என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும்: வீரர்- வீராங்கனைகள் வலியுறுத்தல்

    கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று வீரர், வீராங்கனைகள் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலை வலியுறுத்தி உள்ளனர்.
    லாசானே:

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 8 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த உயிர்க்கொல்லி வைரசுக்கு பலியாகி உள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா வைரசால் உலகம் முழுக்க பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல விளையாட்டுத் துறையையும் பெரிய அளவில் பாதித்துள்ளது.

    இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 15-ந் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந் தேதிக்கு பிறகு அந்த போட்டி நடைபெறுமா என்ற நிச்சயமற்ற நிலை உள்ளது. இந்த போட்டி ரத்தானால் ஆயிரக்கணக்கில் இழப்பு ஏற்படும்.

    இதேபோல சர்வதேச அளவில் கால்பந்து, டென்னிஸ் போட்டிகள், உள்ளூர் லீக் போட்டிகள் உள்பட அனைத்து வகையான விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் இருக்கிறது.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுமா? என்று சந்தேகம் நிலவி வருகிறது.

    ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.) டோக்கியோ ஒலிம்பிக் போட்டி குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என்று தொடர்ந்து கூறி வருகிறது.

    நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட போட்டி நடைபெறுவதற்கு இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் தற்போதைய நிலையில் எந்தவொரு கடினமான முடிவையும் எடுக்க தேவையில்லை என்று கூறி இருந்தது.

    ஐ.ஓ.சி.யின் இந்த முடிவுக்கு வீரர், வீராங்கனைகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று வீரர், வீராங்கனைகள் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலை வலியுறுத்தி உள்ளனர்.

    கிரீஸ் போல்வால்ட் வீராங்கனை கேத்ரினா ஸ்டெபானிடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வீரர், வீராங்கனைகளின் உடல்நலத்தில் அக்கரை செலுத்தவில்லை. குழு போட்டிகளில் பல நாடுகளை சேர்ந்தவர்களும் ஒன்றாக பங்கேற்க வேண்டி இருக்கும்.

    ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளில் பலர் தொடக்கூடிய பொருட்களை தொட இருக்கும். இதை ஒலிம்பிக் கவுன்சில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பிரான்சை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் மார்டினேட் கூறியதாவது:-

    ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைப்பதே சிறந்த முடிவாக இருக்கும். கொரோனா வைரசால் ஒரு சில நாடுகள் அதிகமாகவும், ஒரு சில நாடுகள் குறைவாகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    சில நாடுகளில் பயிற்சி மைதானங்கள் கிடைப்பதில்லை. அனைத்தும் மூடப்பட்டு விட்டன. இதனால் இந்த ஆண்டு இறுதி வரை ஒலிம்பிக் போட்டியை ஒத்தி வைப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வீரர், வீராங்கனைகளின் எதிர்ப்பு தொடர்பாக ஐ.ஓ.சி.யின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உடல் நலத்தில் நாங்கள் அக்கறை கொண்டு இருக்கிறோம். அதே நேரத்தில் ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டப்படி நடத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்” என்றார்.
    Next Story
    ×