search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டீவ் பக்னர், இர்பான் பதான்
    X
    ஸ்டீவ் பக்னர், இர்பான் பதான்

    ஏழு தவறுகள்?: என்னிடம் விளையாடுகிறீர்களா?- இர்பான் பதான் விமர்சனம்

    சிட்னி டெஸ்டில் இரண்டு தவறுகள் அல்ல, ஏழு தவறுகள்? என்னிடம் விளையாடுகிறீர்களா? என ஸ்டீவ் பக்னரை இர்பான் பதான் விமர்சனம் செய்துள்ளார்.
    2008-ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் நான் செய்த இரண்டு தவறுகளால் இந்தியா தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று நடுவர் ஸ்டீவ் பக்னர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் ஏழு தவறுகள்? என்னிடம் விளையாடுகிறீர்களா? என்று இர்பான் பதான் ஸ்டீவ் பக்னரை விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து இர்பான் பதான் கூறுகையில ‘‘உங்களது எவ்வளவு தவறுகளை ஒத்துக் கொள்கிறீர்கள் என்பது பெரிய விஷயம் அல்ல. ஏனெனில் என்ன நடந்ததோ, அது நடந்த விட்டது. நாங்கள் அந்த டெஸ்டை இழந்து விட்டோம்.

    நான் ஆஸ்திரேலியாவில் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி எனக்கு ஞாபகம் இருக்கிறது. 2003-ல் என்னுடைய அறிமுக டெஸ்ட். 21 வருடத்திற்குப்பிறகு அடிலெய்டில் இந்தியா வெற்றி பெற்றது. நடுவர் தவறால் ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வி? தற்போது அதுகுறித்து நடுவர் என்ன சொன்னாலும் எந்த வித்தியாசமும் ஏற்படப்போவது இல்லை.

    ஒரு கிரிக்கெட்டராக பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் சில தவறான முடிவுகள் கிடைத்திருக்கும். அப்போது விரக்தி அடைந்தாலும் பின்னர் அது மறக்கப்பட்டு விடும். ஆனால் சிட்னி டெஸ்டில் ஒரு தவறு அல்ல. ஏழு தவறுகள் நடந்தன. இதனால் நாம் போட்டியை இழந்தோம். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. சைமண்ட்ஸ் மூன்று முறை ஆட்டமிழந்தார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை.

    சைமண்ட்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நாங்கள் 122 ரன்னில் தோல்விடைந்தோம். ஒரு தவறு அவருக்கு எதிராக சரிசெய்யப்பட்டிருந்தால் கூட, நாங்கள் அந்த போட்டியில் வெற்றி பெற்றிருப்போம். இது வெறும் விரக்தியல்ல. முதல் முறையாக இந்திய வீரர்கள் கோபப்பட்டதை நான் பார்த்திக்கிறேன். நடுவர்கள் ஒரு காரணத்திற்காக வேண்டுமேன்றே செய்கிறாரகள் என்று ரசிகர்கள் நினைக்கத் தொடங்கினர்.

    சரி, கிரிக்கெட்டில் ஒரு தவறு நடக்கும். அதை கடந்த விட தோன்றும். ஆனால் ஏழு தவறுகள்? என்னிடம் விளையாடுகிறீர்களா?. அது எங்களுக்கு நம்பமுடியாததாக இருந்தது’’ என்றார்.

    இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 134 ரன்களுடன் தத்தளித்தது. அப்போது சைமன்ட்ஸ் 30 ரன்னில் இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். ஆனால் நடுவர் பக்னர், பந்து பேட்டில் உரசவில்லை என்று கூறி விரலை உயர்த்த மறுத்தார். டி.வி. ரீப்ளேயில் பந்து பேட்டின் விளிம்பில் உரசியது தெரிந்தது. அந்த சமயம் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. நடுவரின் கருணையால் கண்டம் தப்பிய சைமண்ட்ஸ் 162 ரன்கள் குவித்ததோடு தங்கள் அணி 463 ரன்களை எட்டுவதற்கும் வழிவகுத்தார். இந்திய அணியும் முதல் இன்னிங்சில் 532 ரன்கள் குவித்தது.

    பிறகு 5-வது நாளில் இந்திய அணிக்கு 72 ஓவர்களில் 333 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டிரா செய்யும் முனைப்புடன் ஆடிய இந்திய அணி 33 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்திருந்தபோது, ராகுல் டிராவிட்டுக்கு (36 ரன்) தவறான தீர்ப்பை பக்னர் வழங்கினார். அதாவது பேட்டில் படாமல் காலுறையில் பட்டு பிடிக்கப்பட்ட பந்துக்கு கேட்ச் என்று அறிவித்தார். கடைசி வரை போராடிய இந்திய அணி 6 நிமிடம் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் 210 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அந்த டெஸ்டில் தோல்வியை தழுவியது.
    Next Story
    ×