search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    இந்தியாவில் 5 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்த வேண்டும் - விராட் கோலி வலியுறுத்தல்

    வெளிநாடுகளில் உள்ளது போன்று இந்தியாவிலும் குறிப்பிட்ட 5 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார்.
    ராஞ்சி:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3 டெஸ்ட் போட்டிகள் முறையே விசாகப்பட்டினம், புனே, ராஞ்சியில் நடைபெற்றது. இந்த தொடரில் ரசிகர்கள் வருகை மிக மிக குறைவாகவே இருந்தது. சில நாட்கள் மைதானம் வெறிச்சோடி கிடந்ததை பார்க்க முடிந்தது. இந்தியாவில் மொத்தம் 27 மைதானங்களில் டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. 2000-ம் ஆண்டுக்கு பிறகு மட்டும் 18 ஸ்டேடியங்களில் டெஸ்ட் போட்டி அரங்கேறி இருக்கிறது.

    வெளிநாடுகளை எடுத்துக்கொண்டால் ஆஸ்திரேலியாவில் பெரிய அணிகள் வரும்போது மெல்போர்ன், அடிலெய்டு, பிரிஸ்பேன், சிட்னி, பெர்த் ஆகிய மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது. இங்கிலாந்தில் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் லண்டன் லார்ட்ஸ், ஓவல், பர்மிங்காம், மான்செஸ்டர், லீட்ஸ், நாட்டிங்காம் ஆகிய இடங்களில் நடக்கிறது. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்தும் இத்தகைய பாணியையே பின்பற்றுகின்றன.

    இதே போல் இந்தியாவிலும் பாரம்பரியமிக்க, பிரபலமான இடங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கோரிக்கை விடுத்துள்ளார். கொல்கத்தா, மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூரு, மொஹாலி, நாக்பூர் போன்ற இடங்களில் டெஸ்ட் போட்டி நடக்கும் போது எப்போதும் அமோக வரவேற்பு கிடைப்பது உண்டு. அதை மனதில் வைத்து கோலி இவ்வாறு கூறியிருக்கிறார்.

    இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து விராட் கோலி கூறியதாவது:-

    இந்தியாவில் குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் என்பது தொடர்பாக நாங்கள் நீண்ட காலமாகவே விவாதித்து வருகிறோம். டெஸ்ட் கிரிக்கெட் பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால், நிரந்தரமான டெஸ்ட் மைதானங்கள் தேவை. எல்லா மைதானங்களிலும் டெஸ்ட் போட்டியை நடத்தக்கூடாது. சில இடங்களில் ரசிகர்கள் கூட்டம் வருவதில்லை.

    எனவே இந்தியாவில் வலுவான 5 டெஸ்ட் மைதானங்கள் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. இங்கு வரும் வெளிநாட்டு அணிகள் தாங்கள் இந்த 5 மைதானங்களில் தான் டெஸ்ட் போட்டியில் விளையாடப் போகிறோம் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.

    இந்தியாவில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் உள்ளன. அவர்களுக்கு சுழற்சி அடிப்படையில் போட்டிகள் ஒதுக்க வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். இது 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு சரியாக இருக்கும். ஆனால் டெஸ்ட் போட்டியில் விளையாட இந்தியாவில் கால்பதிக்கும் வெளிநாட்டு அணிகளுக்கு தாங்கள் இந்த 5 மைதானங்களில், இத்தகைய ஆடுகளங்களில் தான் ஆடப்போகிறோம், ரசிகர்கள் வருகை இப்படி தான் இருக்கும் என்பவை எல்லாம் தெரிய வேண்டும். அதுவே சவாலான விஷயமாக இருக்கும்.

    நமது அணி வெளிநாடு சென்று 4 டெஸ்டுகளில் பங்கேற்க போகிறோம் என்றால், இந்த மைதானத்தில் தான் விளையாடப்போகிறோம், அங்குள்ள ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும், ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியப்போகிறது என்பதை எல்லாம் முன்கூட்டியே அறிந்து கொள்கிறோம்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    தென்ஆப்பிரிக்காவை ‘ஒயிட்வாஷ்’ செய்த முதல் இந்திய கேப்டன் என்ற சிறப்பை பெற்ற விராட் கோலி மேலும் கூறியதாவது:-

    ஒட்டுமொத்த இந்திய அணியை நினைத்து பெருமைப்படுகிறேன். உண்மையான நோக்கத்துடன் தொடர்ந்து உழைக்கும்போது சாதகமான முடிவுகள் தானாகவே வந்து சேரும். டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த அணியாக திகழ வேண்டும், ஒவ்வொரு அணிக்கும் கடும் போட்டி அளிக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அந்த மனநிலை தான் கைகொடுக்கிறது. எத்தகைய சூழலிலும் நம்மால் சாதிக்க முடியும் என்ற நேர்மறையான எண்ணமே, எங்களது வெற்றியின் ரகசியம் ஆகும்.

    இந்த தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் வியப்பூட்டும் வகையில் இருந்தது. தொடக்க வீரராக களம் இறங்கி பதற்றத்தையும், தயக்கத்தையும் தாண்டி களத்தில் ஜொலித்த விதம், தொடக்க வீரராக களம் கண்ட முதல் தொடரிலேயே தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்ட அவருக்கே ஒட்டுமொத்த பெருமையும் சேரும்.

    இவ்வாறு கோலி கூறினார்.
    Next Story
    ×