என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • முருகப் பெருமானின் பெருமையைப் புகழ்ந்து பாடுவதில் கந்தர்கலிவெண்பா சிறந்து விளங்குகிறது.
    • 111 முதல் 122 வரை பாடல்களில் முருகப்பெருமானிடம் வேண்டுகோள்கள் இடம்பெறுகின்றன.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி மடம் பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கும். தமிழகத்தில் இருந்து சென்ற மாபெரும் மகான் குமரகுருபரர் உருவாக்கிய மடம் அது. சைவத்துக்கும், தமிழ் மொழிக்கும் நிகரற்ற தொண்டாற்றிய குமரகுருபரர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

    அவரது அந்த அற்புதங்களுக்கு எல்லாம் மூல காரணமாக இருந்தது திருச்செந்தூர் முருகனின் அருளாசியாகும். குமரகுருபரரின் வாழ்வில் சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் நடத்திய திருவிளையாடல் இன்றும் போற்றி புகழப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் எத்தனையோ பேர் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார்.

    உலகம் போற்றும் ஞானியர்கள் பலர் திருச்செந்தூர் புண்ணிய பூமியில் நடமாடி அருள் பெற்றுள்ளனர். அவர்களில் சைவ சமயம் நாடு முழுவதும் தழைக்குமாறு காசி வரை சென்று மடாலயங்கள் நிறுவியவரும், சிங்கத்தின் மீது ஏறி முகலாய மன்னரைப் பிரமிக்க வைத்தவரும், பிள்ளைத் தமிழ் பாடி மதுரை மீனாட்சி அம்மனை மனம் குளிர வைத்தவருமான குமரகுருபர சுவாமிகளுக்கு திருச்செந்தூரிலே முருகப் பெருமான் அருளிய நிகழ்ச்சி அடியார்களுக்கு பக்திப் பரவசமூட்டும் நிகழ்ச்சியாகும்.

    சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர், திருச்செந்தூரில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் பகுதி அந்த கால கட்டத்தில் பாண்டிய நாட்டுத் திருத்தலங்களுள் மிகச்சிறந்து விளங்கியது. அங்கு சைவ சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த சண்முக சிகாமணிக் கவிராயர் என்பவர் தனது மனைவி சிவகாம சுந்தரியுடன் வாழ்ந்து வந்தார். திருமணம் ஆகி நீண்ட நாட்கள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் அவர்கள் மிகவும் கவலைப்பட்டனர்.

    குழந்தை பேறுக்காக அவர்கள் தங்களது குலதெய்வமான திருச்செந்தூர் முருகனை வேண்டி வணங்கி விரதம் இருந்து வழிபட்டனர். அதன் பயனாக 1615-ம் ஆண்டு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் ஆண் குழந்தையைப் பெற்ற மகிழ்ச்சி அவர்களுக்கு நீடிக்கவில்லை.

    ஏனெனில் குழந்தை பிறந்து 5 வயதாகியும் அது வாய் பேசாமல் மவுனமாக இருந்தது. தங்கள் அருமைக் குழந்தையின் மழலை மொழியைக் கேட்டு இன்புற முடியவில்லையே என்று அவர்கள் மிகவும் ஏங்கினார்கள். இதற்கிடையில் கவிராயர் தம்பதிகளுக்கு மேலும் ஒரு குழந்தை பிறந்தது. முதல் குழந்தை 5 வயதாகியும் பேசாத நிலையில் இரண்டாவது குழந்தை இரண்டு ஆண்டுகளிலேயே கணீர், கணீரென பேசத் தொடங்கியது. இதனால் ஐந்து வயது நிரம்பிய மூத்த குழந்தைக்குப் பேச்சு வரவில்லையே என்று கவிராயரும் அவரது மனைவியும் தவியாய்த் தவித்தனர்.

    தங்கள் தவிப்பு நீங்க, அவர்கள் அந்த மவுனக் குழந்தையை அழைத்துக் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றனர். அங்கு கோவில் வளாகத்தில் தங்கி பக்தியுடனும் சிரத்தையுடனும் நாற்பது நாட்கள் கடும் விரதம் இருந்தனர். நாட்கள் உருண்டோடின. நாற்பது நாட்களாகியும் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. இதனால் அந்த தம்பதிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.

    "முருகா! விடியும் முன் எங்கள் குழந்தைக்குப் பேச்சு வராவிட்டால் திருச்செந்தூர் கடலில் விழுந்து மூழ்கி எங்கள் உயிரை மாய்த்துக் கொள்வோம். அதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை" என்று கதறினார்கள். மறுநாள் காலை கடலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் மன நிலைக்கு அவர்கள் வந்து இருந்தனர்.

    ஆனால் அவர்களது குழந்தைக்கு தூக்கம் வரவில்லை. அவன் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வெளிப் பகுதியில் கடலோரத்தில் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கே திடீரென கண்ணை கூசச்செய்யும் அளவுக்கு மிகப்பெரிய பேரொளி தோன்றியது. அந்த ஒளியில் இருந்து முருகன் அருட்காட்சி கொடுத்தார். கண்களில் கண்ணீர் சொரிய, வாய் பேசமுடியாத அக்குழந்தை, ஜோதிக்கெல்லாம் ஜோதியான பேரொளியைக் கண்டு தன் இருகரம் கூப்பித் தொழுதது.

    புன்னகையுடன் காட்சி அளித்த முருகப் பெருமான் குழந்தையை நோக்கி, நீ யார்? என்று கேட்டார். அதுவரை பேசாமல் மவுனமாக, ஊமையாக இருந்த குழந்தை 'அடியேன்' என்று சொல்லி முருகனைத் தொழுது வணங்கியது. முருகப் பெருமானின் காலடி பணிந்து எழுந்தது. முருகப் பெருமான் குழந்தையை 'குருபரா' என்று அன்போடு அழைத்து, நாவில் "சரவண பவ" எனும் சடாட்சர மந்திரம் எழுதி ஆசிர்வதித்தார்.

    முருகப் பெருமானின் அருட்காட்சியும் ஆசியும் கிடைத்த அந்த நிமிடம் முதல் அந்த சிறுவனிடம் மாற்றம் ஏற்பட்டது. அவனுக்குள் புதிய ஞானஒளி பிறந்தது. அதோடு மவுனம் விலகி பேச்சும் வந்தது. அதன் காரணமாக உலக ஞானம் அனைத்தும் கற்காமலேயே அந்த சிறுவனுக்கு தோன்றியது.

    திருச்செந்தூர் முருகன் பூ ஒன்றினை காட்டி சிறுவனைப் பார்த்து சைவம் தழைக்க பாடுக என்று கூறி மறைந்தார். இதைத் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பேசாமல் இருந்த சிறுவன் பேசத் தொடங்கினான். முருகா.... முருகா... என்று அவன் வாயில் இருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.

    பொழுது விடிந்தது. தங்கள் குழந்தைக்கு பேச்சு வந்து விட்டதை கண்டு கவிராயர் தம்பதியினர் மிகவும் மகிழ்ந்தனர். முருகப் பெருமானின் திருவருளை எண்ணி வியந்தனர். குருவருள் பெற்ற குமரனை, 'குமரகுருபரன்' என்று புதிய பெயரிட்டு அழைத்தனர்.

    அப்போது மீண்டும் ஒரு அற்புதம் நிகழ்ந்தது.

    அதுவரை பேச்சு வராத சிறுவனாக இருந்த குமரகுருபரர் திடீரென்று பாடத் துவங்கினார். "பூமேவும் செங்கமல..." என்பது அந்த பாடலின் முதல் வரியாக அமைந்தது. சிறிது நேரத்தில் பாடல் முழுவதையும் பாடி முடித்தார். அந்த பாடல்களின் தொகுப்பே 'கந்தர் கலிவெண்பா' ஆயிற்று.

    முருகப் பெருமானின் பெருமையைப் புகழ்ந்து பாடுவதில் கந்தர்கலிவெண்பா சிறந்து விளங்குகிறது. திருச்செந்தூரில் எழுந்தருளி இருக்கும் கந்தக்கடவுளைக் கலிவெண்பாவால் பாடியதால் 'திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா' எனப் பெயர் பெற்றது.

     

    சுந்தர் கலிவெண்பாவினுள், குமரகுருபரர் சைவச் செந்நெறிக் கொள்கைகளைத் தொகுத்து கூறி இருப்பது போலப் பிறர் எவரும் சொல்லவில்லை எனப் பேரறிஞர்கள் கூறியுள்ளனர். இது ஒரு தோத்திர நூல்,

    122 பாடல்களை உடையது. தொடக்கத்தில் 36 பாடல்களில் சைவசித்தாந்தக் கருத்துக்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. பரம்பொருளும், முருகப்பெருமானும் வேறில்லை என்பதை உணர்த்தும் வகையில் கூறப்படுகிறது.

    37 முதல் 58 வரையுள்ள பாடல்களில் முருகப்பெருமானின் திருவடிவம் எழில்பெற எடுத்துரைக்கப்படுகிறது. திருமுடி தொடங்கித் திருவடி வரையில் வருணிக்கப்படுகிறது. ஆறு திருமுகங்கள், பன்னிரு கரங்கள் முதலியன வற்றின் அருள் செயல்கள் இங்குப் பாராட்டப்படுகின்றன.

    59 முதல் 65 வரையுள்ள பாடல்களில் இறைவன் அண்ட சராசரத் தொகுதி முழுவதிலும் பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அருள்வளக்காட்சி இடம் பெறுகிறது.

    66 முதல் 74 வரையுள்ள பாடல்களில் இறை வனது பத்துவகை (தசாங்கம்) அரசு உறுப்புகள் கூறப்படுகின்றன. இது திருத்தசாங்கம் எனப்படும்.

    75 முதல் 110 வரை உள்ள பாடல்களில் கந்தபுராண வரலாற்றுச் செய்திகள் சுருக்கிச் சொல்லப்படுகின்றன.

    111 முதல் 122 வரை பாடல்களில் முருகப்பெருமானிடம் வேண்டுகோள்கள் இடம்பெறுகின்றன.

    இவ்வாறு, இச்சிறிய நூலில் இறை இயல்பும், முருகனின் பெருவடிவும், திருத்தசாங்கமும். கந்தபுராணச் சுருக்கமும். வேண்டுகோளும் முறையே அமைந்து விளங்குகின்றன.

    111 முதல் 122 வரை உள்ள பாடல்களில் காணப்படும் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    ஆறு திருத்தலங்களையும் தரிசித்துச் சடட்சரத்தை அன்போடு சொல்லுபவர்களுடைய உள்ளத்தில் குடி கொண்டு வாழ்பவனே! திருச்சீரலைவாய் என்னும் செந்தில் பதியைக் காக்கும் செவ்வேளே! கோடிக்கணக்காக வரும் பிறவிப்பகையும் அகால மரணமும், பல கோடி இடையூறுகளும், பலவான நோய்களும், பல கோடியான பாவச்செயல்களும், சூனியமும், பாம்பும் வலிமையுடைய பூதமும், தீயும் நீரும், போர்செய்யும் படையும், தீமை நீங்காத கொடிய விஷமும், துஷ்டமிருகம் முதலிய எவையும் எவ்விடத்திலாயினும் எம்மை வந்து எதிர்க்குமாயின் அவ்விடத்தில் மயில் வாகனமும், பன்னிரண்டு திருத்தோள்களும் கூரிய வேலாயுதமும், சுச்சை அணிந்த அழகிய இடுப்பும், சிறிய திருவடிகளும், சிவந்த அழகிய கரங்களும், பன்னிரண்டு கருணைபொழியும் கண்களும், ஆறு திருமுகங்களும்,

    எதிரில் தோன்றும் படியாக எழுந்தருளி, நேரும் இடர்களையெல்லாம் தூளாக்கி, எவ்வரம் கேட்பினும் அவ்வரத்தைத் தந்து, மகிழ்ச்சியோடு என் உள்ளத்தில் புகுந்திருந்து, பலவகைப்பட்ட காவியங்களின் தொகுதியும், தமிழ்ப்புலமையும் தந்தருளி, நல்லொழுக்கத்தையும் உதவி, இப்பிறப்பில் உண்டாகின்ற அகப்பற்று, புறப்பற்று ஆகிய இரண்டினையும் நீக்கி, மும்மலத் தொடர்புகளையும் அகற்றுவித்து, அடியாருடன் கூட்டுவித்து, அவர்கள் அனுபவிக்கும் பேரின்பத்தை அடியேனும் அனுபவிக்கச் செய்து, திருவடித் தொண்டானாக ஆட்கொண்டருளி அடியனாகிய எனக்கு ஆண்டவனாகிய நீ முன்னின்று திரு அருள்புரிவாயாக.

    இவ்வாறு கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபரர் முருகனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை பாட, பாட புண்ணியம் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

    முருகனின் திருவருளால் அனைத்தையும் கற்காமலேயே உணர்ந்த குமரகுருபரர் தன் ஊரில் எழுந்தருளியிருக்கும் கைலாசநாதர் மீது 'கயிலைக் கலம்பகம்' என்ற நூலைப் பாடியருளினார். தூய தவநெறி வாழ்வை மேற்கொள்ள விரும்பிய அவர், தமிழகம் முழுவதும் கோவில், கோவிலாக புனித யாத்திரை செல்ல தீர்மானித்தார். இதற்காக பெற்றோரின் அனுமதி பெற்று திருத்தலந்தோறும் சென்று இறைவனைத் தொழுதார்.

    ஒரு சமயம் திருச்செந்தூர் சென்றபோது, தனக்கு வழிகாட்ட கூடிய குருவைக் காட்டி அருளுமாறு முருகப் பெருமானிடம் வேண்டிக் கொண்டார். 'உனது குருவை நீ காணும்போது அவரது கேள்விக்கு பதில் சொல்ல இயலாத நிலை ஏற்பட்டு நீ மவுனமாகி அவரையே உனது குருவாகக் கொள்வாய்' என்னும் முருகனின் அருள்வாக்கு அவருக்குக் கிடைத்தது.

    திருச்செந்தூர் முருகன் உத்தரவுப்படி குமர குருபரர் விரைவிலேயே தன் குருவை கண்டு பிடித்தார். அந்த அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.

    • வியர்வை ஒரு மனிதனை ஆரோக்கிய மனிதனாக மாற்றுகிறது.
    • உடம்பும் மனதும் தொடர்ந்து பயன்படுத்தப்படவில்லையெனில் அவை நோய்களின் கூடாரமாகிவிடும்.

    உப்புக் கரிக்கும் வியர்வையைக்கூடச் சுவைமிக்கதாக மாற்றிவிடும் உழைப்பின் மேன்மை அறியக் காத்திருக்கும் அன்பு வாசகர்களே! வணக்கம்.

    வாழப்பிறந்த ஒவ்வொருவரும் அன்றாடம் உழைக்க வேண்டும்; குறைந்தபட்சம் அவரவர் உணவுக்கேற்ற உழைப்பையாவது நல்க வேண்டும் என்று பேரறிஞர்கள் வலியுறுத்துவர். உழைப்பை 'உடல் உழைப்பு', 'மூளை உழைப்பு' என இரண்டு வகையாகப் பகுத்துக் கூறலாம். உடல் உழைப்பில், கை கால் மற்றும் உடல் அங்கங்களின் அசைவுகள் பெருகியதாகக் காணப்படும்; மிகுதியாக உடல் உழைப்புக் கூடினால், உடம்பில் வியர்வை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும்; தசைகள் மற்றும் கை கால்களில் அசதி பெருகி, வலி உண்டாகும். ஆனால் மூளை உழைப்பில், அணிந்திருக்கும் ஆடையில்கூட அழுக்குப்படாமல், உடம்பில் ஒரு துளி வியர்வைகூட எட்டிப்பார்க்காமல், குளிர் காற்றாடி அறையில் சுகமாக உழைத்து விடலாம்; ஆனால் மூளை உழைப்பின் பக்கவிளைவுகளாக, பரபரப்பு, ரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு, மாரடைப்பு போன்ற நோய்கள் அழையா விருந்தாளிகளாக வந்து உடம்பில் முகாமிட்டு விடக்கூடும்.

    உடல் உழைப்பைக் 'கடின உழைப்பு' என்றும் மூளை உழைப்பை 'நளின உழைப்பு' என்றும் வகைப்படுத்தி வன்மை மென்மை காணலாம். இன்றைய டிஜிட்டல் உலகில், மூளை உழைப்புப் பெருகி, உடல் உழைப்புக் குறைந்துவிட்டது. பொதுவாக உழைப்பு என்பதே நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கின்ற கடின உழைப்பையே குறிக்கும். இன்றைய பெரும்பான்மையான உழைப்பு முறைகள் எந்திரச் சார்புடையவையாக மாறிவிட்டதால், கைகால்களில் மண்ணோ, சகதியோ, அழுக்கோ, தூசோ பட்டுவிடாமல் பணி முடித்துவிடுகிற வசதிகள் பெருகிவிட்டன. அதனால் வியர்வைக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் குறைந்து கொண்டிருக்கின்றன. வயல்வெளி மற்றும் தொழிற்சாலைகளிலும்கூட ஆள்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடுகிற கருவிகளின் வருகையே பெருத்துவிட்டது.

