search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மருத்துவம் அறிவோம்- நோய்களுக்கு மருந்தாகும் மஞ்சள்!
    X

    மருத்துவம் அறிவோம்- நோய்களுக்கு மருந்தாகும் மஞ்சள்!

    • மஞ்சள் வீக்கங்கள் குறைவதற்கும், புற்று நோயினை எதிர்ப்பதற்கும் பெரிதும் உதவுகின்றது.
    • சிலர் இதே அளவில் மஞ்சள் டீ என்ற முறையில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கின்றனர்.

    மஞ்சள்: இதன் மருத்துவ குணம் காரணமாக உலகெங்கிலும் மருத்துவ உலகில் இது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மஞ்சள் வீக்கங்கள் குறைவதற்கும், புற்று நோயினை எதிர்ப்பதற்கும் பெரிதும் உதவுகின்றது. முதுமை சீக்கிரம் கூடுவது கூட தவிர்க்கப்படுகின்றது. அநேக நோய்களுக்கு இது தீர்வாக அல்லது பெரும் உதவியாக இருக்கின்றது என சுமார் 7 ஆயிரம் விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன. இதில் உள்ள குர்குமின் என்ற பொருள்தான் இந்த வியக்கும் முன்னேற்றத்திற்கு காரணம் என உறுதி செய்துள்ளனர்.

    ஒரு கிளாஸ் நீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ½ டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் கலந்து 3 அல்லது 5 நிமிடங்கள் மூடி வைத்து பின் வெது வெதுப்பாக குடித்து விடலாம்.

    சிலர் இதே அளவில் மஞ்சள் டீ என்ற முறையில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கின்றனர்.

    சிலர் தேன், எலுமிச்சை சாறு, மிளகு பொடி இவற்றினை அவரவர் சுவைக்கேற்றபடி சேர்த்துக் கொள்கின்றனர்.

    சிலர் பாலுடன் மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக் கொள்கின்றனர்.

    பலர் இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டாலும் இதனை மதியம், இரவு நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம்.

    மேரி ஈஸ் பரவுன் எனும் புற்று நோய் பகுதி சத்துணவாளர் கூறுவது புற்று நோய், இருதய நோய் தாக்குதலை குறைக்க மஞ்சள் பெரிதும் உதவுகின்றது என்பதுதான். மேலும் மனச் சோர்வு, மறதி, மனநிலை சீராய் இருத்தல் இவற்றுக்கும் மஞ்சள் உதவுவதாக ஆய்வுகளின் முடிவுகள் குறிப்பிடுவதாக தெரிவித்துள்ளார்.

    * மூட்டு வலி பிரச்சினைக்கு சிறந்த வலி நிவாரணியாக உள்ளது.

    * நீரிழிவு நோய் பிரிவு 2 உடையவர்களுக்கு சர்க்கரை கட்டுப்பட உதவுகின்றது.

    * உள் வீக்கங்களும் குறைகின்றது.

    * ஜீரணத்திற்கு உதவுகின்றது.

    * கல்லீரலுக்கு பாதுகாப்பாய் உள்ளது.

    * மூளைக்கு நல்ல டானிக் ஆகின்றது.

    * இருதய பாதிப்பிற்கு நல்லது. ரத்த குழாய் அடைப்புகளை தவிர்க்கின்றது.

    * உள் வீக்கங்கள் குறைக்கப்படுவதால் முதுமை வேகமாக கூடுவது குறைகின்றது.

    * புற்று நோய் தவிர்ப்பிற்கும் சிகிச்சைக்கும் உதவுகின்றது.

    * கொழுப்பு குறைகின்றது.

    * சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது.

    * படபடப்பு நீங்குகின்றது.


    கமலி ஸ்ரீபால்

    சிலர் மஞ்சளை சத்துணவு மாத்திரை போல் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் சில குறிப்பிட்ட மருந்துகளோடு இது சேரும் போது சில பாதிப்புகள் ஏற்படும். அவை சற்று அதிக அபாயமாக இருக்கக் கூடாது. இதனை தவிர்ப்பதற்காக மருந்துகள் நோய்க்காக எடுப்பவர்கள், புற்று நோய் சிகிச்சையில் இருப்பவர்கள், ரத்த திடத்தினை குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் இப்படி எந்த பிரிவில் இருந்தாலும் மஞ்சள் சத்துணவு மாத்திரை அல்லது மஞ்சள் நீர் எடுத்துக் கொள்பவர்கள் கண்டிப்பாய் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    மேலும் சிலருக்கு அலர்ஜி தரலாம். எனவே கவனம் தேவை. இயற்கை பல பொக்கிஷங்களை நம் ஆரோக்கியத்திற்காக வாரி வழங்கியுள்ளது. முறையாக பயன்படுத்தி பயன் பெறுவோம்.

