search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுரேஷ் ரெய்னா
    X
    சுரேஷ் ரெய்னா

    இந்திய அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓரங்கட்டப்பட்டது ஏன்? முன்னாள் தேர்வு குழு தலைவர் விளக்கம்

    இந்திய அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓரங்கட்டப்பட்டது ஏன்? என்பது குறித்து முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியில் நடுவரிசையை வலுப்படுத்தும் வகையில் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வந்த சுரேஷ் ரெய்னா 2018-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு ஓரங்கட்டப்பட்டார். அதன் பிறகு அணியில் இடம் பிடிக்க முடியாமல் போராடி வருகிறார். கடந்த ஆண்டு கால்முட்டி காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்ட ரெய்னா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கால்பதிக்க ஆர்வமுடன் காத்திருந்தார். ஆனால் கொரோனா அச்சத்தால் ஐ.பி.எல். போட்டி தள்ளிபோய் விட்டது.

    33 வயதான ரெய்னா இந்திய அணிக்காக 226 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 5 சதம், 36 அரைசதம் உள்பட 5,615 ரன்கள் சேர்த்துள்ளார். 78 இருபது ஓவர் ஆட்டம், 18 டெஸ்டுகளிலும் ஆடியிருக்கிறார்.

    சில தினங்களுக்கு முன்பு தேர்வாளர்கள் மீது குற்றம் சாட்டிய ரெய்னா, அணியில் இருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்பதை அவர்கள் தெளிவாக விளக்கவில்லை. அத்துடன் சீனியர் வீரர்கள் விஷயத்தில் தேர்வாளர்கள் கூடுதல் பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும். என்னிடம் ஏதாவது குறைபாடு இருந்தால் அதை சுட்டிகாட்டினால் தானே சரி செய்ய முடியும். அது என்னவென்றே தெரியாத போது எப்படி முன்னேற்றம் காண முடியும் என்றும் ரெய்னா கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக 4 ஆண்டுகள் பணியாற்றி சில மாதங்களுக்கு முன்பு பதவிகாலத்தை நிறைவு செய்த முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் ரெய்னா விவகாரம் குறித்து நேற்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    வி.வி.எஸ்.லட்சுமணன் 1999-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் களம் இறங்கி 1,400 ரன்கள் குவித்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்ததோடு அணிக்கும் திரும்பினார். அணியை விட்டு கழற்றி விடும் போது, மூத்த வீரர்களிடம் இருந்து நாங்களும் அதைத் தான் (உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடுவது) எதிர்பார்க்கிறோம். துரதிர்ஷ்டவசமாக சுரேஷ் ரெய்னாவிடம் உள்ளூர் போட்டிகளில் அத்தகைய அபார ரன் குவிப்பை நாங்கள் பார்க்கவில்லை. அதே சமயம் மற்ற இளம் வீரர்கள் முதல்தர போட்டி மற்றும் இந்திய ‘ஏ’ அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உயர்ந்த நிலையை எட்டியிருக்கிறார்கள்.

    தேர்வாளர்கள் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதில்லை என்று அவர் குற்றம் சாட்டியிருப்பது வருத்தம் அளிக்கிறது. தேர்வு கமிட்டி உறுப்பினர்கள் கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை ரஞ்சி ஆட்டங் களை நேரில் பார்த்தார்கள் என்பதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆவணங் களை பார்த்தால் உங்களுக்கு தெரியும்.

    ரெய்னாவை எனது அறைக்கு வரவழைத்து தனிப்பட்டமுறையில் பேசினேன். அப்போது நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்தும், வருங்காலத்தில் இந்திய அணிக்கு திரும்புவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அவரிடம் விளக்கினேன். இத்தகைய முயற்சியை அவர் வெகுவாக பாராட்டி இருந்தார். ஆனால் இப்போது நடந்த சம்பவத்துக்கு நேர்மாறாக அவர் பேசுவது உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது.

    தனிப்பட்ட முறையில் உத்தரபிரதேச அணிக்குரிய 4 ஆட்டங்களை (ரெய்னா விளையாடும் அணி) கான்பூர் மற்றும் லக்னோவில் பார்த்து உள்ளேன். அந்த அணியின் இதர ஆட்டங்களை சக தேர்வாளர்கள் பார்த்து உள்ளனர். பதவி காலத்தில் எங்களது தேர்வு கமிட்டியினர் 200-க்கும் மேற்பட்ட ரஞ்சி ஆட்டங்களை பார்த்து உள்ளனர் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள முடியும். அணியில் சரியாக சோபிக்காமல் ஒரு வீரர் அணியில் இருந்து நீக்கப்படும் போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி இழந்த பார்மை மீட்க வேண்டும். சிறந்த வீரர்களில் ஒருவரான மொகிந்தர் அமர்நாத்தின் கிரிக்கெட் பயணத்தை நீங்கள் திரும்பி பார்த்தால், பல தடவை அணியில் இருந்து நீக்கப்பட்டதையும், பிறகு உள்ளூர் போட்டிகளில் அசத்தி வலுவாக மீண்டு வந்ததையும் அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு எம்.எஸ்.கே. பிரசாத் கூறினார்.

    சுரேஷ் ரெய்னா 2018-19-ம் ஆண்டு ரஞ்சி சீசனில் 5 ஆட்டங்களில் விளையாடி 2 அரைசதம் உள்பட 243 ரன்கள் எடுத்தார். இதேபோல் கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக 17 ஆட்டங்களில் 383 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×