search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிஷப் பந்த் அழிவை ஏற்படுத்தும் பேட்ஸ்மேன் - டெல்லி கேப்டன் புகழாரம்
    X

    ரிஷப் பந்த் அழிவை ஏற்படுத்தும் பேட்ஸ்மேன் - டெல்லி கேப்டன் புகழாரம்

    27 பந்தில் 78ரன் (7பவுண்டரி, 7 சிக்சர்) குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த ரிஷப் பந்த் அழிவை ஏற்படுத்தும் பேட்ஸ்மேன் என டெல்லி கேப்டன் ஷிரேயஸ் அய்யர் புகழாரம் சூட்டியுள்ளார். #ShreyasIyer
    மும்பை:

    ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தால் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த 3-வது ‘லீக்’ ஆட்டத்தில் ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன் குவித்தது.

    ரிஷப் பந்த் 27 பந்தில் 78 ரன்னும் (7 பவுண்டரி, 7 சிக்சர்), காலின் இங்ராம் 32 பந்தில் 47 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), தவான் 36 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். மெக்லகன் 3 விக்கெட்டும், பும்ரா, ஹர்திக் பாண்டியா, பென் கட்டிங் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 19.2 ஓவர்களில் 176 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    யுவராஜ்சிங் 35 பந்தில் 53 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), குருணால் பாண்டியா 15 பந்தில் 32 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். இஷாந்த் சர்மா, ரபடா தலா 2 விக்கெட்டும், பவுல்ட், அக்‌ஷர் படேல், கீமோ பவுல், ராகுல் திவேதியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    வெற்றி குறித்து டெல்லி அணி கேப்டன் ஷிரேயஸ் அய்யர் கூறியதாவது:-



    ரிஷப் பந்த் உண்மையிலேயே அழிவை ஏற்படுத்தும் பேட்ஸ்மேன் ஆவார். கடந்த 1 ஆண்டாக அவரது ஆட்டத்தில் நல்ல முதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. ரி‌ஷப் பந்த் எங்கள் அணிக்கு கிடைத்தது சிறப்பான ஒன்றாகும்.

    கேப்டன் பதவி எனக்கு கிடைத்த கவுரவமாகும். கேப்டன் பதவிக்காக உண்மையிலேயே என்னை தயார்ப்படுத்தி கொண்டுள்ளேன். இந்திய ‘ஏ’ அணிக்கு கேப்டனாக இருந்துள்ளேன். இந்த அனுபவம் எனக்கு கை கொடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, “முதல் ஆட்டம் பெரும்பாலான அணிகளுக்கு சவாலாகவே இருக்கும். இந்த ஆட்டத்தில் நாங்கள் பல தவறுகள் செய்தோம். எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. ரி‌ஷ்ப பந்த் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை மாற்றிவிட்டார்” என்றார்.

    ஆட்டநாயகன் விருது பெற்ற ரி‌ஷப் பந்த் கூறும்போது, “இது ஒரு பெரிய பயணம். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நாள்தோறும் கற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறேன். அணி வெற்றி பெறும் போது சிறப்பாக உணர்கிறேன்” என்றார்.



    டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை நாளை (26-ந்தேதி) சொந்த மண்ணில் சந்திக்கிறது. மும்பை அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்சை 28-ந்தேதி எதிர்கொள்கிறது. #IPL2019 #MI #DC
    Next Story
    ×