search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரர்கள் ஒதுக்கீடு நிகழ்ச்சியில் பங்கேற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன்.
    X
    வீரர்கள் ஒதுக்கீடு நிகழ்ச்சியில் பங்கேற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட்- 8 அணிகளுக்கு 132 வீரர்கள் ஒதுக்கீடு

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 8 அணிகளுக்கு மொத்தம் 132 வீரர்கள் ஒதுக்கப்பட்டனர். இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஜெகதீசனையும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணி ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரையும் வாங்கியது.
    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 10-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சேலம் ஸ்பார்டன்ஸ் என்றும், காரைக்குடி காளை அணி திருப்பூர் தமிழன்ஸ் என்றும் பெயர் மாற்றத்துடன் களம் இறங்குகின்றன.

    இந்த சீசனில் நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களுடன் புதிதாக சேலம், கோவை ஆகிய நகரங்களிலும் டி.என்.பி.எல். போட்டி நடத்தப்படுகிறது. சென்னையில் எந்த ஆட்டங்களும் கிடையாது என்பதால் இறுதிப்போட்டி நெல்லையில் நடக்கலாம் என்று தெரிகிறது.

    ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சமாக 16 வீரர்களையும், அதிகபட்சமாக 22 வீரர்களையும் வைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே ஒவ்வொரு அணிகளும் தலா 3 வீரர்களை தக்கவைத்து கொண்டன. அணிக்கு தேவையான எஞ்சிய வீரர்களை ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. ஒதுக்கீடு பட்டியலில் மொத்தம் 633 வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். அவர்கள் தகுதிக்கு ஏற்ப 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இருந்தனர். சில முன்னணி வீரர்கள் மீது எதிர்பார்ப்பு நிலவியது.

    இதில் முதலில் வீரர்களை தேர்வு செய்வதற்கு கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்ட சேலம் ஸ்பார்டன்ஸ் அணி சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (ரூ.6 லட்சம் ஊதியம்), கடந்த ஆண்டு அதிக விக்கெட் வீழ்த்தியவரான வேகப்பந்து வீச்சாளர் ஜி.பெரியசாமி, சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வின் உள்ளிட்டோரை தங்கள் வசப்படுத்தியது.

    கடந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகிப்பவருமான விக்கெட் கீப்பர் என்.ஜெகதீசனை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எடுத்தது. இதே போல் ஐ.பி.எல்.-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் எம்.சித்தார்த்தையும் கில்லீஸ் அணி இழுத்தது. முதல் இரு சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஆடிய ஆல்-ரவுண்டர் ஆர்.சதீஷ் மீண்டும் கில்லீஸ் அணியுடன் இணைகிறார்.

    இதே போல் அபினவ் முகுந்த் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கும், வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் காஞ்சி வீரன்சுக்கும், அந்தோணி தாஸ் திருச்சி வாரியர்சுக்கும் வாங்கப்பட்டனர். மொத்தம் 132 வீரர்கள் 8 அணிகளுக்கு ஒதுக்கப்பட்டனர்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் ஜெகதீசன் - சேலம் ஸ்பார்டன்ஸ் வீரர் விஜய் சங்கர்


    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் கூறுகையில், ‘இந்த முறை வீரர்கள் ஒதுக்கீடு நன்றாக அமைந்துள்ளது. முதலில் ஆல்-ரவுண்டரை எடுப்பதில் கவனம் செலுத்தினோம். யாரை எல்லாம் மனதில் நினைத்திருந்தோமோ அவர்களை எடுத்திருக்கிறோம். முதல் இரண்டு ஆண்டுகள் எங்கள் அணிக்கு கேப்டனாக இருந்த சதீசை மீண்டும் எடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. டி.என்.பி.எல். போட்டியில் கலக்கினால் ஐ.பி.எல்.-ல் ஆட வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறுகையில், ‘அணியை தேர்வு செய்ததில் மகிழ்ச்சி. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்றிலும் அனுபவம் வாய்ந்த அணியாக இருக்க விரும்புகிறோம். எங்களது சிறப்பு அம்சம் என்னவென்றால் பெரிய வீரர்கள் இல்லாவிட்டாலும், ஒரு அணியாக வலுப்படுத்துவதற்கு கடினமாக உழைப்பதே’ என்றார். இந்த சீசனில் எல்லா ஆட்டங்களிலும் விளையாடி அணியின் வெற்றிக்கு உதவுவதை எதிர்நோக்கி இருப்பதாக சேலம் ஸ்பார்டன்ஸ் வீரர் விஜய் சங்கர் குறிப்பிட்டார்.