    மனிதர்கள் பணிக்குச் செல்வதற்குக்கூட நடை மற்றும் மிதிவண்டித் துணையின்றி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன வசதிகளுக்குப் பழகி விட்டதால், துளியளவு வியர்வைக்குக்கூட உழைக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. உழைப்பு இப்போது சுகவாசிகளின் பொழுது போக்குப்போல ஆகிவிட்டது. ஆயினும் உடல் உழைப்பிற்கு வாய்ப்பின்றிப் போகிறவர்கள், அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலமும், நடைப்பயிற்சி மற்றும் மெல்லோட்டப் பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலமும் வியர்வை சிந்தும் காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு மனிதருக்கும் உழைப்பு எவ்வளவு அவசியமானதோ, அதைவிட அவசியமானது அவர்கள் வியர்வை சிந்த வேண்டியதும் ஆகும். வியர்வை ஒரு மனிதனை ஆரோக்கிய மனிதனாக மாற்றுகிறது. உடல் உழைப்போ மூளை உழைப்போ எந்த உழைப்பாயினும் வியர்வை சிந்தப்படும்போது உடலுக்குள் பலவிதமான நன்மைகள் உருவாவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். நாம் உடல் உழைப்பிலோ அல்லது உடற்பயிற்சி, நடைப்பயிற்சிகளில் ஈடுபடும்போதோ, இதயத்துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவை இயல்பைவிட அதிகமாக இயங்கத் தொடங்குகின்றன; அதனால் நமது உடம்பின் இயல்பான வெப்பநிலை அதிகமாகிறது; அந்த அதிகமாகும் வெப்பநிலையைக் குளிர்வித்துச், சமப்படுத்துவதற்காக நமது உடம்பே வியர்வையைச் சுரக்கும் வேலையில் ஈடுபடுகிறது. தோலில் சுரக்கும் வியர்வை ஆவியாகும்போது உடம்பு குளிர்நிலையை உணர்கிறது. ஆக உழைப்பினால் உண்டாகும் வியர்வை நமது உடம்பைத், தட்ப வெப்பச் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது; மேலும் உடம்பின் தோலில் பளபளப்பும் பெருகுகிறது.

     

    உடம்பில் படிகின்ற தூசுகள் மற்றும் நோய்க்கிருமிகள் தோல்களின் வழியே புகுந்து உடம்பைக் கெடுத்து விடாமலிருக்க வியர்வைச் சுரப்பிகள் உதவுகின்றன. தோலில் சுரக்கும் வியர்வை நமது தோல்களில் உண்டாகும் கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கித், தோல் ஆரோக்கியத்திற்கு அடித்தளமாகத் திகழ்கிறது. உடம்பின் தோல்வழியே நச்சுக்கிருமிகள் வெளியேற்ற த்திற்கான சிறந்த செயலையும் வியர்வை ஆற்றுகிறது.

    வியர்வை தோன்ற உழைத்துவிட்டு அல்லது உடற்பயிற்சி செய்துவிட்டு, சிறிதுநேர இளைப்பாறுதலில் ஈடுபடும்போது, மனம் அதீதப் புத்துணர்வு அடைவதை உணரலாம்; மனத்தில் அவ்வப்போது உண்டாகும் விரக்தி, மன அழுத்தம், தீரா ஆவல், சோம்பல்தன்மை ஆகிய அனைத்தும் வியர்வை வெளியேறியபின் இல்லாமல் போகும். அடுத்தடுத்த வேலைகள் பெரும் நெருக்கடிகளாக இருந்தாலும் அவற்றை விருப்பத்தோடு செய்வதற்கான புத்துணர்ச்சியும் புது நம்பிக்கையும் உண்டாகும். உடம்பில் தேவையற்ற பகுதிகளில் சேர்ந்துள்ள கொழுப்பைக் கரைத்து, எடையைக் குறைத்து, பொருத்தமான உருவப்பாங்கை நாம் பெறுவதற்கும் வியர்வை வெளியேற்றம் பெருமருந்தாக உதவுகிறது.

    வியர்வை என்றாலே நாற்றமடிப்பது மற்றும் உப்புக்கரிப்பது என்று நம்மில் பெரும்பாலோர் வியர்வையை வெறுக்கவும் விலக்கவும் செய்கிறோம். உண்மையில் வியர்வை என்பதே உடம்பின் கழிவுகள் மற்றும் நச்சுத்தன்மை வெளியேற்றம்தான். ஆனால் உடல் உழைப்போ உடற்பயிற்சியோ செய்யாமல், வியர்வை வெளியேற்றப்படாமல் இருந்தால்… நஷ்டம் நம் உடம்புக்குத் தானேயொழிய வேறு அடுத்தவருக்கில்லை. அதனால் அன்றாடம் நமது உடம்பில் இருந்து அவசியம் வியர்வை வெளியேற்றப்பட வேண்டும்; அதுவும் நமது சம்பாத்தியத்திற்கான உழைப்பின்மூலம் வியர்வை சிந்தப்பட்டால் அதைவிடச் சிறந்த காரியம் வேறு எதுவுமில்லை.

    ஒரு நகரில் ஒரு பெரும் செல்வந்தர். தன்னுடைய சொந்த உழைப்பின் மூலமாகவே உயந்த நிலைக்கு வந்தவர். அவருக்கு ஒரே ஒரு மகன். படிப்பில் பெரிதாக ஆர்வமில்லை. இளைஞன் ஆனதும் தொழில் கற்று வருவதற்காக அவனை நண்பர் ஒருவரின் நிறுவனத்திற்கு ஆறு மாதத்திற்கு வேலைக்கு அனுப்பினார். செல்வந்தரின் மகன் அந்த நிறுவனத்தில் எந்தவித ஈடுபாடும் இல்லாமல், எந்தவிதமான வேலையும் செய்யாமல் ஆறு மாதங்களைக் கடத்திவிட்டு வீடு திரும்பினான். செல்வந்தரின் நண்பர், வேலை செய்யாவிட்டாலும் ஆறுமாதத்திற்கான கூலியாக ஒரு பவுன் தங்கக் காசைக் கொடுத்தனுப்பினார். வீட்டுக்கு வந்த மகன், தன் தந்தையிடம் அந்த ஒரு பவுன் தங்கக் காசைத் தந்தான்; மகனிடமிருந்து காசை வாங்கிய தந்தை அலட்சியமாக அதைக் குப்பைத்தொட்டிக்குள் வீசியெறிந்தார்; எந்தச் சலனமுமில்லாமல் மகன் தனது அறைக்குள் சென்றுவிட்டான்.

    அடுத்து ஒரு வாரம் கழித்து, அந்தச் செல்வந்தர், தன்னுடைய இன்னொரு நண்பனின் நிறுவனத்திற்குத் தன் மகனை மூன்றுமாத வேலைக்கு அனுப்பி வைத்தார். செல்வந்தரின் மகனோ அங்கும் வழக்கம்போல எந்த வேலையும் செய்யாமல் மூன்றுமாதம் கழிந்தவுடன் வீடு திரும்பினான். இந்த முறை அவன் வேலை பார்த்ததற்குக் கூலியாக இரண்டு பவுன் தங்க நாணயங்களைப் பெற்று வந்தான். தந்தையிடம் மகன் அந்த நாணயங்களைக் கொடுக்கத், தந்தையும் வழக்கமான அலட்சியத்தோடு அவற்றை வாங்கிக் குப்பைத் தொட்டியிலேயே வீசியெறிந்தார். மகனும் எதிர்வினை எதுவுமின்றித் தன் அறைக்குச் சென்றுவிட்டான்.

    அடுத்த ஒரு வாரத்தில், ஒரு மாதம் வேலைகற்று வருவதற்காக அறிமுகமில்லாத ஒரு நபர் நடத்தும் நிறுவனத்திற்கு மகனை அனுப்பி வைத்தார் செல்வந்தர். அங்கு மகனைப் பாடாய்ப்படுத்திக், கசக்கிப் பிழிந்து வேலை வாங்கினார் புதிய முதலாளி. இதுவரை இருந்த இரண்டு முதலாளிகளும் நண்பனின் மகன் என்பதால் வேலை வாங்காமல் கூலியைமட்டும் கொடுத்தனுப்பினர். ஆனால் இவரோ நன்றாக வேலையை வாங்கிக் கொண்டு, அரைப் பவுன் தங்க நாணயத்தைக் கூலியாகக் கொடுத்தனுப்பினார். வீட்டுக்கு வந்த மகன், தன் தந்தையிடம் தான் பெற்றுவந்த கூலி அரைப் பவுன் தங்க நாணயத்தை ஆவலாகக் கொடுத்தான். அதை அலட்சியமாகப் பெற்றுக்கொண்ட தந்தை வழக்கம் போலக் குப்பைத்தொட்டியில் வீசியெறிந்தார்.

    இதைப் பார்த்தவுடன் மகனுக்கு வந்ததே பாருங்கள் கோபம்! அதை எந்த அளவைக் கருவியையும் வைத்து அளந்துவிட முடியாது. "உழைப்பின் அருமை உங்களுக்குத் தெரியுமா?. இந்த அரைப் பவுனைச் சம்பாதிப்பதற்காக இந்த ஒரு மாதகாலம் நான் எப்படி உழைத்தேன் தெரியுமா?, உங்களுக்கு எங்கே தெரியும்!. தெரிந்திருந்தால் அந்தக் காசை வீசியெறிந்து என் உழைப்பை உதாசீனப் படுத்தியிருப்பீர்களா?" என்று கூச்சல் போடத் தொடங்கி விட்டான். மகன் திட்டத் திட்டத் தந்தைக்கு மகிழ்ச்சிப் பிரவாகம் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடியது.

     

    முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

    குப்பையில் வீசிய அரைப் பவுனை, மரியாதையோடு தேடியெடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, " மகனே! இதற்குமுன் நீ ஒரு பவுன், இரண்டு பவுன் என்று மதிப்பில் கூடிய தங்க நாணயங்களைக் கூலியாகப் பெற்றுவந்து இரண்டுமுறை என்னிடம் தந்தபோது அவற்றை அலட்சியமாக வீசியெறிந்தேன்; அப்போதெல்லாம் நீ கோபப்படவில்லை. இப்போது இந்த அரைப் பவுனுக்கு மட்டும் ஏன் இத்தனை கோபம்?" கேட்டார் தந்தை. "அந்தக் காசுகளெல்லாம் நான் உழைக்காமல் பெற்று வந்தவை; ஆனால் இந்த அரைப் பவுனோ நான் உழைத்துச் சம்பாதித்தது. இந்த நாணயம் தங்கத்தால் உருவானது அல்ல; எனது உழைப்பின் வியர்வையினால் வார்த்தெடுக்கப்பட்டது" என்றான் மகன்." மகனே! நம்மிடம் உள்ள செல்வம் நம் உழைப்பால் உருவாக்கப்பட்டிருந்தால்தான் அதன் உண்மை மதிப்பையும் மரியாதையையும் நாம் உள்ளபூர்வமாக உணர்ந்திருப்போம்!. அதற்காக நான் நடத்திய சிறு தேர்வுதான் இந்த உதாசீன நாடகம்" என்றார் தந்தை.

    உலோகங்களில் இரும்பு வலிமையானது தான் என்றாலும் அது பயன்படுத்தப்படாதபோது துருப்பிடித்து அழிந்து போவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதைப்போல உடம்பும் மனதும் தொடர்ந்து பயன்படுத்தப்படவில்லையெனில் அவை நோய்களின் கூடாரமாகிவிடும். மெய் வருந்த உழைப்பதற்கு எப்போதும் கூலி உண்டு; அது பொருள்களாக, செல்வமாக, காசு பணமாக இருக்கலாம். ஆனாலும் அந்தச் சம்பளத்தோடு உடல் உழைப்பின் பரிசாக நமக்குக் கிடைக்கும் அரிய அமிர்தம் வியர்வையே ஆகும். வியர்வை உப்புக்கரிக்கும் என்றாலும் அது தரும் நலமான உதவிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அயராத உழைப்பினால் நிறை செல்வம் ஈட்டலாம்!

    ஆனால் வியர்வை சொட்டச் சொட்ட உழைப்பதனால் நீளாயுள் கைகூடும்!

    தொடர்புக்கு,

    94431 90098

    • வெஸ்லி பள்ளியில் படிக்கும்போது திரு.வி.க.வுக்கு யாழ்ப்பாணம் சதாவதானம் நா. கதிரைவேல் பிள்ளையின் அறிமுகம் ஏற்பட்டது.
    • திரு.வி.க.வின் இறுதிக் காலங்களில் அவருக்குப் பார்வையிழப்பு நேர்ந்தது.

    திரு.வி.க. என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் அமரர் திரு.வி. கல்யாணசுந்தரனார் மிகச் சிறந்த தமிழறிஞர். சிறந்த எழுத்தாளர். மேடைப் பேச்சாளர். சிறந்த பத்திரிகையாளர்.

    அவரது இனிய தமிழ்நடை காரணமாக `தமிழ்த் தென்றல்` என்று அழைக்கப்பட்டவர். கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பத்திரிகையுலக குரு திரு.வி.க. தான்.

    கல்கி, திரு.வி.க.வை `ராயப்பேட்டை முனிவர்' என்றே மரியாதையுடன் குறிப்பிட்டார். தம் குருவைப் பற்றிக் கூறும்போது முனிபுங்கவர் என்று கல்கி சொல்வது வழக்கம். மறைமலையடிகள் இன்னும் ஒரு படி மேலே போனார். `திரு.வி.க.வை நாம் தெய்வமாகக் கொள்வோமாக!' என்கிறார் அவர்.

    இப்படி மாபெரும் அறிஞர்களால் புகழ்ந்து கொண்டாடப்பட்ட திரு.வி.க.வின் மூன்று முக்கியமான பெருமைகள் என்ன தெரியுமா?

    1. அவருக்குச் சொந்த வீடு கிடையாது. 2. அவர் செருப்புக் கூட அணியமாட்டார். 3. கதராடையையே உடுத்துவார்!

    திருவாரூர் விருத்தாசலம் கலியாண சுந்தரனார் என்ற பெயரின் சுருக்கமே திரு.வி.க. என்பது! விருத்தாசலம் என்பது ஊரல்ல. அவரது தந்தையின் பெயர் அது.

    1883 ஆகஸ்ட் 26- பிறந்த திரு.வி.க., 1953 செப்டம்பர் 17-ல் மறைந்தார். வாழ்ந்தது எழுபதே ஆண்டுகள். அதற்குள் எழுநூறு ஆண்டு வாழ்ந்தாலும் செய்ய முடியாத சாதனைகளைச் செய்தவர் அவர்.

    தந்தை விருத்தாசலத்தின் முதல் மனைவி பச்சையம்மாள். அவள் இறந்தபின் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் தந்தை. இரண்டாம் மனைவி சின்னம்மாள். இரு மனைவியர் மூலமாகவும் விருத்தாசலத்திற்குப் பன்னிரண்டு குழந்தைகள் பிறந்தன. அந்தப் பன்னிருவரில் ஒருவர் திரு.வி.க.

    திரு.வி.க. காந்தியம், பொதுவுடைமைத் தத்துவம் இரண்டிலும் ஈடுபாடு உடையவர். நாராயணன் என்ற திரு.வி.க. அன்பர் தன் மகளுக்குப் பெயர் சூட்டும்படித் திரு.வி.க.வை வேண்டியபோது அவர் வைத்த பெயர் `மார்க்சியா காந்தி!`. தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்தவர் திரு.வி.க.தான்.

    ஆங்கிலம் அரசு மொழியாகக் கோலோச்சிய அக்காலத்திலேயே சென்னை மகாஜன சங்கக் கூட்டத்தில் `இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேச வேண்டும்` என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தவர். திலகர்தான் திரு.வி.க.வின் அரசியல் குரு.

    தொடக்கத்தில் தந்தையிடமே கல்வி கற்றார். பின் இராயப்பேட்டையில் ஆரியன் தொடக்கப் பள்ளியிலும் வெஸ்லி பள்ளியிலும் படித்தார். உடல் நலக்குறைவால் படிப்பு தடைப்பட்டது...

    வெஸ்லி பள்ளியில் படிக்கும்போது திரு.வி.க.வுக்கு யாழ்ப்பாணம் சதாவதானம் நா. கதிரைவேல் பிள்ளையின் அறிமுகம் ஏற்பட்டது. சின்னப் பிள்ளையான திரு.வி.க.வின் தமிழார்வத்தால் கதிரைவேல் பிள்ளை கவரப்பட்டார். அவரிடம் தனிப்பட்ட முறையில் தமிழ்க் கல்வி கற்கலானார் திரு.வி.க. கதிரைவேல் பிள்ளை காலமான பிறகு மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ் சைவப் பாடம் கேட்டார்.

    பாம்பன் சுவாமிகளிடம் உபநிடதமும், அப்துல் கரீம் என்பவரிடம் குரானும் கற்றார். அன்னிபெசன்ட் அம்மையாரின் நட்புறவும் மறைமலை அடிகளாரின் தொடர்பும் இவரை அறிவில் சிறந்தோங்கச் செய்தன.

