என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக வீரர் தேவ்தத் படிக்கல்
    X
    கர்நாடக வீரர் தேவ்தத் படிக்கல்

    ரஞ்சி டிராபி அரையிறுதி: கைவசம் 7 விக்கெட், கர்நாடகா 254 ரன்களை எட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா?

    பெங்கால் அணிக்கெதிரான அரையிறுதியில் கைவசம் ஏழு விக்கெட் உள்ள நிலையில் வெற்றிபெற 254 ரன்கள் தேவை என்ற நிலையில் கர்நாடகா உள்ளது.
    ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கின. கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் - கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்கால் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 67 ரன்னுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின் வந்த மஜும்தார் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இவரின் சதத்தால் பெங்கால் 312 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. மஜும்தார் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கர்நாடகா அணி சார்பில் மிதுன், மோர் தலா மூன்று விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா மற்றும் கவுதம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் கர்நாடகா முதல் இன்னிங்சை தொடங்கியது. பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் இஷான் பொரேல் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் கர்நாடகா 122 ரன்னில் சுருண்டது. பொரேல் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் 190 ரன்கள் முன்னிலையுடன் பெங்கால் 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. சட்டர்ஜீ 40 ரன்னுடனும், முஜும்தார் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. சட்டர்ஜீ 45 ரன்களில் ஆட்டமிழந்தார். மஜும்தார் 41 ரன்கள் சேர்த்தார். ஷபாஸ் அகமது 31 ரன்கள் சேர்க்க பெங்கால் 161 ரன்களில் சுருண்டது. கர்நாடகா அணி சார்பில் மிதுன் நான்கு விக்கெட்டும், கவுதம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பெங்கால் ஒட்டுமொத்தமாக 351 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் கர்நாடகா அணிக்கு 352 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    பின்னர் 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா களம் இறங்கியது. கேஎல் ராகுல், சமர்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

    சமர்த் 27 ரன்னில் வெளியேறினார். கேப்டன் கருண் நாயர் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். 4-வது விக்கெட்டுக்கு படிக்கல் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். படிக்கல் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

    கர்நாடகா 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. படிக்கல் 50 ரன்னுடனும், மணிஷ் பாண்டே 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். கர்நாடகா அணிக்கு இன்னும் 254 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளனர். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடினால் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    Next Story
    ×