என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சோறு கண்ட இடம் சொர்க்கம்
    X

    சோறு கண்ட இடம் சொர்க்கம்

    • சிவபெருமானுக்கும் சந்திரபகவானுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
    • யார் பிட்சையிடும்போது அந்த பாத்திரம் புல்லாகுதோ அப்போதான் சிவனின் கையோடு ஒட்டியிருக்கும் அந்த கபாலம் விலகும்னு விதி.

    மார்கழி மாசம் சொர்க்கம் பற்றிய பழமொழி சொல்றீங்க... இதுக்கு ஒரு சபாஷ் போட்டாலும் எங்கேயோ உதைக்குதேன்னு யோசிக்கிறீங்களா?

    கட்டுரை எழுத உட்காரும் போதே பக்கத்தில் காத்துவாக்குலே ஒரு காதல் இல்லைங்க சத்தியமா யாரோ இரண்டு பேரோட பேச்சு சத்தம், காதை சற்றே தீட்டிக்கொண்டு கேட்க, ஏம்பா... மாலைமலர்லே உன்னைப் பத்தி ஒரு பழமொழி சொல்லி இருக்காங்களாமே?

    என்னன்னு?

    எந்த வேலை வெட்டிக்கும் போகாம விருந்துக்குன்னு வந்துட்டு இன்னமும் கிளம்பாமத் தரையைத் தேச்சிட்டு இருக்கியே அதைத்தான் பூடகமா சொல்லி இருக்காங்களாம்.

    சம்பந்தப்பட்ட மனிதர் நம்ம டைட்டிலைப் பார்த்து ரேப்பிடோவோ, மெட்ரோ டிரைனோ பிடித்து வந்து அடிக்க வருவதற்குள் எஸ்கேப்.

    யப்பா அதென்னடா சோறு கண்ட இடம் சொர்க்கன்னு கேட்கறீங்க. நாம நினைக்கிறாமாதிரி... மல்லாக்கா படுத்துட்டு விட்டத்தைப் பார்த்து வேளா வேளைக்கு முட்டையோட கறிக்குழம்பும் சாப்பிட்டுகிட்டு கிடக்கிறது சொல்லுறீயா? அண்ணாத்தேயின் வார்த்தையில் இளநீர் வெட்டும் அரிவாளின் விஷ்க்.

    அய்யோ இல்லைங்க. நிஜமாகவே இந்த பழமொழி ஆண்டவன் சமாச்சாரம்தான். அடடா ஆள்பவர்கள் இல்லைங்க ஆண்டவர்..

    ஆண்டவர்னா பிக்பாசுதானே...

    அடப்பாவி ஆண்டவன்னா கடவுள். நான் சட்டென்று கட்டுரைக்குள் நுழைந்தேன்.

    சிவபெருமானுக்கும் சந்திரபகவானுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

    அட அதான் எங்களுக்கு தெரியுமே, தொடர்பில்லாமயா அவரு சந்திரனை தலையிலே ஸ்டைலா வைச்சிருக்காரு...

    நிலான்னா யாருக்குத்தான் பிடிக்காது. நிலாவிலே வடை சுடற ஆயாவை பார்க்கவே நானெல்லாம் நடுராத்திரியிலே வானத்தை உத்து உத்துப் பார்த்திருக்கிறேனாக்கும்.

    ஏம்பா அதென்ன இந்த நிலா மாசத்துலே ஒரு நாள் மட்டும் முழுசா இருக்கு. அது எதனாலன்னு உனக்கு தெரியுமா?

    எங்கே சொல்ல விடறீங்க? நிலா முழுமையானதுக்கும் ஒரு கதை இருக்கு.

    சொல்லு சொல்லு கேட்போம்... அவர் ஆர்வமானார். நான் ஆரம்பித்தேன். ஒருமுறை தட்சனால் ஏற்பட்ட சாபத்தில் இருந்து மீள சிவபெருமானை நோக்கி சந்திரன் தவம் இருந்து அதன் பயனாக முழுமையான ஆற்றலையும் பெற்ற தினமே பவுர்ணமி. அதுவும் சாதாரண பவுர்ணமியில்லைங்க ஐப்பசி பவுர்ணமி. மத்த மாசத்தைக் காட்டிலும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும். அப்போது சந்திரன் மிக அதிக ஒளியுடன் காட்சி தருவதாக அறிவியல் ரீதியாகவும் நிரூபணம் செய்யப்பட்டு இருக்கு.

    ஒருமுறை சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

    அடடா அடுத்த கதையா?

    ம்... பிரம்மாவிற்கு முதலில் ஐந்து தலைகள் இருந்தது. இப்படி என்னை அடிக்கடி நீங்க எதிர்த்து பேசுறாமாதிரி ஒருதபா பிரம்மனும் எதிர்த்து பேசிட்டார். நம்ம சிவனுக்கு கோபம் வந்து ஐந்து தலையிலே ஒரு தலையை எடுத்துட்டார். இதனால அவருக்கு பிரம்மஹத்திதோஷம் ஏற்பட்டுவிட்டது. பகதி பிட்சாந்தி... என்று பிட்சாண்டியாக காட்சியளி க்கும் சிவன் கையில் பிரம்மனின் கபாலமே பிட்சைப் பாத்திரமாக மாறிவிடுகிறது.