    முதலில் கணக்கராகப் பணிபுரிந்து வந்தார். பின் திலகரின் சுதந்திரச் சிந்தனைகளால் கவரப்பட்டு வேலையை உதறினார். சுதந்திரப் போரில் தீவிரமாக ஈடுபடலானார்.

    பின்னர் சென்னை இராயப்பேட்டையில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியரானார். பிறகு பதவி உயர்வு பெற்று, இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகவும் ஆனார். அதன் பின் பத்திரிகைகளில் பணியாற்றலானார். `தேசபக்தன்` பத்திரிகையில் இரண்டரை ஆண்டு பணிபுரிந்தார். பின் திராவிடன், நவசக்தி போன்ற இதழ்களில் ஆசிரியரானார். சுதந்திர எழுச்சியை ஊட்டக்கூடிய எழுத்துக்களை எழுதிக் குவித்தார். இருபது ஆண்டுகள் நவசக்தியை நடத்தினார். எழுத்துக்களால் தேசபக்திக் கனலை மூட்டினார். ஆனால் அவர் வாழ்வில் சிறை செல்லும் சந்தர்ப்பம் நேரவில்லை...

    சென்னை வந்த காந்தியடிகள் திரு.வி.க.விடம் `நீங்கள் எந்த மொழிப் பத்திரிகையில் ஆசிரியராக இருக்கிறீர்கள்?` என்று கேட்டார். `தேசபக்தன் என்கிற தமிழ்ப் பத்திரிகை!` என்றார் திரு.வி.க. `அப்படியானால் நான் மேடையில் பேசும்போது என் ஆங்கிலப் பேச்சை நீங்கள் தமிழில் மொழிபெயருங்கள்!` எனப் பணித்தார் காந்தி.

    காந்தி ஆங்கிலத்தில் பேசப் பேச உடனுக்குடன் வாக்கியம் வாக்கியமாகத் தமிழில் சரசரவென்று மொழிபெயர்க்கலானார் திரு.வி.க. அவரது மொழிபெயர்ப்பைக் கேட்டு மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்கள். காந்தி தமிழில் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த அழகிய மொழிபெயர்ப்பு.

    திரு.வி.க. `தமிழ்த் தென்றல்` என்று அழைக்கப்பட்டவர் அல்லவா? காந்தியின் ஆங்கிலம் திரு.வி.க.விடமிருந்து தமிழ்த் தென்றலாய்த் தவழ்ந்து வந்தது.

    அவர் மொழிபெயர்ப்பு மக்களிடையே பெற்ற செல்வாக்கைப் பார்த்து மகிழ்ந்த மகாத்மா அதன்பின் திரு.வி.க.வை எப்போது சந்தித்தாலும் `என்ன மொழிபெயர்ப்பாளரே? நலமா?` என்றுதான் கேட்பாராம்... உறவினர்கள் திரு.வி.க.வின் துறவு ஆர்வத்தை மாற்றி கமலாம்பிகை என்ற பெண்ணை மணம் செய்து வைத்தார்கள். அன்பான மனைவி கிடைத்தும் திரு.வி.க.வின் இல்லற வாழ்வு சோபிக்கவில்லை. ஆணும் பெண்ணுமாக அடுத்தடுத்து குறுகிய கால இடைவெளியில் இரு குழந்தைகள் பிறந்து இறந்தன. ஆண் குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் கண்ணை மூடிவிட்டது. பெண் குழந்தை ஓராண்டு வரை மட்டுமே உயிர்வாழ்ந்தது.

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    அந்தச் சோகங்களைத் தாங்க இயலாமலோ என்னவோ மிகக் குறுகிய காலத்தில் மனைவியும் இறந்தார். மனைவி காலமானபோது திரு.வி.க.வுக்கு 35 வயதுதான். பலரும் வற்புறுத்திய போதும் மறுமணம் புரிந்துகொள்ள மறுத்துவிட்டார் அவர்...

    திரு.வி.க. ஐம்பத்தாறு நூல்கள் எழுதிய மாபெரும் எழுத்தாளர். அவர் எழுதிய ஒவ்வொரு நூலும் முக்கியமானதுதான். தமது ஆசிரியரான நா. கதிரைவேல் பிள்ளையின் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதியுள்ளார். `மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும், நாயன்மார் வரலாறு` போன்றவை அவர் நூல்களில் சில. `பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல் திரட்டும் பத்திரகிரியார் புலம்பலும்` என்ற நூலைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். திருக்குறள் குறித்த அவர் நூல்களும் குறிப்பி டத்தக்கவை.

    `தேசபக்தாமிர்தம், இந்தியாவும் விடுதலையும்` போன்ற அரசியல் நூல்கள், `முருகன் அல்லது அழகு, உள்ளொளி, இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், நினைப்பவர் மனம், தியானம், ஆலமும் அமுதமும்` போன்ற சமய நூல்கள் என அவரது நூல்கள் பலதரப்பட்டவை.

    `முருகன் அருள்வேட்டல், திருமால் அருள்வேட்டல், சிவன் அருள்வேட்டல், கிறிஸ்துவின் அருள்வேட்டல், பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியமும், முதுமை உளறல், படுக்கைப் பிதற்றல்` உள்ளிட்ட பல செய்யுள் நூல்களும் அவரது படைப்புகளே. `இலங்கைச் செலவு` என்ற பயண இலக்கிய நூல் பெரிதும் பேசப்பட்ட நூல்.

    இளமை மணத்தைத் தீவிரமாக எதிர்த்தார். பெண்களின் மண வயதை உயர்த்தி சாரதா சட்டம் வந்ததும் அதை ஆதரித்துப் பத்திரிகையில் எழுதினார். சென்னை இராயப்பேட்டை மாதர் சங்கத்தைத் தொடங்கி வைத்தவர் அவர்தான்.

    மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெண்கள் மாநாடு நடத்தியபோது அதில் இரண்டேகால் மணிநேரம் பெண்களின் முன்னேற்றம் குறித்து உரையாற்றினார். `பெண்ணின் பெருமை` என்பது திரு.வி.க.வின் புகழ்மிக்க ஒரு நூல். திரு.வி.க.வின் தாய் தொண்ணூறு வயது இருந்தார். மனைவியை இழந்த தன் மகன்மேல் அளவற்ற பாசம் கொண்டிருந்த அவர், தம் வாழ்நாளின் இறுதி நாள் வரை மகனைப் பேணிப் பராமரித்தார்.

    திரு.வி.க.வின் இறுதிக் காலங்களில் அவருக்குப் பார்வையிழப்பு நேர்ந்தது. தானே கைப்பட நூல் எழுத இயலாத நிலை. அதனால் என்ன? தாம் எழுதவிரும்பிய நூல்களைச் சொல்லலானார்.

    அவரது அன்பர்கள் அவர் சொல்லச் சொல்ல அவற்றை எழுதினார்கள். அப்படியும் சில நூல்கள் வெளியாயின. அப்படி அவர் சொல்லி நூல் எழுதியவர்களில் நாராயணசாமி என்ற நண்பரும் ஒருவர்...

    திரு.வி.க.வின் மேல் பெருமதிப்புக் கொண்டிருந்த டாக்டர் மு.வரதராசன், திரு.வி.க காலமாவதற்குச் சிறிதுகாலம் முன்பு அவரைப் பார்க்க வந்தார். `இப்போது நாராயணசாமியிடம் என்ன நூல் சொல்லி வருகிறீர்கள்?` எனக் கேட்டார். பின்னர் அப்படிக் கேட்க நேர்ந்தது பற்றிப் பெரிதும் வருந்தினார்.

    இனி திரு.வி.க.விடம். என்ன நூல் `சொல்லி` வருகிறீர்கள் என்று தானே கேட்க முடியும்? என்ன நூல் `எழுதி` வருகிறீர்கள் என்று கேட்க முடியாதே? மு.வ.வின் கேள்விக்கு `மரணம்` என்று பதில் சொன்னார் திரு.வி.க. இறுதிக் காலங்களில் `முதுமையின் உளறல்` என்றொரு நூலைச் சொல்லி எழுதினார். `மரணம்` என்ற தலைப்பில் தான் எழுதவிருந்த நூலை பின்னர் தலைப்பு மாற்றி `படுக்கைப் பிதற்றல்` என்று சொல்லி எழுதவைத்தார்.

    ஈடு இணையற்ற தமிழ் அறிஞராகவும் ஒப்புயர்வற்ற ஆன்மிகவாதியாகவும் வாழ்ந்த திரு.வி. கல்யாண சுந்தரனார் தம் 71 வயதில் 1953 செப்டம்பர் 17இல் காலமானார். திரு.வி.க. மீது பெரும் மதிப்பு வைத்திருந்தவர்களில் பெரியார் ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் ஒருவர். பெரியார் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் மயானம் வரை ஊர்வலமாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

    சென்னை மயிலாப்பூர் மயானத்தில் மக்கள் வெள்ளம் கட்டுக்கடங்காமல் திரண்டிருந்தது. சிரமப்பட்டுக் கூட்டத்தினரை விலக்கிக் கொண்டு வந்து சடலத்தைச் சிதையில் வைத்தார்கள். திரு.வி.க.வின் விருப்பப்படியே அவரது உடலுக்கு எந்தவிதச் சடங்கும் இன்றி எரியூட்டப்பட்டது. திரு.வி.க.வின் பெரிய தகப்பனார் மகன் பாலசுப்பிரமணியனும் திரு.வி.க.வின் விருப்பப்படியே டாக்டர் மு.வரதராசனும் தமிழறிஞர் அ.ச. ஞானசம்பந்தனும் அவரது உடலுக்கு எரியூட்டினார்கள்.

    உண்மையில் திரு.வி.க. காலமாகவில்லை. தம் எண்ணற்ற நூல்களில் தமது அற்புதமான தமிழ் ஆன்மிகச் சிந்தனைகளோடு அவர் நிரந்தரமாய் வாழ்ந்து வருகிறார்.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    • இன்று பெண் உரிமைக்காக ஆண்களும் இணைந்து குரல் கொடுக்கிறார்கள்.
    • சாமானியப் பெண்கள் தொடங்கி சாதனைப் பெண்கள் வரை வீட்டில் சுதந்திரமாக செயல்பட முடிபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

    இன்று சர்வதேச மகளிர் தினம்...

    ஒரு ஆண் ஜெயித்தால் குடும்பம் ஜெயிக்கும். ஆனால் ஒரு பெண் ஜெயித்தால் சமூகமே ஜெயிக்கும்.

    பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்ற வார்த்தைகள் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா என்ற கேள்விக்கு தேசப்பிதாவின் வரிகளை நினைவு கூற வேண்டும். நாட்டின் சுதந்திரத்தை பெண்ணின் சுதந்திரத்துடன் ஒப்பிட்டு அவர் கூறிய வார்த்தைகள்...'நள்ளிரவில் ஒரு பெண் என்றைக்கு கழுத்தில் நகைகள் அணிந்து பயமில்லாமல் தனியாக சாலையில் நடக்க முடிகிறதோ அன்றுதான் நாம் உண்மையான சுதந்திரத்தை அடைந்து விட்டதாக பொருள்' என்பதாகும். ஆனால் இன்று அந்த சுதந்திரத்தை அடைந்து விட்டோமா?

    எது சுதந்திரம் என்ற கேள்விக்கு விடை தெரிந்தால் தான் அதனை பெண்கள் அடைந்து விட்டார்களா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்காமல் பள்ளிக்கூடங்களை நோக்கிய பயணம் தொடங்கியது சுதந்திரம் என்றால்...பெண் சுதந்திரம் கிடைத்து விட்டது. விரும்பிய ஆடைகளை அணிவது சுதந்திரம் என்றால்...பெண் சுதந்திரம் கிடைத்து விட்டது. பெண்கள் வேலைக்கு போவது, அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது, சுய தொழில் செய்வது போன்றவை தான் சுதந்திரம் என்றால் அதுவும் பெண்களுக்கு கிடைத்து விட்டது.

    வீட்டை விட்டு வெளியே வந்து சாதிப்பது தான் சுதந்திரமா..!! அப்படி எடுத்துக்கொண்டால் இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாக நம் தமிழ் சமூகத்தில் பெண் சுதந்திரம் இருந்துள்ளது என்று சொன்னால் எத்தனை பேர் ஒத்துக்கொள்வார்கள். அவ்வையார் முதல் காக்கைப்பாடினியார் வரை சங்க காலப் புலவர்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏராளமான பெண்பாற்புலவர்கள் உள்ளனர்.

    சுதந்திரப்போராட்டத்தில் வீர மங்கை வேலுநாச்சியார் தொடங்கி தில்லையாடி வள்ளியம்மை வரை ஏராளமான பெண் போராளிகள் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இன்றைய நிலையில் மருத்துவம், கல்வி, விளையாட்டு, ஆன்மிகம், அறிவியல், அரசியல், பொருளாதாரம் என பல துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகிறார்கள். இவர்களெல்லாம் சுதந்திரம் கிடைக்கப் பெற்றவர்கள் என்று சொல்வதை விட, சுதந்திரத்தை எடுத்துக் கொண்டவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். சாமானியப் பெண்கள் தொடங்கி சாதனைப் பெண்கள் வரை வீட்டில் சுதந்திரமாக செயல்பட முடிபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.



    இன்று பெண் உரிமைக்காக ஆண்களும் இணைந்து குரல் கொடுக்கிறார்கள். இது நல்ல மாற்றத்தின் தொடக்கம் தான். ஆனால் இன்று வரை தொடக்கப் புள்ளியிலேயே நின்று கொண்டிருக்கிறோமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. எத்தனை ஆண்களால் 'என் வீட்டில் பெண்களுக்கு சம உரிமையையும், முழு சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறோம்' என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். தாயாய், தாரமாய், தோழியாய், மகளாய்.. என பல அவதாரங்கள் எடுக்கும் பெண்ணை பாலியல் பதுமையாய் பார்க்கும் போக்கு இன்னும் மாறவில்லை.

    தற்போது வரை நள்ளிரவில் ஒரு பெண் நகைகள் எதுவும் அணியாமல் கூட தனியாக செல்ல முடியாது என்ற நிலையே நீடிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் பெண்களை வக்கிரமாக விமர்சிக்கும் நபர்கள் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். பெண்ணுரிமை பேசும் பெண்களை திமிர் பிடித்தவள் என்று வீட்டுக்கு அனுப்பும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    அக்கறை என்ற பெயரிலும், பாதுகாப்பு என்ற பெயரிலும் பெண்களை அடிமைப்படுத்தும் நிகழ்வுகள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிறது. இப்போதைய நிலையில் ஆண்களிடமிருந்து மட்டுமல்ல பெண்களிடமிருந்தும் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டிய நிலை உள்ளது. தாய்மார்களும், மாமியார்களும் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். வீட்டுக்குள் முழு சுதந்திரம் கிடைத்தால் தான் சமூகத்தில் சுதந்திரமாக செயல்பட முடியும்.

    எனவே மாற்றம் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் தொடங்க வேண்டும். இப்போது சொல்லுங்கள்...எது சுதந்திரம் என்ற கேள்விக்கு விடை கிடைத்ததா?

    • ஒவ்வொரு நொடியிலும் வாழ்வதுதான் வாழ்க்கை.
    • வண்ணத்துப்பூச்சிகளின் அழகு நம்மை மகிழ்ச்சிப்படுத்துகிறது.

    'உன் அன்பின் தன்மைக்கு ஏற்ப, உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்ப, உன் வாழ்க்கை இருக்கும்'.

    -சாக்ரடீஸ்

    நேற்று மரக்கிளைகளில் பசுமையாய் இருந்த இலைகள், இன்று வீதிகளில் உதிர்ந்து கிடக்கின்றன. காலையில் வண்டுகளுக்குத் தேன்வழங்கி மகிழ்ந்த பூக்கள், மாலையில் வாடிச் சுருங்கித் தேடுவாரற்றுக் கிடக்கின்றன. எனினும், அவற்றின் குறுகிய கால வாழ்க்கை அழகானது.

    வாழ்வின் செழுமை என்பது ஆயுளின் நீளத்தைப் பொறுத்தது அல்ல; அவரவர் மனதைப் பொறுத்தது.

    ஒவ்வொரு நாளும் நமது ஆயுளின் எல்லை குறுகிக் கொண்டுதான் இருக்கின்றது. அதற்காக மரணத்தை எண்ணிக் கொண்டிருந்தால், இருக்கின்ற நாட்கள் நரகத்தின் நாட்களாகிவிடும். வாழ்கின்ற நொடிதான் உண்மை. ஒவ்வொரு நொடியிலும் வாழ்வதுதான் வாழ்க்கை.

    எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனையை மண்டைக்குள் போட்டுக் குழப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு, ஒருபோதும் வாழ்க்கை ருசிக்காது. சிறகுகளைச் 'சுமை' என்று பறவைகள் கருதுவதில்லை. ஆனால், பல சமயங்களில் மனிதன்தான் தன்னையே தனக்குப் பாரமாகக் கருதுகின்றான்.

    இக்கணமே போய்ச் சேர்ந்துவிட்டால் நல்லது என்று எண்ணுகின்றான். மறுகணமே, மரணம் வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றான். சாப்பிட உட்காரும்போதே சந்தேகம் வருகிறது. இதைச் சாப்பிட்டால் உடம்புக்கு ஆகுமா? இந்தப் பொரியலைத் தொட்டால் சுகர் கூடிவிடுமா? இப்படி அஞ்சி அஞ்சியே தேய்ந்து போகிறான்.