    இருதய பாதிப்பு என்றாலே உலகெங்கிலும் அனைவருக்கும் அதிக கவனம் செலுத்த வேண்டிய பாதிப்பாக உள்ளது. இருதயம் ரத்த குழாய்கள் பாதிப்பு, பக்கவாதம் என பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இருதய பாதிப்பினை ஏற்படுத்தும் சில நோய்கள்.

    * உயர் ரத்த அழுத்தம் * புகையிலை * அதிக கொழுப்பு * சர்க்கரை நோய் * அதிக எடை * உடல் உழைப்பின்றி இருத்தல் * ஆரோக்கியமற்ற உணவு * பரம்பரை * வயது * ஸ்ட்ரெஸ் * குடிப்பழக்கம் * முறையான தூக்கமின்மை * சிறுநீரக பாதிப்பு * ஹார்மோன் பாதிப்பு * தூய்மையற்ற காற்று ஆகியவை ஆகும்.

    இதனை தவிர்க்க

    * முறையான மருத்துவ பரிசோதனை

    * ஆரோக்கியமான உணவு

    * புகை, புகையிலை தவிர்த்தல்

    * சீரான எடை

    * ஸ்ட்ரெஸ் இன்றி இருத்தல்

    * மது தவிர்த்தல்

    * நம் உடல் நலம் பற்றி நன்கு அறிந்து இருத்தல் ஆகியவை மிக அவசியம்.

    * தேவையான அளவு கலோரி சத்து அதனை முறையான உடற்பயிற்சி கொண்டு எடுத்தல்.

    * நல்ல காய்கறி, பழங்கள் உட் கொள்ளுதல்.

    * முழு தானிய உணவுகள்

    * தாவர உணவு, கடல் உணவு, தாவர வகை புரதம் எடுத்துக் கொள்ளுதல்.

    * பதப்படுத்தப்பட்ட புட்டியில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்த்தல்

    * சர்க்கரை உணவினை தவிர்த்தல்

    * உப்பு உணவினை தவிர்த்தல்- ஆகியவை நல்ல பலன் தரும்.

    நடுக்குவாத நோய் பற்றியும் சில குறிப்புகளை அறிந்து கொள்வோம்.

    இது நீண்ட கால நரம்பு மண்டல பாதிப்பின் வெளிப்பாடு ஆகும். பரம்பரையில் யாருக்கேனும் இருந்தால் பாதிப்பு வாய்ப்புகள் சந்ததிகளுக்கு சற்று கூடுதலாக இருக்கும். ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு பெண்களை விட சற்று கூடுதல் எனலாம்.

    60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பாதிப்பு அபாயம் கூடும்.

    இதன் பாதிப்பு தவிர்ப்பு முறைகளைப் பற்றி ஆய்வு முடிவாக கூறியது காபி குடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு நடுக்கு வாத பாதிப்பு குறைவாகத்தான் ஏற்படுகின்றதாம். இப்படி சொல்லி விட்டதால் டிகிரி காபியாக அன்றாடம் பல முறை குடிக்க வேண்டும் என்பதல்ல இதன் பொருள். பொதுவில் அவர்கள் கூறும் காபி என்பது பால் கலக்காத அதிக திடம் இல்லாத கறுப்பு காபியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். பால் கலந்து நம் முறைப்படி பருகினாலும் காலை 12 மணிக்குள் ஒரு முறை அருந்தினாலே போதும்.

    காலை, மாலை உடலில் நன்கு சூரிய ஒளி படும்படி 20 நிமிடங்கள் நடக்கலாம்.