    யார் பிட்சையிடும்போது அந்த பாத்திரம் புல்லாகுதோ அப்போதான் சிவனின் கையோடு ஒட்டியிருக்கும் அந்த கபாலம் விலகும்னு விதி. அவரு தன் விதியை நொந்து காசிக்கு போகிறார். அங்கே ஸ்ரீ அன்னபூரணி தேவி அன்புடன் அவருக்கு சாப்பாடு போட கபாலம் நிரம்பி, தோஷமும் விலகிட்டதாம். இது நடந்ததும் ஒரு ஐப்பசி மாத பவுர்ணமி.

    தம்பி இன்னும் பழமொழியோட விளக்கத்திற்கு வரலை...

    அங்கேதானே வர்றேன். நாம சாப்பிடும் சாப்பாடுதான் ஆண்டவன். இத்தனை உழைப்பும் எதற்காகங்க எண்ஜான் வயிற்றுக்காகத்தானே.

    சிவனின் அன்னாபிஷேகத்தை தரிசிப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம். நல்ல மனத்தோடு நல்ல எண்ணங்களோடு, அன்போடு சமைக்கப்படும் உணவு ஒரு சொர்க்கம் மாதிரி ருசிக்குமாம்.

    நல்லா சொல்லு இப்போ சுடுதண்ணியைக் கூட சுகிலேதானே ஆர்டர் பண்றாங்க.

    அட இருங்க சார். அஹமன்னம், அன்னமே கடவுளின் வடிவம். அன்னமே தானாக இருக்கிறேன் என்று ஈசனே சொல்வதாக சாம வேதம் கூறுகிறது.

    நாம் வசிக்கும் இந்த உலகம் நிலம்,நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்று பஞ்ச பூதங்களால் ஆனது. திருமூலர் இதை அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்று அழகாக கூறியிருக்கிறார்.

    அந்த பஞ்ச பூதங்கள் ஒருமித்து செயல்பட்டு எல்லா உயிர்களுக்கும் உணவும் நீரும் குறைவின்றி கிடைக்கச் செய்ய இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தொடரப்படுவதே அன்னாபிஷேகம் ஆகும்.


    நிலத்தில் விதைக்கும் நெல், ஆகாயத்தில் இருந்து பொழியும் மழை நீரினால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியன் வெப்பத்தால் பால் இறுகி நெல்லாய் உயர்ந்து நிற்கிறது. அதன் பின் உமி நீக்கி அரிசியாக்கி மண்ணால் ஆன பானையில் நீரில் கலந்து, காற்றின் உதவியால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழ் உள்ள எல்லா உயிர்களுக்கும் உணவாகிறது.

    இப்போது சொல்லுங்கள் அன்னமும் பஞ்சபூதங்களோடு சேர்ந்ததுதானே. பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்ட இந்த அரிசி அன்னமாக இறைவனிடம் போய் சேருவதைப் போல, பஞ்ச பூதங்களை உள்ளடக்கிய உயிர்களும் ஒருநாள் இறைவனின் பாதம் போய் சேரவேண்டும்.

    உமி நீங்கி நெல்லாகி அரிசியாய் மாறி பக்குவப்படும் உணவைப் போல மனிதனும் பக்குவப்பட்டால் சொர்க்கம் அடையலாம் என்பதன் மாற்றம் தான் சோறு கண்டால் சொர்க்கம்.

    அட என்ன அருமையா சொல்லிகினேப்பா...

    முழு நிலவு நாளில் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதைக் காண்பவர்களுக்கு எந்த நோய் நொடியும் வராது, நினைத்தது நடக்கும் மோட்சம் கிட்டும் என்பதும் ஐதீகம்.

    சிவலிங்கத்தின் கீழ்ப்பகுதி-பிரம்ம பாகம்

    நடுப்பகுதி- விஷ்ணு பாகம்

    மேற்பகுதி - சிவபாகம்

    இந்த முன்று பிரிவாக பிரிக்கப்படும் சிவலிங்கத்தின் திருமேனியை மூடும் அளவிற்கு அன்னத்தை சாத்துவார்கள். வேத பாராயணம், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களை படித்து, தீபாராதனைச் செய்து பிரசாதமாக கொடுப்பார்கள். பிரசாதம் போக மீதமான அன்னத்தை திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைப்பார்கள். இதனால் நீர்வாழ் உயிரினங்களும், பலனடையும். சிலநேரம் பசியில் வாடும் ஏழைகளின் வயிறும் நிறையும்.

    சந்திரன் சாபம் மேற்கொண்டார் என்று சொன்னோம் அல்லவா, சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. அதன் மூலம் அன்னாபிஷேகம் செய்யும் போது சந்திரனைப் போல பலம் பெற்று ஒளிவீசி முழு ஆற்றலும் பெறுவார்கள் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.

    அன்னாபிஷேகத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு அரிசியும் ஒரு லிங்கமாகக் கருதப்படுவதால், அன்னா பிஷேகத்தை தரிசனம் செய்வது கோடி சிவ லிங்கத்தை தரிசனம் செய்வதற்கு சமம்.

    இனிமே சோறு கண்ட இடமே சொர்க்கம்னு சொல்லும் முன்னர் சிவபெருமானை நினைத்துக் கொள்ளுங்கள்.

    Next Story
    ×