    ஆக, மனித வாழ்வில் பெரும்பகுதி பயத்திலேயே கழிந்துவிடுகிறது. யோசித்துப் பாருங்கள். எதற்காகப் பயப்பட வேண்டும்? வாழ்ந்திடத்தானே வந்திருக்கின்றோம். தேவையற்ற விஷயங்களை ஒதுக்கிவிட்டால் போதும். எது தேவை என்பது தெரிந்துவிடும்.

    வண்ணத்துப்பூச்சிகளின் அழகு நம்மை மகிழ்ச்சிப்படுத்துகிறது. அதன் வாழ்வின் ஒவ்வொரு நிலையும் அதிசயம். இலைகளிலும் பூக்களிலும் தண்டுகளிலும் அவை முட்டையிடும். மற்ற உயிரினங்கள் முட்டையிடாத தளிர் இலைகள் இவற்றிற்குப் பிடிக்கும். இதற்குப் பல காரணங்கள் உண்டு.

    தளிர் இலை முதிர்ச்சி அடைந்து உதிர்ந்து போக பல மாதங்கள் ஆகும். ஆள் அரவம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுக்கும். ஏனெனில், எதிரிகளின் நடமாட்டம் அங்கு இருக்காது. எனவே, பாதுகாப்பு. இத்தனைக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை ஒருசில வாரங்களில் முடிந்துவிடும். மிகக்குறுகிய காலம்தான். எனினும், வண்ணத்துப்பூச்சி தன் வாழ்க்கையை எவ்வளவு மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறது. அது நமக்குத் தருகின்ற பாடம் அதுதான்.

    நெல்லையில் என் கல்லூரிப் படிப்பை முடித்து, நான் சென்னைக்கு வருவதற்குமுன், இரண்டாண்டுகள் மார்த்தாண்டத்தில் ஒரு நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினேன். அந்நாட்களில், அவ்வப்போது கள ஆய்விற்காக வெளியூர் சென்று வருவேன்.

    அப்படி ஒருமுறை, நான் உசிலம்பட்டிக்குச் சென்றிருந்தேன். மாலை வரை கள ஆய்வுப்பணி நடைபெற்றது. மறுநாள் அதைப் போன்றதொரு பணிக்காக வேறொரு கிராமத்திற்குச் செல்ல வேண்டும். அந்த ஊருக்குப் பொறுப்பாளரான பணியாளர், அன்று மாலையே அங்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். அன்றுதான் அவர் எனக்கு அறிமுகம். எனினும், பலவருட நட்புபோல் உரிமையுடன் பழகினார்.

     

    கவிஞர் தியாரூ

     அப்போது இருட்டத் தொடங்கியிருந்தது. அவருடன் பைக்கில் சென்றேன். வழிநெடுக பேசிக்கொண்டே வந்தார். சற்று நேரத்தில் நன்றாகவே இருட்டிவிட்டது. குறுகலான கரடுமுரடான பாதை. பைக்கின் மங்கலான வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சம் இல்லை. காட்டு வழியில் செல்வதுபோல் இருந்தது. விர்விர் என்று காற்று, வண்டுகளின் இரைச்சல்; எனக்குப் பயம்.

    'இன்னும் எவ்வளவு தூரம் போகணும்' என்று கேட்டேன்.

    'முக்கால் மணி நேரத்துல போயிடலாம்' என்றார்.

    'வேற வழியே கிடையாதா... இந்தப் பாதை ரொம்ப மோசமா இருக்குதே'.

    'அடிக்கடி போற வழி. எனக்குப் பழகிப்போச்சி'.

    'ஆள் நடமாட்டம், போக்குவரத்து எதுவும் இல்ல. பாதுகாப்பே இல்லாத மாதிரி தெரியுதே'.

    'பயமே தேவையில்ல. அக்கம்பக்கத்து ஊர்சனங்க எல்லாரும் நமக்கு வேண்டியவங்கதான்'.

    எனக்குப் பயம் நீங்கவில்லை. பேசாம பஸ்ஸில் போயிருக்கலாமோ என்று தோன்றியது. பாதை நீண்டு கொண்டே போவது போல் இருந்தது. நண்பர் நிதானமாகச் சென்று கொண்டிருந்தார். எப்படியோ ஊரை நெருங்கிவிட்டோம். அப்போதுதான் எனக்கு உயிர் வந்தது.

    அது ஒரு சிறிய கிராமம். அந்த நண்பர் அவருடைய வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். அவரின் மனைவி, சொந்த சகோதரிபோல் என்னை அன்புடன் வரவேற்றார். சின்னஞ்சிறு வீடுதான். ஆனால், வெகு சுத்தமாகவும் ஒழுங்கமைவுடனும் இருந்தது.

    சற்று நேரத்தில் இரவு உணவு தயார் செய்துவிட்டார்கள். அருமையான சாப்பாடு; ஆத்மார்த்தமான உபசரிப்பு. அவர்களின் விசாலமான மனதை, அவர்களின் அன்பில் காண முடிந்தது.

    நான் தூங்கச் செல்வதற்குமுன், முற்றத்தில் இரண்டு ஸ்டீல் நாற்காலிகளை எடுத்துப் போட்டார் நண்பர். சற்று நேரத்தில், அவரின் மனைவி சுடச்சுட சுக்கு காபி கொடுத்துவிட்டுச் சென்றார்.

    'நமக்கு எப்ப கல்யாணம்?' என்று தொடங்கினார் நண்பர்.

    'இப்பதான் படிச்சி முடிச்சி வேலைக்கு வந்திருக்கேன். இன்னும் நாலஞ்சி வருஷம் ஆகும்' என்றேன்.

    'அப்படியா! நல்லா என்ஜாய் பண்ணுங்க. எனக்கு நாலு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் ஆயிடுச்சு'.

    'அதுவும் ஜாலிதானே!'

    'கதைய கேளுங்க. அவ என் மாமன் பொண்ணு. ரொம்ப செல்லமா வளர்ந்த புள்ள. ஒரு நல்ல இடத்துல கட்டிக் குடுத்தாங்க' என்று அவர் சொன்னதும் 'திடுக்' என்று என் மனதில் ஓர் அதிர்வு ஏற்பட்டது. சுக்கு காபியை உறிஞ்சியபடியே அவர் தொடர்ந்தார்.

    'அந்தப் பையன் தங்கமான குணம். இவள கண்ணுபோல பாத்துக்கிட்டான். ஆனா, சோதனையை பாருங்க... அவனுக்கு ரத்தப் புற்றுநோய் வந்து ஒரே வருஷத்துல போய்ச் சேந்துட்டான். கண்ணீரும் கம்பலையுமா இவ கெடந்தா. ரெண்டு வருஷம் கழிச்சி, மறுமணம் செஞ்சி வைக்க பெத்தவங்க நெனச்சப்ப இவ சம்மதிக்கல. அப்புறம் ஒருவழியா பேசி சமாதானம் பண்ணி, மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாங்க'.

    என் புருவங்கள் உயர்ந்தன. 'இத கேளுங்க' என்றபடி அவர் சொன்னார்:

    'அப்பதான் எனக்கு பொண்ணு பாத்திட்டிருந்த நேரம். நிறைய ரொக்கம், காடு கழனி தர்றோம்னு பொண்ணு வீட்டுக்காரங்க வந்தாங்க. ஆனா, எம்மனசு கேக்கல. பளிச்சின்னு ஒரு யோசனை தோணுச்சி. என் மாமன் பொண்ண கட்டிக்க முடிவு பண்ணிட்டேன்'.

    'ஏன் அந்த யோசனை?'

    'நான் சொன்னேம்ல... அந்தப்பையன் தங்கம்னா தங்கம். அவ மேல ரொம்ப அன்பு. ஒரு வார்த்தை அதட்டிப் பேச மாட்டான். துரதிர்ஷ்டம்...அவன் போயிட்டான். ரெண்டாந்தாரமா இவள கட்டிக்க வர்றவன் குணங்கெட்டவனாவோ குடிகாரனாவோ இருந்தா இவளால தாங்கிக்க முடியாது. இவளையும் இழந்திடக் கூடாதுன்னு, நானே மாமன்கிட்ட பேசி, அவ சம்மதத்தோட கட்டிக்கிட்டேன். இன்னிக்கு வரை அவள என் உசுராத்தான் நான் வெச்சிருக்கேன்' என்று அவர் சொன்னபோது, அவர் மீதான மரியாதை மலையளவு என்னுள் எழுந்து நின்றது.

    'எனக்கு சொற்ப வருமானம்தான். ஆடு, மாடு, கோழி, காடு, கரை எல்லாத்தையும் அவ பொறுப்பா பாத்துக்கிறா. அதுலேயும் கொஞ்சம் வருமானம். எந்தக் குறையும் இல்ல. ரெண்டு குழந்தைங்க. சந்தோஷமான வாழ்க்கை. குடும்பம்தான் எனக்கு சொர்க்கம்' என்று அவர் சிலாகிக்க, மகிழ்ச்சி வெளிச்சம் அவரின் முகமெங்கும் பரவி இருந்தது.

    வாழ்வின் சுகம் என்பது செல்வச் செழிப்புகளால் வருவதல்ல என்பதுதான் உண்மை. தனது வங்கிச் சேமிப்பையும் வட்டிக் கணக்கையும் பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதம் அடைகின்றவன், ஒருநாளும் நிம்மதியாகத் தூங்கமாட்டான். புண்ணிய காரியம் எதுவும் செய்யாமல், செல்வத்தை மட்டுமே பெருக்கிக் கொண்டிருப்பவன், தன் முதுகில் நரகத்தைச் சுமந்து கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்.

    நிறைய பேர் அப்படிதான் தங்கள் வாழ்க்கையையே பாரமாக்கிக் கொள்கிறார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்கும் விரும்ப மாட்டார்கள். சிலர், அறிந்திருந்தாலும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் மனதில்தான், வாழ்வின் மீது கசப்பும் பயமும் அதிகமாகின்றன.

    'இந்த வாழ்க்கையில் என்னதான் இருக்கிறது' என்று சலித்துக் கொள்பவர்கள் ஒருபுறம். 'இந்த வாழ்க்கையில் எல்லாமே இருக்கிறது' என்னும் மனநிறைவுடன் வாழ்பவர்கள் மறுபுறம்.

    ரசனை முக்கியம். ரசிக்கத் தெரிந்தவன் வாழ்வை நேசிக்கின்றான். வாழ்வை நேசிக்கின்றவன் தன் குடும்பத்தை நேசிக்கின்றான். குடும்பத்தை நேசிக்கின்றவன் ஒவ்வொரு மணித்துளியையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கின்றான்.

    ஒவ்வொரு நாளும் நாம் புதிதாய்ப் பிறப்பதுதான் மானுட மகத்துவம். புதிய புதிய சிந்தனைகள். புதிய புதிய பார்வைகள். பெரிய பெரிய கனவுகள். அரிய செயல்கள். நல்ல நட்பு வட்டம். அன்பார்ந்த உறவுகள்...இவையெல்லாம் வேண்டும். அதுதான் அற்புதமான வாழ்க்கை.

    நல்ல எண்ணங்கள் நலமிக்க வாழ்வை உருவாக்குகின்றன. எனவே, தீய எண்ணங்களை அப்புறப்படுத்துவோம். வரம் பெறுவதற்குத் தனிமையில் தவம் இருக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய நற்சிந்தனைகளும் நற்செயல்களுமே தவம். நம் வாழ்வே வரம்.

    கடற்கரையில் ஒரு முதியவர், மீன்பிடி வலையைச் சரிசெய்து கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த ஒருவர் அந்த முதியவரிடம், 'என்ன செய்கிறீர்?' என்று கேட்டார்.

    'மீன்பிடி வலையைச் சரிசெய்து கொண்டிருக்கிறேன்' என்றார்.

    'இந்த முதிர்வயதில் மீன்பிடிக்கச் செல்வீர்களா?'

    'இல்லை'.

    'பின்னர் எதற்காக இதைச் செய்கிறீர்கள்?'

    'எனக்குப்பின் வருகின்றவனுக்கு இது தேவைப்படும். அதற்காகவே இதை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்' என்றார் அந்த முதியவர்.

    மரணத்தைப் பற்றிய பயம் நமக்குத் தேவை இல்லை. அது வரும்போது வரட்டும். வாழ்ந்திருக்கும் ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாக்கிக் கொண்டால், இந்த வாழ்வே நம் சொர்க்கம்.

    போன்- 9940056332

    • “என் டியூட்டிய நான் சிறப்பா பண்ணிக்கிட்டு இருக்கேன்னு உங்களுக்கு புரூப் பண்ணியெல்லாம் காட்ட முடியாது பெருமாள்..”
    • வாயில் பிளாஸ்டர் போட்டு கைகள் சேரோடு கட்டப்பட்டு இருந்ததால், திவ்யாவால் எதிர்க்கவோ கத்தவோ முடியவில்லை.

    நக்கலாய் கேட்ட இன்ஸ்பெக்டர் அழகரை பார்த்து, உள்ளுக்குள் கோபம் 'புளுக்' என்று பொங்கியது. அரசியல்வாதி அல்லவா? அதனால் கோபத்தை மறைத்து சிரித்தபடி கேட்டான் பெருமாள்

    "சொல்லுங்க சார்!"

    "இந்த பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுறான் பாருன்னு, நம்ம ஊரு சைடுங்கள்ல ஒரு சொலவடை சொல்லுவாங்கன்ணு கேள்விப்பட்டு இருக்கீங்களா பெருமாள்?"

    "ஆமா.. அதுக்கும் திவ்யா காணாமல் போன இந்த கேசுக்கும் என்ன சார் சம்மந்தம்...?"

    "இருக்கு பெருமாள்… உன் தங்கச்சிய ஆள் வச்சு கடத்திட்டு, தேடுற மாதிரி ஒரு 'ஆக்ட்' குடுத்துட்டு திரியுற.. உன் நோக்கம் டேவிட்டயும், திவ்யாவையும் பிரிக்கனும்.. அந்த திரைக்கதைய அழகா எழுதி, காய கச்சிதமா நடத்துற..! சாரி.. நடத்துறீங்க.. ரைட்டா பெருமாள்!"

    "மண்ணாங்கட்டி... ஆரம்பத்துல என் மொத்த குடும்பம் சந்தேகப்பட்டது. இப்ப நீங்களா..? சார்.. உண்மையிலேயே அவங்களை பிரிக்கனும்னா.. எப்பவோ செஞ்சுருப்பேன்… தவிர.. இப்படி 'டபுள்கேம்'-லாம் ஆடுற ஆள் இல்ல. எனக்கு சந்தோஷமோ, கோபமோ, துக்கமோ, எதுவா இருந்தாலும் ஸ்ட்ரெயிட்டா வெளிப்படுத்துற டைப்.. புரியுதா?"

    "ம்.. போகப்போக புரிஞ்சுக்கிறேன்.."

    "சார்… இதுல வேற ஒருத்தன் சம்பந்தப்பட்டிருக்கான். அவன்தான் இந்த கேம் விளையாடுறான்... நீங்க ஒத்துழைச்சாதான் அவனை புடிக்க முடியும்.."

    "என் டியூட்டிய நான் சிறப்பா பண்ணிக்கிட்டு இருக்கேன்னு உங்களுக்கு புரூப் பண்ணியெல்லாம் காட்ட முடியாது பெருமாள்.."

    "அட போங்க சார்… வக்கணையா பேசிக்கிட்டே இருப்பீங்க.. திவ்யாவ தேடுற வேலையை இனிமே நானே பார்த்துக்கிறேன் சார்..!"

    திரும்பி தன் ஆட்களிடம் ,

    "யோவ் அழகர் சார் அவர் டியூட்டிய சிறப்பா செஞ்சு முடிக்கட்டும்.. வாங்க நாம திவ்யாவ தேடுதல் வேட்டையை முருகநத்தம் கிராமத்துல ஆரம்பிக்கலாம்.."

    -தன் கூட வந்த கட்சிக்காரர்களை அழைத்துக் கொண்டு, பெருமாள் கிளம்பி போனான்.

    அவன் போவதையே நக்கலாய் பார்த்தபடி, கான்ஸ்டபிள் மணியிடம், "இந்த சினிமாவுல நடிப்பு அரக்கன்னு எவன் எவனையோ சொல்ராங்க… இந்தா போறான் பாருய்யா இவன்தான்யா நடிப்பு அரக்கனுக்கும் அப்பன்.."

    சுற்றி நின்ற கான்ஸ்டபிள்கள் சிரித்தனர்.

    போலீஸ் ஸ்டேஷன்...

    தன் பெண்ணின் தாலியை எடுத்து கண்ணீர் மல்க பார்த்தார் ரங்கராஜன். "பாவிப்பய.. இப்படி அறுத்து அனுப்பி இருக்கானே.. அவன் நல்லாவே இருக்க மாட்டான்…" - சேலை முந்தானையால் பீறிட்டு வரும் அழுகையை, வாயை பொத்தி அழுதபடி சாபம் விட்டாள் ராஜேஸ்வரி.

