என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி வீரர்கள்
    X
    இந்திய அணி வீரர்கள்

    ஆஸ்திரேலியாவை இந்திய அணி ‘ஒயிட்வாஷ் செய்யுமா? நாளை கடைசி 20 ஓவர் ஆட்டம்

    சிட்னியில் நாளை நடக்கவுள்ள 3-வது 20 ஓவர் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.

    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் 66 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 51 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. கான்பெராவில் நடந்த 3-வது போட்டியில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது. கான்பெராவில் நடந்த முதல் ஆட்டத்தில் 11 ரன்னிலும், சிட்னியில் நடந்த 2-வது போட்டியில் 6 விக்கெட்டிலும் வெற்றி பெற்றது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சிட்னியில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று ஒயிட்வாஷ் செய்யும் ஆர்வத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முழுமையாக தொடரை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி தொடர்ந்து 3 ஆட்டங்களில் (ஒருநாள் போட்டி 1 + 20 ஓவர் ஆட்டம் 2) வெற்றி பெற்றுள்ளது. இதனால் வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடுவார்கள். மேலும் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது.

    லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி, ஹர்த்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கிலும், தமிழக வீரர் டி. நடராஜன், யசுவேந்திர சாகல், தீபக் சாகர் ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஐ.பி.எல். அனுபவம் இந்திய வீரர்களுக்கு 20 ஓவர் தொடரில் மிகவும் உதவியாக இருக்கிறது.

    20 ஓவர் தொடரை சொந்த மண்ணில் இழந்த ஆஸ்திரேலியா நாளைய கடைசி போட்டியிலாவது வென்று ஆறுதல் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த அணி வீரர்கள் முழுமையாக தொடரை இழக்காமல் இருக்கும் வகையில் வெற்றிக்காக மிகவும் கடுமையாக போராடுவார்கள்.

    இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் 22 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 13-ல், ஆஸ்திரேலியா 8-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவி‌ஷன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×