போட்டியில் சதம் அடித்து ஜோ ரூட் அசத்தினார்.

    80 ஓவர்கள் முடிந்து புதிய பந்தை எடுத்த பின்னரும், இந்திய பந்து வீச்சாளர்களால் நெருக்கடி கொடுக்கமுடியவில்லை.

    கடைசி ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை யார்க்கராக வீசினார். பேட்டால் எதிர்கொள்ள முடியாமல் போனதால் டாம் சிப்லி எல்.பி.டபிள்யூ ஆனார். அவர் 286 பந்தில் 87 ரன்கள் அடித்தார். டாம் சிப்லி - ஜோ ரூட் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது.

    டாம் சிப்லி ஆட்டமிழந்ததுடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜோ ரூட் 128 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்திய அணி தரப்பில் பும்ரா 2 விக்கெட்டும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    Next Story
    ×