    "சரி.. சரி.. அழாதீங்க.. லிசா.. அவங்ககிட்ட சொல்லு…" தேவசகாயம் சொல்ல, லிசா, ராஜேஸ்வரியின் தோளை தட்டி "அழாதிங்க மதினி… திவ்யா கிடைச்சுடுவா.. அதுக்கப்புறம் ஒரு முகூர்த்தம் பார்த்து.. இன்னொரு தடவ ஒரு கோவில்ல வெச்சு தாலி கட்டிட்டா போச்சு.." என ஆறுதல்படுத்தி கொண்டிருந்த, அந்த நிமிடத்தில் சில மணி நேரங்களுக்கு முன்னால்.. வேட்டையன் பங்களாவில் என்ன நடந்தது என்பதை இந்தக் கதையை படிக்கும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    சில மணி நேரங்களுக்கு முன்னால்.. வேட்டையன் பங்களா!

    கையில் 'கட்டிங் பிளேடுடன் திவ்யாவை நெருங்கிய முகமூடி மனிதன்.. "என்னடா கடத்துனவன் ரெண்டு பொம்பளைகளோட வந்து இருக்கானேன்னு யோசிக்காத.. என்கூட நான் சொல்ற படி செய்ய நீ சம்மதிக்கணும்.. அதுக்கு ஒத்துழைக்கணும். மீறி அடம்பிடிச்சேன்னு வையி… உன்னை இவங்களோட அனுப்பிடுவேன். இவங்க உன்னை பாம்பேக்கோ, பூனாவுக்கோ கூட்டிட்டு போய், புரோக்கர்ஸ்கிட்ட வித்துடுவாங்க.

    அப்படித்தானே!

    அவன் கேட்க, அந்த பெண்கள் இருவரும் தலையாட்டினர். திவ்யாவுக்கு ஒரு பயப்பந்து வயிற்றுக்குள் சுழன்றது.

    "பயப்படாத.. இந்த கட்டிங்பிளேடால உன் விரலை வெட்ட மாட்டேன்.. ஆனா.. " கண் இமைக்கும் நேரத்தில், அவள் கழுத்தில் டேவிட் கட்டி இருந்த தாலியை பட்டென்று, கட் செய்தான். "தாலி நழுவி அவன் கைக்கு போனது.

    இயக்குநர் A. ெவங்கடேஷ்


     

    வாயில் பிளாஸ்டர் போட்டு கைகள் சேரோடு கட்டப்பட்டு இருந்ததால், திவ்யாவால் எதிர்க்கவோ கத்தவோ முடியவில்லை. ஆனால், கண்களில் மட்டும் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது.

    "அச்சச்சோ.. இதுக்கு பேருதான் தாரை தாரையாய் கண்ணீர் விட்டு அழுகுறதா.. அழு.. நல்லா அழு.."

    இரக்கமே இல்லாமல் பேசியவன், தொடர்ந்தான். "அப்புறம்.. நீ எதுவுமே சாப்பிடல.. எங்களுக்கும் பசிக்குது. பிரியாணி ஆர்டர் பண்ணி இருக்கேன். வந்ததும் கையையும், வாயையும் அவிழ்த்து விட சொல்லுவேன். சாப்பிட மட்டும் பயன்படுத்தணும். சாப்பிட மறுத்தாலோ.. சத்தம் போட்டாலோ உன் அப்பன்.. ஆத்தா.. மாமா.. அத்தை இந்த நாலு பெருசுல ஒரு பெருசு முதல்ல சாவும்.. ஏன்னா.. என் ஆளுங்க ரெண்டு பேரு அவங்க இருக்கிற போலீஸ் ஸ்டேஷனுக்கு இந்நேரம் போயிருப்பானுங்க.."

    'திவ்யா அழுதபடியே அவனை பார்த்தாள். "இவன் யாரு.. ஏன் இப்படி பண்றான்...!'

    கேள்விகள் ஓடின.

    "அப்புறம் சாப்பிட்டு முடிச்சதும் நாம இந்த இடத்த காலி பண்றோம்., எங்க போறோம்னு, உனக்கு தெரியனும்னா, நீ சமத்தா சாப்பிடும்போது சொல்வேன்.. சரியா?"

    திவ்யாவின் கன்னத்தை தட்டினான். அவள், வெறுப்பாய் முகத்தை திருப்பினாள். சிரித்தபடி, முகமூடிக்காரன், தன் ஆட்களிடம் திரும்பி.. "டேய்.. இந்த தாலிய பார்சல் பண்ணி போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பு.." என எகத்தாளமாய் சொன்னான்.

    அந்த அறுந்த தாலியை பார்த்துக்கொண்டு இருந்த, ரங்கராஜனிடம் இருந்து பறிக்கப்பட்டது. ரங்கராஜன் உள்பட நால்வரும் 'ஷாக்' ஆகி பார்த்தனர். அந்த இருவரும் நின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் இருந்த எந்த கான்ஸ்டபிளும் இவர்கள் பக்கம் திரும்பவே இல்லை. அவர்கள் வேலையில் அவர்கள் பிசியாய் இருந்தனர். பறித்த தாலியை பாக்கெட்டில் வைத்த அந்த இருவரில் ஒருவன், "இங்க பாருங்க.. ஸ்டேஷன் பிசியா இருக்கு.. அதோ வெளியே ஒரு சிகப்பு கலர் கார் நிக்குதா.. இப்போ அதுல நீங்க போய் சீட்ல ஏறி உட்காரணும். நீங்க போறது ஸ்டேஷன்ல இருக்க யாருக்கும் தெரிய கூடாது. நீங்க போன அடுத்த செகண்ட் நாங்க வந்து.. வண்டியை எடுத்துட்டு.. இந்த ஸ்டேஷனை விட்டு கிளம்பிடுவோம்.. புரியுதா? நால்வரும் தலையாட்ட, லிசா கேட்டாள்,

    "எங்க கூட்டிட்டு போறீங்க..

    "ம்.. சினிமாக்கு. சொன்னத மட்டும் செய்யுங்க. எக்குத்தப்பா நடந்துகிட்டா, ஸ்டேஷன்னு கூட பார்க்க மாட்டோம்.. பொட்டுன்னு புல்லட்ட மண்டையில சொருகிட்டு போயிகிட்டே இருப்போம்., ஜாக்கிரதை.. ம் . உங்க டயம் ஆரம்பிச்சாச்சு... ஒவ்வொருத்தரா நைசா நழுவி, கார்ல போயி உட்காருங்க.. கமான்.. க்விக்.. யோவ்.. நீ போய்யா முதல்ல... தேவசகாயத்தை முதலில் அனுப்ப, அவர் எந்த போலீஸ் கண்ணிலும் படாமல், அந்த சிகப்பு காரின் பின் சீட்டில் போய் ஏறினார். சரியாய் பத்து நிமிடத்தில் ஒவ்வொருவராய் சென்று பின் சீட்டில் அமர்ந்தனர்.

    போலீஸ்காரர்கள் இவர்களை கவனிக்கவே இல்லை. அடுத்த இரண்டாவது நிமிடம்.. அந்த இருவரும் வந்து காரில் ஏறி, ரொம்ப கேசுவலாக காரை கிளப்பி, ஸ்டேஷனில் இருந்து வெளியே சென்றபோதுதான், தற்செயலாக நிமிர்ந்த ரைட்டர், காரையும், காலியாய் இருந்த பெஞ்ச்சையும் பார்த்தார். அவரது போலீஸ் மூளைக்கு நியூரான்கள் சட்டென்று என்ன நடந்திருக்கும் என யூகித்தது.

    வேகமாய் கத்தியபடி ஸ்டேஷனை விட்டு, வெளியே ஓடினார்."யோவ்., அவங்களை கூட்டிட்டு கார்ல போறான்கய்யா.. நிப்பாட்டுங்க அவன்களை., அவன்களை விடாதிங்க.." அவர் சத்தத்தின் வீரியத்தை, உணர்ந்து போலீஸ் ஸ்டேஷன் சுதாரித்து கொள்ளும் முன்பாகவே- அந்த சிகப்பு கார் ஸ்டேஷனை விட்டு அறுனூறு மீட்டரை கடந்து மெயின் ரோட்டில் திரும்பி, மறைந்தது.

    முருக நத்தம், வேட்டையன் பங்களா.

    "இன்ச் பை இன்ச் அலசுங்க.." - என்ற டேவிட்டின் வார்த்தைக்கு ஏற்ப எல்லா இடத்தையும் அலசியும், எந்த தடயமும் சிக்கவில்லை. அப்போதுதான் டேவிட் கவனித்தான். அங்கங்கு சாப்பிட்டு போடப்பட்டு இருந்த காலி பிரியாணி பார்சல்கள். சில கசங்கியும் எறியப்பட்டவைகள். சில அப்படியே இலையுடன் சாப்பிட்டு அங்கங்கே மீதமாய் வைக்கப்பட்டு ஈக்கள் மொய்க்கப்பட்டு கிடந்தன.

    டேய் சாப்பிட்டு மிச்சம் போட்ட பார்சல்கள், இலைகளை செக் பண்ணுங்க,"

    "அதெல்லாம் எதுக்குடா செக் பண்ணனும்.. அதுல என்ன எவிடென்ஸ் கிடைக்கப்போகுது.." நெல்சன் குழப்பமாய் கேட்டான்.

    "சொன்னதை செய்யுங்கடா.." – சொல்லிவிட்டு பரபரப்பாக கிடந்த பார்சல்களை பிரித்து பார்க்க ஆரம்பித்தான். கூடவே எல்லோரும் தேடினர். சடாரென்று 'பிளான்' ஒன்று டேவிட் மனதில் தோன்ற திரும்பி பார்த்தான்.

    திவ்யாவை கட்டிப்போட்ட சேர், அதன் முன்பு ஒரு மரப்பெட்டி மீது பிரியாணி பார்சல், பிரித்து வைக்கப்பட்டிருக்க, சாப்பிட்டும், சாப்பிடாமலும் மீதி பிரியாணியின் மீது ஈக்கள் அமர்ந்து கூட்டணி பேசிக்கொண்டு இருந்தன. வேகமாய் அந்த ஸ்டூல் அருகில் சென்றான் டேவிட். இவன் அருகில் வரவும் பிரியாணி ஈக்கள் 'இவ்வ்ய்ங்' என்ற சத்தத்துடன் கலைந்து பறந்தன. பிரியாணியை தள்ளி இலையை ஆராய்ந்தான். இலையில் நகத்தின் கீறலில் ஏதோ எழுதியிருந்தது தெரிந்தது. "டேய்... இங்க வாங்கடா.." டேவிட் சத்தம் கேட்ட மற்ற மூவரும் அவன் அருகில் ஓடிவந்தனர்.

    "இங்க பாருங்கடா.. திவ்யாவுக்கு சாப்பிட பிரியாணி கொடுத்து இருக்காங்க.. சாப்பிடுற மாதிரி அவங்களுக்கு போக்கு காட்டிட்டு, ஏதோ எழுதியிருக்கா" (தொடரும்)

    E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353

    • திருமணத்துக்கு பிறகு தாம்பத்திய உறவு கொள்ளாத தம்பதிகளை கடந்த காலங்களில் இருந்தே நாங்கள் பார்த்து வருகிறோம்
    • இன்றும் இந்த வகையான தாம்பத்திய உறவு கொள்ளாமை என்பது வளரும் நாடுகளில் மிகவும் அதிகமாக இருக்கிறது என்று பல ஆய்வுகள் சொல்லி இருக்கிறது.

    பெண்கள், குறிப்பாக தம்பதியினர் பலர் தற்போது எதிர்நோக்குகிற ஒரு முக்கிய பிரச்சினை தாம்பத்திய உறவில் சிக்கல். டாக்டர், எங்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் இன்னும் தாம்பத்திய உறவு கொள்ளவில்லை என்று சிலர் சிகிச்சைக்காக வருவார்கள்.

    இன்னொரு தரப்பினர், எங்களுக்கு திருமணமாகி 8 வருடம் ஆகிவிட்டது, ஐ.வி.எப். செய்தோம் தோல்வி அடைந்து விட்டது, எனவே மீண்டும் ஐ.வி.எப். செய்யுங்கள் என்பார்கள். அவர்களை பரிசோதித்து பார்த்தால், தாம்பத்திய உறவிலேயே ஈடுபட்டிருக்க மாட்டார்கள். அவர்களிடம் இதுபற்றி கேட்டால் நாங்கள் இதுவரை தாம்பத்திய உறவே வைக்கவில்லை என்பார்கள்.

    அடுத்து மூன்றாவது ஒரு தரப்பினர், டாக்டர் எங்களுக்கு தாம்பத்திய உறவில் ஆர்வமே இல்லை. ஆனால் எங்களுக்கு எப்படியாவது ஒரு குழந்தை வேண்டும். எங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படுத்தி கொடுங்கள் என்று கேட்பார்கள். இது போன்ற 3 விதமான பிரச்சினைகளுடன் பலர் மருத்துவ ஆலோசனைக்கு வருகிறார்கள்.

     

    தாம்பத்திய உறவு இல்லாமையால் பாதிக்கப்படும் தம்பதிகள்:

    இதைவிட மிக முக்கியமான விஷயம், இன்னும் சிலர் டாக்டர், நாங்கள் தீவிரமாக காதலித்து தான் திருமணம் செய்தோம். 8 வருடம் முதம் 10 வருடம் வரை காதலித்தோம், அதன்பிறகு திருமணம் செய்து கொண்டோம், ஆனால் இன்னும் எங்களுக்கு குழந்தை இல்லை என்பார்கள். அவர்களை பரிசோதித்து பார்த்தால் உறவுகொண்டிருக்கவே மாட்டார்கள்.

    இந்த மாதிரி பலரும் பலவித பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். குழந்தை பாக்கியத்துக்கு அடிப்படை தாம்பத்திய உறவு. ஆனால் அடிப்படையிலேயே கணவன், மனைவி பலர் தாம்பத்திய உறவு கொள்வதில்லை. திருமணத்துக்கு பிறகு தாம்பத்திய உறவு கொள்ளாத தம்பதிகளை கடந்த காலங்களில் இருந்தே நாங்கள் பார்த்து வருகிறோம். ஆனால் இப்போது இதுபோன்ற பிரச்சினைகள் இன்னும் அதிகமாக காணப்படுகிறது.

    இன்னும் ஒரு சிலர் இதற்கு ஒருபடி மேலே போய், டாக்டர் எங்களுக்கு தாம்பத்திய உறவு வேண்டாம், ஆனால் எங்களுக்கு குழந்தை வேண்டும், ஐயுஐ (கருப்பையக கருவூட்டல்) செய்கிறீர்களா அல்லது ஐ.வி.எப். (இன் விட்ரோ கருத்தரித்தல்) செய்கிறீர்களா என்று சிகிச்சையையும் தேர்ந்தெடுத்து விடுவார்கள். இப்படி கேட்கும் தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

     

    இவை அனைத்தையும் பார்க்கும்போது தாம்பத்திய உறவு இல்லாமை என்பது ஏன் ஏற்படுகிறது என்று கேள்வி எழுகிறது. ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 22 வருடம் ஆகிறது. ஆனால் அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் ரொம்ப நல்ல, அன்பான தம்பதி. தாம்பத்திய உறவு இல்லாததால் அவர்களுக்கு குழந்தை இல்லை. எங்களிடம் சிகிச்சைக்கு வந்த அவர்கள், முட்டையை தானமாக பெற்று ஐ.வி.எப். செய்யுங்கள் என்றனர். அந்த பெண்ணுக்கு மெனோபாசே வந்து விட்டது.

    இந்த மாதிரியான பலவிதமான விஷயங்களோடு குழந்தையின்மை சிகிச்சைக்காக பலர் வருகிறார்கள். அவர்கள் இல்லற வாழ்க்கையில் தாம்பத்திய உறவே கொண்டிருக்க மாட்டார்கள். தாம்பத்திய உறவு இல்லாமை என்பது தம்பதியினரிடையே இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.

    தாம்பத்திய உறவு இல்லாமைக்கான காரணங்கள்:

    கடந்த 2023-ம் ஆண்டில் வெளியான ஒரு ஆய்வின் முடிவில் கொடுக்கப்பட்ட தகவலின்படி, தாம்பத்திய உறவு இல்லாமைக்கு 2 முக்கியமான காரணங்கள் கூறப்படுகிறது. இதில் முதலாவது பொதுவான காரணம் என்று எடுத்துகொண்டால் ஆண்களை பொருத்தவரைக்கும் ஆண்மை எழுச்சியில் குறைபாடுகள். அதாவது இது விறைப்புத்தன்மை செயலிழப்பாக இருக்கலாம் அல்லது விந்து முந்துதல் பிரச்சினையாக இருக்கலாம்.

    பெண்களை பொருத்தவரைக்கும் வஜினிஸ்மஸ். இது பாலியல் உறவின்போது பெண்களுக்கு தன்னிச்சையாக பெண்ணுறுப்பு இறுக்கம் அடைவதாகும். இதனால் தாம்பத்திய உறவு கொள்வதில் சிக்கல் ஏற்படும். இந்த இரண்டும் தான் முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.