    ஒவ்வொரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: டி.ராகுல், என்.ஜெகதீசன், ஹரிஷ்குமார், ஆர்.சதீஷ், எம்.சித்தார்த், ஜெகநாத் சீனிவாஸ், சுஜய், பிரசித் ஆகாஷ், பி.அருண், ராம்அரவிந்த், பி.ராகுல், அருண்குமார், சாய் பிரகாஷ், எஸ்.விஜயகுமார், சந்தானசேகர், ஆர்.அஜித்குமார், விக்ரம் ஜாங்கிட். தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: கவுசிக் காந்தி, அலெக்சாண்டர், சசிதேவ்.

    சேலம் ஸ்பார்டன்ஸ்: பிரனேஷ், விஜய்சங்கர், ஜி.பெரியசாமி, முருகன் அஸ்வின், கோபிநாத், டேரில் பெராரியோ, லோகேஷ் ராஜ், அகில் ஸ்ரீநாத், சுகனேஷ், சுஷில், சிவகுமார், ராஜ்குமார், அபிஷேக், பூபாலன், பிரஷாந்த் பிரபு, எம். விஜய்குமார், சுபம் மேத்தா. தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷய் சீனிவாசன், எம்.கணேஷ்மூர்த்தி.

    கோவை கிங்ஸ்: ஷிஜித் சந்திரன், அஸ்வின் வெங்கட்ராமன், அபிஷேக் தன்வார், கே.விக்னேஷ், கங்கா ஸ்ரீதர் ராஜூ, கவின், முகிலேஷ், ராஜேஷ், சுரேஷ்குமார், மனிஷ், செல்வகுமாரன், அதீக் ரகுமான், சாய் சுதர்சன், கவுஜித் சுபாஷ், அரவிந்த், நிஷாந்த் குமார். தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஷாருக்கான், டி.நடராஜன், எஸ்.அஜித்ராம்,

    மதுரை பாந்தர்ஸ்: மிதுன், ஷாஜகான், ஜே.கவுசிக், சதுர்வேத், ஆர்.ரோகித், அனிருத் சீத்தாராம், அவுசிக் சீனிவாஸ், ஆதித்யா, கவுதம், பிரவீன்குமார், சிலம்பரசன், ஹேம்சரன், சந்திரசேகர், தீபன் லிங்கேஷ், நிர்மல்குமார், எல்.கணேஷ். தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: அருண் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, கிரண் ஆகாஷ்.

    திருச்சி வாரியர்ஸ்: சரவணகுமார், நிதிஷ் ராஜகோபால், அனிருதா, அந்தோணிதாஸ், ரஹில் ஷா, ஆதித்யா கணேஷ், சுமந்த் ஜெயின், ஆகாஷ்சும்ரா, பொய்யாமொழி, முகமது அட்னன்கான், ஆர்.கணேஷ், அமித் சாத்விக், யாழ் அருண் மொழி, சந்தோஷ் ஷிவ், ஹேமந்த் குமார், கே.முகுந்த், கார்த்திக் சண்முகம். தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: முரளிவிஜய், சாய் கிஷோர், சோனு யாதவ்,

    காஞ்சி வீரன்ஸ்: திலோக் நாக், அர்ஜூன் மூர்த்தி, பாபா இந்திரஜித், அதிசயராஜ் டேவிட்சன், ரஞ்சன் பால், எம்.அபினவ், ஷருன் குமார், சூர்யபிரகாஷ், ஜிந்திரகுமார், டி.அஜித்குமார், செந்தில்நாதன், அஷ்வாத் முகுந்தன், வித்யுத், ஜெயசந்திரன், ரஜினிகாந்த். தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், என்.எஸ்.ஹரிஷ்.

    திண்டுக்கல் டிராகன்ஸ்: விஷால் வைத்யா, மணிபாரதி, ஹரி நிஷாந்த், யோ மகேஷ், சுதேஷ், மோகித் ஹரிகரன், எல்.விக்னேஷ், லோகேஷ்வர், சஞ்சய், ஆதித்யா அருண், எஸ்.அருண், சுவாமிநாதன், லட்சுமண், சி.அஸ்வின், சிவமுருகன், அத்வைத் ஷர்மா, ஆர்.சீனிவாசன். தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஆர்.அஸ்வின், எம்.சிலம்பரசன், ஆர்.விவேக்.

    திருப்பூர் தமிழன்ஸ்: எஸ்.தினேஷ், எம்.முகமது, அஸ்வின் கிறிஸ்ட், அபினவ் முகுந்த், மோகன் பிரசாத், ரோகின்ஸ், எஸ்.அரவிந்த், கவுதம் தாமரை கண்ணன், கருப்புசாமி, மணிகண்டன், எஸ்.சித்தார்த், ஸ்ரீராம், துஷார் ரஹேஜா, மோகித் பன்ஹால், சித்தார்த் அஹூஜா, ரூபன்ராஜ், அபினவ் விஷ்ணு. தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: தினேஷ் கார்த்திக், ஆர்.ராஜ்குமார், மான் பாப்னா.

    Next Story
    ×