search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2020
    X
    ஐபிஎல் 2020

    ஐபிஎல் போட்டியை எங்கள் நாட்டில் நடத்துங்கள்: விருப்பம் தெரிவித்தது ஐக்கிய அரபு அமீரகம்

    எங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்துங்கள் என்று இலங்கை விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகமும் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ம்தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.

    இதனையடுத்து அதிகாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்ட பிசிசிஐ, ‘‘நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியைவிட தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தினர் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம்’’ எனத் தெரிவித்தது.

    இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐ-க்கு போட்டிகளை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் கூறும்போது ‘‘ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் சர்வதேச அளவில் எங்கும் பயணம் செய்ய முடியாது’’ என்றார்.

    மேலும் ‘‘கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பும் உடல் நலனும் இப்போது முக்கியம். இப்போது உலகமே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது, எனவே இப்போது எந்த முடிவையும் எங்களால் எடுக்க முடியது’’ என்றார்.

    ஏற்கனவே 2014-ம் ஆண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றதன் காரணமாக ஐபிஎல் தொடரின் 20 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×