    இன்றும் இந்த வகையான தாம்பத்திய உறவு கொள்ளாமை என்பது வளரும் நாடுகளில் மிகவும் அதிகமாக இருக்கிறது என்று பல ஆய்வுகள் சொல்லி இருக்கிறது. அதாவது இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் இந்த பிரச்சினை அதிகம். இதுவே வளர்ச்சி அடைந்த மேற்கத்திய நாடுகளில் தாம்பத்திய உறவு கொள்ளாமை என்பது மிகவும் குறைவாக இருக்கிறது.

    தாம்பத்திய உறவு குறைகிறது, கூடுகிறது என்பது இதில் பிரச்சினை இல்லை. ஆனால் இது ஏன் ஏற்படுகிறது? இதற்கான காரணம் என்ன? இதற்கான தீர்வு என்ன? இதுதான் ரொம்ப முக்கியமான விஷயம்.

    ஆண்களை பொருத்தவரைக்கும், தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் இருப்பது என்பது மன ரீதியான விறைப்புத்தன்மை இல்லாமையாக இருக்கலாம். தன்னால் செயல்பட முடியாதோ என்ற மனரீதியான கவலையாக இருக்கலாம். அதனால் தாம்பத்திய உறவு கொள்வதில் அவர்களுக்கு தடை, பயம், குழப்பம் ஏற்படலாம். பல நேரங்களில் இதைப்பற்றி தெளிவான ஒரு புரிதல் இல்லாததும் ஒரு காரணமாகும்.

    ஆண்களுக்கு ஏற்படும் மன ரீதியான பிரச்சினைகள்:

    தாம்பத்திய உறவு பற்றிய சரியான புரிதல் இல்லாததால், பல நேரங்களில் உறவு கொள்ள முடியாத நிலையில் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பார்கள், ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பார்கள், நல்ல தம்பதியாக இருப்பார்கள், ஆனால் அவர்களுக்குள் பாலியல் உறவு மட்டும் நடந்திருக்காது. இந்த மாதிரியான மன ரீதியான பிரச்சினைகளால் உறவு கொள்ள முடியாத ஆண்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

    ஆண்கள் இப்படி இருந்தால், பெண்கள் இதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. பல நேரங்களில் இதுபோன்று பெண்களுக்கும் இதைப்பற்றி ஒரு தெளிவான புரிதல் இல்லாததால், அவர்கள் தங்கள் கணவரிடம் தாம்பத்திய உறவை தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் சந்தோஷமாக இருப்பார்கள். தாம்பத்திய உறவு மட்டும் அவர்களுக்குள் இருக்காது என்கிற நிலையில் நிறைய பெண்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

    பல நேரங்களில் பெண்கள் இதை ஒரு குறையாக கருதும் போது கூட அவர்களின் குடும்ப சூழ்நிலையையும், சமுதாய ரீதியான விஷயங்களையும் பார்த்து, இதை வெளியில் சொல்ல முடியாமல் அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழ்கிற பெண்களின் எண்ணிக்கையும் அதிகம்.

    இன்றைக்கும் என்னிடம் வருகிற குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியினரில் கிட்டத்தட்ட 22 சதவீதமான பெண்களுக்கு இந்த தாம்பத்திய உறவு இல்லாமை என்பது ரொம்ப பொதுவாக இருக்கிறது. இதில் நாங்கள் அந்த தம்பதியினரிடம் குழந்தையின்மை பிரச்சினை, பாலியல் உறவு பிரச்சினை ஆகிய 2 விஷயங்களையும் பார்க்கிறோம்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    ஒருவரையொருவர் கஷ்டப்படுத்த விரும்பாத தம்பதிகள்:

    இதுபோன்ற பெண்களெல்லாம் நிறைய நேரங்களில் என்ன சொல்வார்கள் என்றால், 'பரவாயில்லை டாக்டர், நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம், நல்ல தம்பதிகளாக இருக்கிறோம், நல்ல நண்பர்களாக இருக்கிறோம், ஒரு குழந்தை மட்டும் வந்துவிட்டால் எங்கள் வாழ்க்கைக்கு போதும். தாம்பத்திய உறவு பற்றி ஒன்றுமே இல்லை' என்பார்கள்.

    இதுபோன்ற தம்பதிகளுக்குள் பலவிதமான விஷயங்கள் இருக்கும். தாம்பத்திய உறவு இல்லாமையை சரி செய்ய முடியும் என்கிற நம்பிக்கையே இல்லாதது ஒரு விஷயம். தங்களது இல்வாழ்க்கை துணையை இதில் கஷ்டப்படுத்துகிறோம் அல்லது அவர்களை காயப்படுத்துகிறோம் என்பது ஒரு மன ரீதியான விஷயம்.

    உதாரணத்துக்கு ஒரு ஆணுக்கு விறைப்புத்தன்மை செயலிழப்பு காணப்பட்டால், அவரது மனைவியால் தனது கணவரை குறைசொல்லியோ அல்லது குற்றப்படுத்தியோ, அதனை பற்றி பேசி, பிரச்சினையை உருவாக்குவதற்கான சந்தர்ப்பங்கள் வேண்டாம் என்று நினைத்து அவர்களுக்குள் சுமூகமாக இருப்பார்கள்.

    இதேபோல் பெண்களுக்கு பெண்ணுறுப்பில் வஜினிஸ்மஸ் எனப்படும் தன்னிச்சையான இறுக்கம் காணப்பட்டால் உறவு கொள்ள முடியாது. அவரது கணவர், மனைவியை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்து நல்ல தம்பதியாக இருப்போம் என்பார்கள். இருவரும் அன்புடன் இருப்பார்கள், ஒருவருக்கொருவர் நேசிப்பார்கள், பாலியல் உறவு மட்டும் வேண்டாம் என்பார்கள். பாலியல் உறவு மட்டும் வாழ்க்கை இல்லை டாக்டர் என்பார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்கும் நான் சொல்கிற ஒரு விஷயம், இதுபோன்ற பிரச்சினைகளால் ஏற்படும் தாம்பத்திய உறவு இல்லாமையை முழுமையாக சரி செய்து குழந்தை பாக்கியம் பெற முடியும். அதை சரி செய்வது எப்படி என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

    • அருணகிரிநாதரின் சில பாடல்கள் முக்திக்கு வழி வகுத்தன.
    • வில்லிபுத்தூரார் தனது தவறை உணர்ந்தார்.

    தமிழகத்தில் சுமார் 650 ஆண்டுகளுக்கு முன்பு முருகர் வழிபாட்டில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் அருணகிரிநாதர். அவர் பாடிய திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி போன்ற நூல்கள் முருகர் பக்தர்கள் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது.

    அருணகிரிநாதரின் குறிப்பிட்ட பாடல்களை மனமுவந்து பாடும்போது பிரச்சனைகள் விலகுவதை கண்கூடாக கண்டனர். அருணகிரிநாதரின் சில பாடல்கள் முக்திக்கு வழி வகுத்தன. அதனால்தான் அவரது திருப்புகழ் பாடல்கள் புகழ் பெற்றன.

    அதிலும் திருச்செந்தூர் தலத்தில் தங்கி இருந்து ஒவ்வொரு நாளும் முருகனை வழிபட்டு அவர் பாடிய பாடல்கள் மிகப்பெரிய சக்தி கொண்டதாக திகழ்கின்றன. அதனால்தான் திருச்செந்தூரில் அருணகிரிநாதர் இருந்த காலகட்டத்தில் அவரது புகழ் தமிழகம் முழுவதும் பரவி இருந்தது.

    அந்த கால கட்டத்தில் வில்லிபுத்தூரார் என்ற தமிழ்ப்புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தீவிரத் தமிழ்ப்பற்று கொண்டவர். மற்ற புலவர்களை தன்னுடன் பாடல் பாடும் போட்டிக்கு வருமாறு அடிக்கடி அழைப்பு விடுப்பார்.

    போட்டி நடக்கும்போது வில்லிபுத்தூரார் தனது கையில் நீளமான ஒரு துரட்டி ஒன்றைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய சிறிய அரிவாள் கட்டி வைக்கப்பட்டு இருக்கும். அதை தனக்கு எதிராக போட்டிக்கு வந்திருக்கும் புலவரின் காது மீது வைத்துக்கொள்வார்.

    தன்னுடன் போட்டி போடும் புலவர்களிடம் பாடல் பாடி கேள்வி கேட்பார். போட்டிக்கு வந்திருக்கும் புலவர் பதிலில் ஏதேனும் தவறு இருந்தால் சற்றும் தயங்க மாட்டார். உடனடியாக அடுத்த வினாடியே துரட்டியை இழுத்து அந்த புலவரின் காதை அறுத்து விடுவார்.

    வில்லிபுத்தூராரிடம் காது அறுபட்ட பல புலவர்கள் திருச்செந்தூருக்கு சென்று அருணகிரிநாதரைச் சந்தித்து விஷயத்தைக் கூறினார்கள். வில்லிபுத்தூரார் நல்லவர்தான். என்றாலும் அவரது இந்த செயல் தவறானது என்பதை அவருக்கு உணர்த்த அருணகிரிநாதர் விரும்பினார்.

    எனவே போட்டி போட நான் வருகிறேன் என்று வில்லிபுத்தூராருக்கு தகவல் அனுப்பினார். அருணகிரிநாதரைப் பற்றி வில்லிபுத்தூரார் நன்கு அறிந்திருந்தார். என்றாலும் தமிழ்ச்செருக்கால் அவரையும் தன்னோடு போட்டிக்கு அழைத்தார். அருணகிரிநாதர் போட்டிக்கு சம்மதித்தார்.

    போட்டி தொடங்கியது. துரட்டியோடு போட்டிக்குத் தயாராக வில்லிபுத்தூரார் அமர்ந்திருந்தார். அதைக் கண்ட அருணகிரிநாதர் சமமான இருவருக்கு இடையே நடக்கும் போட்டி என்பதால் தமக்கும் அது போல் ஒரு துரட்டி வேண்டும் என்று கூறினார்.

    "நான் கேட்கும் கேள்விகளுக்கு வில்லிபுத்தூரார் சரியான பதில் கூறாவிட்டால் அவர் காதும் அறுக்கப்படும்" என்று ஒரு நிபந்தனையை விதித்தார். இதுவரை யாரும் வில்லிபுத்தூராரிடம் இப்படி பேசியது இல்லை. இதனால் அருணகிரிநாதர் சொன்னதை கேட்டு வில்லிபுத்தூரார் சற்று அதிர்ச்சி அடைந்தார். என்றாலும் அவருக்கு தனது புலமை மீது இருந்த நம்பிக்கையால் அதற்கு சம்மதித்தார்.

     

    இதையடுத்து அருணகிரிநாதர் கையிலும் ஒரு துரட்டி கொடுக்கப்பட்டது. இருவரும் போட்டி போட்டு பாட ஆரம்பித்தனர். வில்லிபுத்தூரார் கேட்ட பாடல் கேள்விகளுக்கு அருணகிரிநாதர் பாடல் பாணியிலேயே பதிலடி கொடுத்தார். இடை இடையே அவரும் பாடல் பாடி வில்லிபுத்தூராரை பதில் அளிக்க வைத்தார்.

    போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தபோது 'ஏகாட்சரச் செய்யுள்' என்ற அமைப்பில் ஒரு பாடலை அருணகிரிநாதர் பாடினார். இதுதான் அந்த பாடல்.

    திதத்தத்தத் தித்த இந்தாதை தாததுத்

    தித்தத்திதா

    திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து

    தித்திதத்தா

    திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை

    தாததத்து

    நிதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி

    தீதொத்ததே

    இந்த பாடலை கேட்டதும் வில்லிபுத்துரார் அப்படியே திகைத்துப் போய் விட்டார். அவருக்கு அருணகிரிநாதர் பாடிய பாடலும் புரியவில்லை. அந்த பாடலுக்கான அர்த்தமும் தெரியவில்லை. என்ன செய்வது என்று திகைத்தார். அவருக்கு வியர்த்து கொட்டியது. அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்து விட்டார்.

    அவர் அருணகிரி நாதரிடம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். நிபந்தனைபடி தனது காதை அறுத்து விடும்படி அருணகிரிநாதரிடம் கேட்டுக் கொண்டார்.

    ஆனால் அருணகிரிநாதர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. வில்லிபுத்தூராரின் காதை அறுப்பது எனது நோக்கம் அல்ல என்றார். மேலும் புலவர்களின் காதை அறுத்து அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை இனி வில்லிபுத்தூரார் நிறுத்தவேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் கூறினார்.

    வில்லிபுத்தூரார் தனது தவறை உணர்ந்தார். மனம் திருந்தினார். தாம் இனி அவ்வாறு செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தார். பிறரை விமர்சிப்பதை விட்டுவிட்டு இனிப் புதிய செய்யுள் வகைகளில் கவனம் செலுத்துவேன் என்றும் கூறினார். பிறகு அருணகிரிநாதரிடம் மன்னிப்பு கேட்டார்.

    வில்லிபுத்தூராரை அருணகிரிநாதர் திருச்செந்தூர் முருகன் அருளால்தான் வாதிட்டு வென்றார் என்று சொல்வார்கள். சுமார் 650 ஆண்டுகளுக்கு முன்பு இந்த திருவிளையாடல் திருச்செந்தூர தலத்தில் நடந்தது என்று தண்டபாணி சுவாமிகள் தனது குறிப்புகளில் எழுதி வைத்துள்ளார்.

    அருணகிரிநாதரிடம் தோல்வியை தழுவிய வில்லிபுத்தூரார் சில ஆண்டுகள் கழித்து 'வில்லிபுத்தூரார் மகாபாரதம்' என்ற நூலை இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அருணகிரிநாதர் திருச்செந்தூர் முருகன் மீது வைத்திருந்த அளவற்ற நம்பிக்கைக்கு இதுஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

    அருணகிரிநாதர் திருப்புகழ் தவிர கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி பாடல்களிலும் திருச்செந்தூர் முருகனின் சிறப்பையும், மகிமையையும் புகழ்ந்து பாடி இருக்கிறார். கந்தர் அலங்காரத்தில் வரும் அவர் பாடிய முருகனின் திருவடி பெருமைப் பாடல் மிக சிறப்பானது. இதுதான் அந்த பாடல்.

    சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல்பொழில் தேம் கடம்பின்

    மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்

    வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்

    கால்பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே

    இந்த பாடலின் அர்த்தம் வருமாறு:-

    திருச்செந்தூர் வயல்கள், சேல் மீன்கள் குதித்து விளையாடுவதால் அழிந்து விட்டன. பெண்களின் மனம் முருகன் அணிந்துள்ள கடம்ப மாலையின் மீது விருப்பம் உண்டாகி அழிந்து விட்டன. முருகப்பெருமானுடைய ஞானவேல் பட்டு, கடல் அழிந்தது. சூரபத்மன் அழிந்தான், கிரவுஞ்ச மலையும் அழிந்தது.

    சூரபத்மன் கொடியவன், அவனை அழிக்க வேலை உபயோகித்தார். பக்தர்கள் அடியவர்களைக் காக்க காலை (திருவடியை) உபயோகித்தார். பக்தர்களின் தலையிலே பிரம்மா எழுதிய எழுத்தை, முருகனின் திருவடி, அவர்களின் தலையிலே பட்டு அழிக்கின்றது. இதனால் முருகனை வழிபடும் பக்தர்கள் பிறவிப் பெருங்கடல் துன்பத்தை அடையமாட்டார்கள். அவர்கள் முக்தி பாதைக்கு திரும்புவார்கள்.

    இவ்வாறு முருகனின் திருவடிச் சிறப்பை கந்தர் அலங்காரத்தின் 40-வது பாடலில் அருணாகிரிநாதர் வெளிக்காட்டியுள்ளார். அது போல கந்தர் அலங்காரத்தின் இன்னொரு பாடலும் சிறப்பானது. இதோ அந்த பாடல்

    நாளென் செயும் வினை தானென் செயு மெனை நாடிவந்த

    கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு

    தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்

    தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

    இந்தப் பாடலை சஷ்டி தினத்தன்று பூஜை அறையில் அமர்ந்து முருகனைப் பார்த்து 6 முறை பாடுங்கள். நிச்சயம் அந்த முருகப்பெருமான் உங்கள் வினைகளை தீர்த்து வைக்க ஓடோடி வந்து விடுவார். ஒவ்வொரு நாளும், நீங்கள் செய்த வினையால் கஷ்டம் வராது. நவகிரகத்தால் வரும் கஷ்டங்கள் உங்களை நெருங்காது, அப்படியே பிரச்சனை வந்தாலும், முருகப்பெருமான் தன் அழகான தோற்றத்தோடு உங்கள் முன் வந்து நிற்பான் கவலையே படாதீங்க.

    முருகனுக்கு பிடித்தமான எத்தனையோ தமிழ் பாடல்கள் இருந்தாலும், சூரசம்ஹாரம் தினத்தன்று பூஜை அறையில் கட்டாயம் உச்சரிக்க வேண்டிய பாடல்களில் இதுவும் ஒன்று. கந்தர் அலங்காரப் பாடல்களைப் பாடினால் நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் என்னென்ன என்பதை அவரே முதலில் நின்று பார்த்து நமக்கு வரக்கூடிய கஷ்டங்களை எல்லாம் தன் கையில் இருக்கும் வேல் கொண்டு அழித்துவிடுவார். நிச்சயம் இது நடக்கும்.