    வைட்டமின் 'சி' சத்து நிறைந்த பழங்கள், சோயா உணவுகள், டீ, வெங்காயம் இவற்றினை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    அதிகம் பால், பால் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    வைட்டமின் 'சி' -இதனை பற்றி அன்றாடம் மக்கள் படித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும்தான் இருக்கின்றனர். அந்த அளவிற்கு இதன் முக்கியத்துவம் வலியுறுத்தப் படுகின்றது. உடலை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்ட வைரஸ், பாக்டீரியாக்களை எதிர்க்க உதவுகின்றது. இத்துடன் 'கொலஜென்' உற்பத்திக்கும் உதவுகின்றது. இந்த கொலஜென் தான் சருமம், எலும்பு, நகம், மந்த தெளிவு, இரும்பு சத்து, உடலில் உறிஞ்சப்பட உதவியாய் இருக்கின்றது.

    உடலில் 'வைட்டமின் சி' சத்து கொலஜன் உற்பத்தி மூலம் திசுக்கள் எலும்புகள் இத்தோடு ரத்த குழாய்களையும் காக்கின்றது. பலர் இந்த வைட்டமின் சி சத்தினைப் பற்றி நினைப்பதும் இல்லை. பலர் மிக அதிக அளவில் தானே சத்து மாத்திரைகளாக எடுத்துக் கொண்டு வயிற்றுப் போக்கு, வலி என பல குடல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். சத்து மாத்திரையாக இருந்தாலும் அது மருத்துவர் அறிவுரைப்படியே இருக்க வேண்டும்.

    ஆனால் அன்றாட உணவில் விகிதாச்சார முறைபடி உண்ணும் போது இயற்கையாகவே பலன்கள் கிட்டும்.

    'சி' சத்து என்று சொன்னாலே எலுமிச்சை, நெல்லி, ஆரஞ்சு என ஞாபகம் வரும்.

    சிகப்பு, பச்சை கொடை மிளகாய்-சாலட் முறையில் இதனை பயன்படுத்தலாம்.

    புரோகலி மிக சிறந்த அளவு 'சி' சத்து கொண்டது.

    தக்காளி, தக்காளி ஜுஸ், கீரை வகைகள் என அன்றாடம் இவைகளை நம் உணவு பழக்க முறைப்படியே சேர்த்துக் கொள்ளலாமே.

    நோய் எதிர்ப்பு சக்தி, காயங்கள் ஆறுதல், ஈறுகளில் ரத்த கசிவு இல்லாது இருத்தல், சதைகள் சோர்வின்றி இருத்தல், ஆரோக்கியமான சருமம், சில பிரிவு புற்று நோய் எதிர்ப்பு என இத்தனை நன்மைகளைத் தரும் வைட்டமின் சி சத்தினை அவசியம் அன்றாடம் உணவு முறை மூலம் பெற வேண்டும்.

    அதிகமாக சில வைட்டமின்கள் பற்றி திரும்ப திரும்ப கூறுவது போல் மற்றொரு செய்தியினையும் இங்கு மேலும் அறிந்து கொள்வோம்.

    நைட்ரிக் ஆக்சைட்: இது ஒரு முக்கியமான மூலக்கூறு. உடலின் ஆரோக்கியம், செயல்பாட்டிற்கு அவசியம். இருதயம் சீராய் இயங்க, நோய் எதிர்ப்பு சக்தி கூட, ரத்த குழாய்களில் ரத்த ஓட்டம் சீராய் இருக்க என பல முக்கியத்துவங்களை நைட்ரிக் ஆக்சைட் தன்னுள் கொண்டது. உடல் இயற்கையிலேயே நைட்ரிக் ஆக்சைட் உற்பத்தி செய்தாலும் உணவின் மூலமும் இதனைப் பெற முடியும்.

    * தர்பூசணி * பீட் ரூட் * பூண்டு *அடர்ந்த சாக்லேட் *பசலை கீரை * மாதுளை * கொட்டை வகைகள் * முட்டை * காபி இவை நைட்ரிக் ஆக்சைடினை உடலில் கூட்டுவதற்கு உதவுபவை.

    நம்மால் கத்தாமல், குரலை உயர்த்தாமல் பேச முடிகின்றதா? கண்டபடி உண்ணாமல் அளவாய் முறையாய் உண்ண முடி கின்றதா? பொறுமையாய் வேலை செய்ய முடிகின்றதா? செய்யும் வேலையினை பயம் இன்றி செய்ய முடிகின்றதா? சிறிதாவது ஆக்கப்பூர்வமாக சிந்திக்கின்றோமா? நேர்மையாக சம்பாதிக்கின்றோமா? பண்பாக நடந்து கொள்கின்றோமா? நாம் நல்லவர்கள்.

    Next Story
    ×