    நம்பிக்கை உள்ளவர்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு முருகரை மனதார நினைத்து, கையில் கொஞ்சம் சிவப்பு புஷ்பங்களை வைத்துக் கொள்ளுங்கள். அரளிப்பூ, பன்னீர் ரோஜா, எதுவாக இருந்தாலும் சரி இந்த பாடலை படித்துக் கொண்டே முருகன் மீது பூவை தூவுங்கள். நீங்கள் நினைத்ததை திருச்செந்தூர் முருகன் நிச்சயமாக நிறைவேற்றுவார்.

    அடுத்த வாரம் இன்னொரு அற்புதத்தை காணலாம்.

    • கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து முருகனை வழிபடுபவர்களுக்கு சகல நலன்களும் கிடைக்கும் என சிவபெருமானே அருளியுள்ளார்.
    • மாலையில் அருகிலுள்ள முருகன் கோவிலுக்கும் சென்று வழிபடுவது சிறப்பு.

    மாதந்தோறும் வருகிற சஷ்டி திதி என்பது தமிழ்க்கடவுள் முருகனான ஞானக்குமரனுக்கு உரிய நன்னாள். இந்த நாளில், குமரனின் வேலுக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள். சஷ்டியில் விரதம் இருந்து முருகப் பெருமானை பிரார்த்தனை செய்தால், கேட்டதையெல்லாம் தந்தருள்வான் முத்துக்குமரன். சஷ்டி என்பது முருக வழிபாட்டுக்கான, முருக விரதத்துக்கான, முருக தரிசனத்துக்கான அற்புதமான நாள்.

    இதேபோல், 27 நட்சத்திரங்களில் முருகக் கடவுளுக்கான உன்னதமான நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரம் போற்றப்படுகிறது. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் என்பதால், கிருத்திகை நட்சத்திரத்துக்கும் முருகப்பெருமானுக்கும் தொடர்பு உண்டு என்கிறது புராணம். அதேபோல், கந்தபெருமானுக்கு கார்த்திகேயன் என்றும் திருநாமம் அமைந்தது.

    ஆகவே, கார்த்திகை நட்சத்திர நன்னாளில், மறக்காமல் தரிசனம் செய்து, முருகப்பெருமானை, சுப்ரமணியரை மனம் குளிரத் தரிசித்து பிரார்த்தித்துக் கொள்வார்கள் பக்தர்கள். கிருத்திகை விரதம் மேற்கொள்ளும் முருக பக்தர்களும் உண்டு.

    முருகப்பெருமானுக்கு உகந்த திதி சஷ்டி. முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரம். இந்த இரண்டும் இணைந்து வருவது இன்னும் மகத்துவம் மிக்க பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம்.

    நாளைய தினம் (புதன் கிழமை) சஷ்டி திதியும் கிருத்திகையும் இணைந்துள்ள அற்புதமான நாள். நாளைய தினம், முருகப்பெருமானை தரிசியுங்கள். அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று செவ்வரளி மாலை வழங்கி தரிசியுங்கள். வீட்டில் விளக்கேற்றி, முருகக் கடவுளுக்கு மாலை சார்த்தி, எலுமிச்சை சாதம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யுங்கள். கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம் பாராயணம் செய்யுங்கள்.

    சக்திவேல் குமரனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். தோஷங்கள் நிவர்த்தியாகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களை எல்லாம் நடத்தித் தந்து காத்தருள்வான் அழகு வேலவன்.

    கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து முருகனை வழிபடுபவர்களுக்கு சகல நலன்களும் கிடைக்கும் என சிவபெருமானே அருளியுள்ளார்.

    கிருத்திகையன்று முருகப் பெருமானுக்கு ஆறு வகையான நைவேத்தியம் படைத்து, ஆறு வகையான மலர்களால் அர்ச்சனை செய்து, ஆறு வகையான பூஜைகள் செய்ய வேண்டும். முடியாதவர்கள் சர்க்கரை பொங்கல் மட்டும் நைவேத்தியமாக படைத்து, வழிபடலாம்.

    முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி விட்டு, முழு நம்பிக்கையுடன் கிருத்திகை விரதத்தை துவங்க வேண்டும். வேல் இருந்தால் வேல் வைத்து வழிபட்டு கிருத்திகையன்று விரதத்தை துவங்கலாம்.

    முருகன் படத்திற்கு மலர்கள் சாத்தி, விளக்கேற்றி, முருகனுக்குரிய பாடல்களை பாராயணம் செய்து வழிபடலாம். முடிந்தவர்கள் உபவாசமாக இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம், கஞ்சி ஆகியவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

    கிருத்திகையன்று மாலையில் விளக்கேற்றிய பிறகு, முருகனுக்குரிய நைவேத்தியங்கள் படைத்து, பூஜை, அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும்.

    கிருத்திகை விரதம் இருந்து முருகனை வழிபட்டால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை, நிலம், வீடு, சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், சகோதர பிரச்சினைகள் தீரும், சகல விதமான பிரச்சினைகள் தீரும், உயர் பதவி கிடைக்கும், செல்வம் பெருகும், நினைத்தது நிறைவேறும்.

    நாரத மகரிஷி பன்னிரண்டு ஆண்டுகள் கிருத்திகை விரதத்தை கடைபிடித்தே தேவரிஷி என்ற பட்டத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து தானம் செய்பவர்களுக்கு அளவற்ற நன்மைகள் கிடைக்கும்.

    கிருத்திகை விரதத்தின் போது உப்பு இல்லாத உணவு உட்கொள்வது சிறந்தது.

     

    கிருத்திகை அன்று முருகப் பெருமானை சில குறிப்பிட்ட முறையில் வழிபட்டால் முருகனிடம் முன் வைத்த வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. முருகன் வேறு, வேல் வேறு கிடையாது என்பதால் முருகனுக்குரிய நாட்களில் வேல் வழிபாடு செய்வதும் மிகவும் சிறப்பானது.

    முருகனின் அருள் பெறுவதற்காக கிருத்திகை விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்களை சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் படத்திற்கு நைவேத்தியம் படைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல் அல்லது ஏதாவது இனிப்பு நைவேத்தியம் செய்து படைக்க வேண்டும்.

    மாலையில் அருகிலுள்ள முருகன் கோவிலுக்கும் சென்று வழிபடுவது சிறப்பு.

    கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழை மக்களுக்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றை இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படும். பின்னர் வீட்டிற்கு சென்று பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மாதத்தில் வருகின்ற கிருத்திகை தினத்தில் விரதம் மேற்கொள்வதால் நவகிரகங்களில் சூரிய பகவானின் தோஷங்கள் நீங்கி அவரின் முழுமையான அருளும் கிடைக்கும்.

    வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், சண்முகக்கவசம், முருகனின் மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

    சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்ணின் அகப்பையாகிய கருப்பையில் குழந்தை வளரும் என்பார்கள்.

    குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறுவது தவறு. சஷ்டி விரத நாட்களில் விரதம் மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அனைத்து சிறப்பையும் பெற முடியும்.

    சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகிவிடும்.

    சஷ்டியில் விரதமிருந்து முருகனின் அருளை பெற வாழ்வில் அனைத்து செல்வ வளமும் வளர்ந்து கொண்டே போகும்.

    வேல் வழிபாடு செய்பவர்கள் பூஜையறையில் முருகன் படத்தின் முன்பு சிவப்பு பட்டு துணி விரித்து அதில் வெள்ளி அல்லது செம்பு பாத்திரத்தில் பச்சரிசி நிரப்பி வேலை அதில் சொருகி வைக்க வேண்டும். ஒவ்வொரு முறை வேல் பூஜை செய்யும் பொழுதும் காய்ச்சாத பசும் பால், பன்னீர் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்து, பிறகு சாதாரண தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளலாம்.

    வேல் விருத்தம் பாடலை பாடிக்கொண்டு பூஜை செய்வது இரட்டிப்பு பலன்களை கொடுக்கும். வேல் விருத்தம் முருகன் கையில் வைத்திருக்கும் வேலை பற்றி புகழ்ந்து பாடுவது ஆகும். அருணகிரிநாதர் அருளிய வேல் விருத்தம் முதல் தொகுப்பில் பத்து பாடல்கள் உள்ளன. இப்பாடலை பாடி வேலுக்கு மஞ்சள், குங்குமம், விபூதி அபிஷேகம் செய்து, அவல், பொரி, கற்கண்டு நைவேத்தியம் வைத்து முருக மந்திரங்களை உச்சரித்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். கிருத்திகை நட்சத்திரத்தன்று மாலையில் முருகனுக்கு 6 தீபங்களை ஏற்றி வழிபாடு செய்வது சகல செல்வங்களையும் வாரி வழங்கக் கூடியதாக அமையும்.

    கிருத்திகையும், சஷ்டியும் சேர்ந்து வரும் நாளைய தினம் முருகனை மனதார வழிபட்டு முருகனின் அருளை பெறுவோம்..

    • ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் ஏதாவது மறக்க முடியாத அனுபவங்கள் இருக்கும்.
    • தம்பிககோட்டை படம் முடிந்ததும் ஓய்வுதான்.

    திருமணமாகி விட்டது. இனி நாம் நடிக்கணுமா? வேண்டாமா? நடித்தால் எடுபடுமா? ஒருவேளை அம்மா வேடம் தந்தால என்ன செய்வது? அது சரிப்பட்டு வருமா? என்று மனதில் ஏகப்பட்ட குழப்பம். என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தேன்.

    அப்போதும் சாகரிடம்தான் 'அட்வைஸ்' கேட்டேன். அவர் 'நீ நடி என்றோ அல்லது நடிக்காதே என்றோ சொல்ல மாட்டேன். உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய். இதில் முடிவெடுப்பதில் உனக்கு என்ன குழப்பம்? என்று சாதாரணமாக சொல்லி விட்டார்.

    அவர் சாதாரணமாக சொல்லி விட்டார். ஆனால் என் குழப்பம் எனக்குத் தானே தெரியும்? அம்மா, அத்தை வேடங்களில் நடிக்க நான் விரும்பியது கிடையாது. அப்படி ஏதாவது வேடங்கள் வந்தால் என்ன செய்வது? என்றெல்லாம் மனதில் நினைக்க தோன்றியது. இந்த நிலையில் திருமணமான மறு ஆண்டே 'தம்பிக்கோட்டை' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கதையை கேட்டேன். பிடித்து இருந்தது. சண்முகப் பிரியா என்ற பாத்திரம் எனக்கு. அவரும் நடிப்பதற்கு தடை போடாததால் தம்பிக்கோட்டையில் நடிக்க வருகிறேன் என்றேன். ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் ஏதாவது மறக்க முடியாத அனுபவங்கள் இருக்கும்.

    அந்த வகையில் தம்பிக்கோட்டையில் நடித்த போதுதான் வாழ்க்கையின் சுகமான அனுபவம் கிடைத்தது. அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து மகிழ்ந்தேன்.

    கோவில் நகரமான கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடந்தது. அப்போதுதான் நான் கர்ப்பம் அடைந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. அதை கேள்விப் பட்டதும் அப்படி ஒரு சந்தோசம். அதன் பிறகு பிறக்கப் போகும் குழந்தை மீது கவனம் திரும்பியது. குழந்தையை வயிற்றில் சுமந்த ஒவ்வொரு நாளும் சந்தோசமான உணர்வுகள்.

    எத்தனையோ படங்களில் திருமணத்துக்கு முன்பு கர்ப்பிணி வேடத்தில் உணர்வுப் பூர்வமாக நடித்து இருக்கிறேன். ஆனால் இப்போது தான் நிஜத்தில் அந்த உணர்வை உணர்ந்தேன். ரசித்தேன். கர்ப்பிணியாக இருக்கிறேன் என்று அறிந்ததும் நடக்கவே பயப்பட்டேன். மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகுதான் அந்த பயம் நீங்கியது. படத்தில் கர்ப்பிணியாக நடித்ததற்கும் நிஜத்தில் கர்ப்பிணியாக வாழ்ந்ததற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

    கர்ப்பமாக இருக்கும் போது புளிப்பு பிடிக்குமே என்றார்கள். எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. இனிப்பு சாப்பிடாதே என்பார்கள். ஆனால் இனிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும். கர்ப்பிணியாக இருந்ததால் புதிதாக எதையும் சாப்பிடவெல்லாம் ஆசை வரவில்லை. 'சலாடு'தான் சாப்பிடுவேன். அது எப்பவுமே நான் சாப்பிடுவதுதான். ஆனால் மனதுக்குள் ஒருவிதமான பயம் இருந்தது.

    தம்பிககோட்டை படம் முடிந்ததும் ஓய்வுதான். நான், என் கணவர் என்பதையும் தாண்டி, அம்மா, அப்பா மற்றும் மாமியார் வீட்டை சேர்ந்த எல்லோருக்கும் வரப்போகும் புதிய வாரிசை நினைத்து சந்தோசம்... எதிர்பார்ப்பு....

    எல்லோருமே அவ்வப்போது போன் பண்ணி அக்கறையோடு ஏகப்பட்ட ஆலோசனைகள் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

    மாதங்கள் உருண்டது. வயிறும் பெரிதாகி கொண்டே வந்தது. நிறைமாத கர்ப்பிணியானேன். அப்போது பழைய நினைவு வந்தது. படத்தில் கர்ப்பிணியாக நடிக்கும் காட்சி. வயிறு வலியால் இடுப்பை பிடித்துக் கொண்டு நடிக்க வேண்டிய காட்சி.

     

    நானும் வயிறு வலிதானே என்று இடுப்புக்கு பதில் வயிற்றை பிடித்து கொள்வேன். அதை பார்த்து டைரக்டர் சிரித்து விட்டார். 'ஏம்மா... கர்ப்பிணி வயிறு வலி என்றால் இடுப்பை பிடிக்க வேண்டும்' என்று சொல்லித் தந்தார்.

    உண்மையிலேயே கர்ப்பமாக இருந்தபோது லேசாக வயிறு வலித்தாலும் என்னையும் அறியாமல் கை இடுப்புக்கு சென்றது. அடிக்கடி அதை நினைப்பேன். சிரிப்பேன்.

    புத்தாண்டு பிறந்தது. மகளையும் பெற்றெடுத்தேன். ஆம். 2011 ஜனவரி 1-ந்தேதிதான் பிரசவித்தேன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு அம்மாவாக உயர்ந்த உணர்ச்சி மிகுந்த தருணம். சாகருக்கும் குழந்தையை பார்த்ததும் அப்படி ஒரு சந்தோசம். நைனிகா என்று பெயர் சூட்டினோம். பெயர் சூட்டு விழாவை எங்கள் வீட்டிலேயே நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. அவள் நைனிகா என்ற பெயரில் எங்கள் வீட்டுக்கு வந்த மகாலெட்சுமி. திருமணம் ஒரு மகிழ்ச்சி என்றால் அதைத் தொடர்ந்து குழந்தையும் பிறந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்தது எங்கள் குடும்பம்.

    குழந்தை பிறந்த மகிழ்ச்சியோடு அவளோடு தினமும் பொழுதை போக்குவது. அவளை பராமரிப்பது தான் எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.

    நைனிகாவுக்கு ஒரு வயது ஆனதும் குழந்தையுடன் நானும் சாகரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தோம்.

    நாங்கள் தரிசனம் செய்ய சென்ற நாளில் அங்கு மத்திய, மாநில மந்திரிகள் வந்திருந்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக கெடுபிடி அதிகமாக இருந்தது.

    நாங்கள் சென்ற காரை முன்வாசல் அருகே நிறுத்தி இருந்தோம். ஆனால் அந்த வழியாக செல்ல அனுமதித்ததால் குழந்தையுடன் பின் வாசல் வழியாக நடந்தே காருக்கு சென்றோம்.

    திருமண வாழ்க்கை தந்த மாற்றம்...

    அதை தொடர்ந்து குழந்தை பிறந்த மகிழ்ச்சி கொண்டட்டம். இப்படி அடுத்தடுத்து மகிழ்ச்சியான தருணங்களை சந்தித்து வந்தேன். மற்றொரு மகிழ்ச்சியான தருணத்தை அடுத்த வாரம் உங்களோடு பகிர்ந்து கொள்ள வருகிறேன். அதுவரை காத்திருங்கள்.

    (தொடரும்)...

    • பாத எரிச்சல்- பொதுவில் நீரிழிவு நோயாளிகள், நரம்பு பாதிப்பு உள்ளவர்கள் பாத எரிச்சல் பிரச்சினைப் பற்றி குறிப்பிடுவர்.
    • இரவில் நட்சத்திரங்களை சிறிது நேரம் பார்த்தபடி இருந்துள்ளீர்களா?

    உடல் உறுப்புகளே உடலின் பாதிப்புத் தன்மையை உணர்த்தும், அறிகுறிகளாய் வெளிப்படுத்தும். இவைகளை ஒருவர் கவனித்து மருத்துவரிடம் உடனடியாக சென்று விட்டால் பாதிப்புகளில் இருந்து மீண்டு விடலாம். அவ்வகையில் பாதங்கள் கூறும் அறிகுறிகளைப் பார்ப்போம்.

    * பாத விரல்கள் சில்லென இருந்தால் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கலாம். அதிக புகை பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் இவைகள் காாரணமாகவும் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கலாம். கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு பாதிப்பினால் நரம்புகள் பாதிப்பும் ஏற்பட்டு இருக்கலாம். அதன் காரணமாக பாதங்கள் பாதிப்பு-சில்லென இருக்கலாம். இதற்கு தைராய்டு குறைபாடு, ரத்த சோகை போன்றவை காரணமாக இருக்கலாம். மருத்துவர் ஆய்வு செய்து தேவைக்கேற்ப சிகிச்சை அளிப்பார்.

    * சிகப்பு, வெள்ளை, நீல பாத விரல்கள்- இதனை ரெனாட்ஸ் நோய் பாதிப்பு என்பர். திடீரென ரத்த குழாய்கள் சுருங்குவதன் காரணமாக இவ்வாறு ஏற்படலாம். ஸ்ட்ரெஸ், சீதோஷ்ண மாற்றம் காரணமாக இவ்வாறு ஏற்படலாம். மெபாய்ட் பிரச்சினை, தைராய்டு பிரச்சினைகளும் காரணமாக இருக்கலாம்.

    * பாத வலி- நாள் முழுவதும் நின்றால் பாத வலி இருக்கலாம். ஆனால் உயர் குதிகால் செருப்பு, ஷூ, இறுக்கமான காலணிகளும் காரணமாக இருக்கலாம். ஏதேனும் எலும்பில் சிறிய மெல்லிய எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கலாம். பலவீனமாக எலும்புகள், எலும்பு தேய்மானம், எலும்பு கரைதல் காரணமாக இருக்கலாம்.

    * குதிகால் வலி- இந்த வலி வீக்கத்திற்கான சில குறிப்பிட்ட காரணங்கள் இருக்கின்றன. காலையில் எழுந்து காலை கீழே வைத்தவுடன் 'சுளீர்' என்ற வலி இருக்கும். ஆர்த்ரைட்டிஸ், அதிக உடற்பயிற்சி, முறையற்ற ஷூ போன்றவையும் காரணம் ஆகின்றன. குதிகால் எலும்பின் கீழ் வளர்ச்சி, கிருமி, எலும்பு முறிவு, கட்டி ஆகியவையும் காரணமாக இருக்கக் கூடும்.

    * பாதத்தினை இழுத்தபடி நடத்தல்- பல நேரங்களில் பாதம் சற்று வளைந்து இழுத்தபடி நடப்பது முதல் அறிகுறியாகக் கூட இருக்கலாம். நடையில் மாற்றம் தெரியலாம். நரம்பு பாதிப்பினால் ஏற்பட்டிருக்கலாம். சுமார் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை சர்க்கரை நோய் பாதிப்பென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். நரம்பு பாதிப்பு கிருமி, வைட்டமின் குறைபாடு, அதிக மது ஆகியவையும் குறிப்பிடப்படுகின்றன.

    மேலும் இவ்வாறு பாதத்தினை இழுத்து நடப்பது மூளை, தண்டு வடம், தசைகள் பாதிப்பினாலும் ஏற்படலாம்.

    * பாத வீக்கம்- பொதுவில் வெகுநேரம் நிற்பது, அதிக நேரம் காலை தொங்க விட்டபடி பயணம் செய்வது. இவைகளின் காரணமாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து பாத வீக்கம் என இருப்பது கண்டிப்பாக மருத்துவர் கவனம் பெற வேண்டியது ஆகும். ரத்த ஓட்டம் சீராய் இல்லாமல் இருந்து நிணநீர் பிரச்சினை, ரத்த உறைவு கட்டி, சிறுநீரகம் முறையாய் செயல்படாது இருப்பது தைராய்டு குறைபாடு இவைகளும் பாத வீக்கத்திற்கு காரணமாக இருக்கலாம்.

    * பாத எரிச்சல்- பொதுவில் நீரிழிவு நோயாளிகள், நரம்பு பாதிப்பு உள்ளவர்கள் பாத எரிச்சல் பிரச்சினைப் பற்றி குறிப்பிடுவர். வைட்டமின் பி குறைபாடு, சிறுநீரக பாதிப்பு, சீரான ரத்த ஓட்டம் இன்மை, தைராய்டு குறைபாடு போன்றவையும் காரணமாக இருக்கலாம்.

    * ஆற தாமதமாகும் பாத புண்கள்- பொதுவில் சர்க்கரை நோய் கட்டுப்படாது இருப்பவர்களுக்கு இவ்வாறு ஏற்படலாம். ரத்த ஓட்டம் சீராக இல்லாவிடினும் இத்தகு பாதிப்புகள் ஏற்படலாம்.

    * கட்டை விரலில் வலி- திடீரென கட்டை விரலில் வலி, சிவத்தல், வீக்கம் இவை 'கவுட்' என்ற காரணமாக இருக்கலாம். எலும்பு தேய்மானம், தசை நார்களில் பாதிப்பு, விளையாட்டு வீரர்கள் என்ற காரணங்களும் உண்டு.

    * பாதத்தின் மற்ற சிறு விரல்களில் வலி- இது பாதத்தின் அடியில் தடித்த டிஷ்யூ காரணமாக ஏற்படலாம். அடி, அழுத்தம் இவை காரணமாக இருக்கலாம். இந்த பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கும்.

    * பாத அரிப்பு, தோல் உரிதல் போன்றவை பூஞ்சை கிருமிகளின் பாதிப்பால் ஏற்படலாம். தொற்றினால் ஏற்படலாம். சோரியாசிஸ் பாதிப்பு காரணமாக இருக்கலாம்.

    * வளைந்த விரல்கள்- சர்க்கரை நோய், மது, நரம்பு பாதிப்பு காரணமாக இருக்கலாம்.

    * பாத விரல்களின் நகரங்கள்- பூஞ்சை பாதிப்பு மஞ்சள் நிறம், அடர்ந்த நகம் போன்ற பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கலாம். நிணநீர் மண்டல பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, தோல் பாதிப்பு போன்றவையும் காரணம் ஆகலாம்.

    * ஸ்பூன் போன்று வளைந்த நகங்கள்- அடிபடுதல், ரசாயனங்கள், இரும்பு சத்து குறைபாடு போன்றவை காரணங்களாக இருக்கலாம்.

    * வெள்ளை நகங்கள்- நகங்களில் அடிபடுதல், உடலில் பாதிப்பு, சில சமயங்களில் கல்லீரல் பாதிப்பு, இருதயம், சிறுநீரகம் பாதிப்பு காரணமாக இருக்கலாம்.

    இந்த அறிகுறிகளை குறிப்பிடுவது விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக மட்டும்தான். சுய முடிவும், சுய சிகிச்சையும் கண்டிப்பாக கூடாது. மருத்துவ ஆலோசனை அவசியம் பெற வேண்டும். இது போன்று பாதத்தில் ஏற்படும் மாறுதல்கள் நம்மை கவனம் கொள்ள செய்கின்றன என்பதனை உணர வேண்டும்.

    சில விஷயங்களை, வாழ்க்கையில் ஒரு முறையாவது செய்து விட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏதோ ஒன்றின் மீது இருக்கும். அது சிறியதோ, பெரியதோ ஒவ்வொருவருக்கும் ஒரு உந்துதல் இருக்கும். ஆனால் நம்மால் செய்யக்கூடிய சில விஷயங்களை எளிதில் செய்திருக்கின்றோமா? அதில் கிடைக்கும் ஒரு மன மகிழ்ச்சியினை அடைந்திருக்கின்றோமா?

    இதனை நான் படித்தேன். பகிர்ந்து கொள்கிறேன்.

    * சூரிய உதயத்தினை உதயமாகும் நேரத்தில் தனியே அமர்ந்து பார்த்து இருக்கின்றீர்களா?

    * ஒரு முறையாவது சாலை வழி பயணமாக தனியாக பயணித்து (முடிந்தால் பஸ்சில்) பார்த்து இருக்கிறீர்களா?

    * தனியாக அமர்ந்து ஒரு நல்ல சினிமாவினை பார்த்து இருக்கின்றீர்களா?

    * பீச் சென்று (பகல், காலை அல்லது மாலை பொழுதில்) அலைகளின் ஓசையை உற்று கேட்டு இருக்கின்றீர்களா?

    * தனிமையில் யாருடனும் போனில் பேசாமல், போன் பார்க்காமல், டி.வி. பார்க்காமல் உணவினை பார்த்து, சுவைத்து, மென்று சாப்பிட்டு இருக்கின்றீர்களா? உண்மையில் இப்படிதான் உணவு உண்ண வேண்டும்.

    * உலக நடப்புகளில் இருந்து சற்று நேரம் உங்களை தனித்து பிரிந்து இருந்திருக்கின்றீர்களா?

    * புதிதாக இதனை நான் கற்றேன் என்று உங்களால் எதனையாவது சொல்ல முடியுமா?

    * உங்கள் எண்ணங்களை எழுதி வைத்து இருக்கின்றீர்களா?

    * ஏதேனும் ஒரு புத்தகம் கீழே வைக்க முடியாமல் நாள் முழுவதும் உங்களை படிக்க வைத்துள்ளதா?

    * நீங்களே ஏதாவது புதுமையாய் சமைத்து பார்த்திருக்கின்றீர்களா?

    * மியூசியம் சென்று பார்த்து இருக்கின்றீர்களா?

    * இரவில் நட்சத்திரங்களை சிறிது நேரம் பார்த்தபடி இருந்துள்ளீர்களா?

    * யோகா- முயற்சியாவது செய்து இருக்கின்றீர்களா?

    * கதை எழுதி இருக்கின்றீர்களா?

    * புத்தக கடையில் ஆழ்ந்து மூழ்கி இருந்திருக்கின்றீர்களா?

    * யாருக்கெல்லாம் நன்றி உடையவராய் இருக்க வேண்டும்? என்று சிந்தித்து இருக்கின்றீர்களா?

    இதெல்லாம் இல்லையா? என்ன வாழ்க்கை வாழ்ந்துள்ளோம். இன்றே சரி செய்ய ஆரம்பிப்போமே.

    'புகை பிடிப்பதனை கண்டிப்பாக நிறுத்த வேண்டும்' என மருத்துவர்களும், அரசாங்கமும் தொடர்ந்து வலியுறுத்திதான் வருகின்றன. ஆனாலும் இதனை தொடர்ந்து அன்றாடம் வலியுறுத்த வேண்டிதான் உள்ளது. இந்த வலியுறுத்தலின் அவசியத்தினை மீண்டும் பார்ப்போம்.

    * புகை பிடித்தல் புற்றுநோய் பாதிப்பின் அபாயத்தினை உடலின் எந்த பகுதியிலும் ஏற்படுத்தலாம்.

    * மாரடைப்பு, இருதய நோய் பாதிப்பு அபாயம் கூடுகின்றது.

    * சொரியாசிஸ் எனப்படும் பாதிப்பு கூடுகின்றது.

    * நீரிழிவு பிரிவு 2 பாதிப்பு அதிகரிக்கலாம்.

    * எலும்பு தேய்மானம் கூடுகின்றது.

    * மன நலம் பாதிக்கப்படுகின்றது.

    * கண் பார்வை மங்குதல், பார்வை இழத்தல் கூட ஏற்படுகின்றது.

    * ஈறுகள் பாதிப்பு அடைகின்றது.

    * நுரையீரல் குணப்படுத்த முடியாத அளவு கூட பாதிப்பிற்கு உள்ளாகலாம்.

    * புண்கள், காயங்கள் ஆற தாமதம் ஆகின்றது.

    மிக அதிக காலம் புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

    இந்த பாதிப்பு காட்டும் அறிகுறிகளாக இருமல், ரத்தம் வெளி வருதல், நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் கரகரப்பான சப்தம், மூச்சு வாங்குவதில் சிரமம் போன்றவை இருக்கும் வாய்ப்புகள் அதிகம். பல நேரங்களில் ஆரம்ப காலத்தில் அறிகுறிகள் இல்லாமலே இருக்கலாம்.

    புகை பிடிப்பது ஆரம்ப காலமோ அல்லது எப்பொழுதாக இருந்தாலும் உடனடியாக விட்டு விடுங்கள். இதன் மூலம் அநேக உடல்நல நன்மைகளைப் பெற முடியும்.

    புகை பிடிப்பது என்பது மட்டுமல்ல பல பெரிய பாதிப்புகளும் அறிகுறிகள் காட்டத்தான் செய்கின்றன. நாம்தான் அவற்றினை சற்று அக்கறை கொண்டு கவனிக்க வேண்டும். காரணமின்றி உடல் எடை குறைந்து வந்தால் உடனடியாக மருத்துவர் ஆலோசனை அவசியம்.

    * தொடர்ந்து சோர்வாக இருந்தால் இருதய நோய், ரத்த கொதிப்பு, தைராய்டு பிரச்சினை இருக்கின்றதா? என மருத்துவர் பரிசோதிப்பார்.

    * அடிக்கடி தலைவலி என்றால் உயர் ரத்த அழுத்தம், மைக்ரேன், மூளையில் கட்டி, உடலில் நீர் வறட்சி ஆகியவை கவனிக்கப்பட வேண்டும்.

    * மூச்சு வாங்குவது, நுரையீரல் பிரச்சினை, இருதய பாதிப்பு இவைகளை பரிசோதிக்க வேண்டும்.

    * வெளிப் போக்கில் ரத்தம் இருப்பது

    * நெஞ்சு வலி

    * மரத்த கை, கால்கள்

    * விடாத இருமல், குரல் மாற்றம்

    * கட்டிகள், வீக்கம்

    * சரும மாற்றம், மச்சத்தில் மாற்றம்

    இவை அனைத்துமே உடனடி கவனிப்பு பெற வேண்டியவை.

    * வைட்டமின் பி12- நாம் வைட்டமின்கள் முக்கியத்துவம் பற்றி நன்கு அறிகின்றோம். சில வைட்டமின்கள் நம் கவனத்தில் ஆழப் பதிந்து விட்டது என்றே சொல்லலாம். வைட்டமின் பி பிரிவுகள், ஏ, சி என அனைத்தினைப் பற்றியும் சிறிதளவாவது அறிந்து வைத்துள்ளோம். அவ்வகையில் வைட்டமின் பி12 பற்றி நம் கவனத்தில் மீண்டும் கூர்மை செய்து கொள்வோம்.

    வைட்டமின் பி12 நீரில் கரையும் தன்மை கொண்டது என்பதால் இது சற்று கூடுதலாகவே தேவைப்படுகின்றது. இது சேகரித்து வைக்கக் கூடிய பிரிவு அல்ல. சற்று கூடுதலாக இருப்பின் சிறுநீரில் வெளியேறும். அன்றாடம் இதனை சிலர் எடுத்துக் கொள்வார்கள். உடலில் இதன் அளவு கூடும்போது

    * சரும பாதிப்பு, தலைவலி, சோர்வு, சதை பிடிப்பு, வயிற்று பிரட்டல், வாந்தி, முறையற்ற இருதய துடிப்பு போன்றவை இருக்கும். ஆனால் இந்த பாதிப்புகள் சற்று அரிதாக இருக்கலாம். சிலருக்கு இதன் அதிக அளவு பாதிப்பாக சிறுநீரக, கல்லீரல் பாதிப்புகள் இருக்கலாம்.

    ஆனால் இதன் குறைாடு மனச்சோர்வு, தைராய்டு குறைபாடு, கவனம் செலுத்த இயலாமை, பலவீனம், மரத்து போகுதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ரத்த சோகை, பிறவி குறைபாடு கூட ஏற்படலாம்.

    * மீன், அசைவம், முட்டை, பால், சத்து மாத்திரை இவைகளின் மூலம் இதனை மருத்துவர் செய்வார். வாய், நாக்கில் புண், ஊசி குத்துவது போன்ற உணர்வு, பார்வை கோளாறுகள் இருந்தால் மருத்துவ பரிசோதனை மூலம் இதனை அறிய முற்பட வேண்டும். சைவ உணவு உண்பவர்களுக்கு பாதிப்பு சற்று கூடுதலாக இருக்கும் என்பதால் கவனம் தேவை. நரம்பு மண்டலம், ரத்த மண்டலம் இவை இரண்டும் சீராய் இயங்க பி12 அவசியம்.

    உடல் ஓயாது இயங்குகின்றது. குறைபாடுகளை கூறுகின்றது. அதனை அன்றாடம் சில நிமிடங்கள் கவனம் கொடுத்தாலே ஆரோக்கியம் நிலைத்து இருக்கும்.

    • இம்மை மறுமை என இரண்டு பயன்களையும் ஒருசேரத் தரக்கூடியது தமிழ் மட்டும்தான்.
    • உ.வே.சா.வுக்குத் தெரிந்த சுவடிகளின் இலக்கியப் பெருமை அவர்களுக்குத் தெரியவில்லை.

    தமிழ்த் தாத்தா என்ற பேராளுமை பற்றி நமக்கு எழுத்தின் மூலம் நிறையச் சொன்னவர் ஒரு ஜகந்நாதன். அவர் வாகீச கலாநிதி எனப் பலராலும் போற்றப்பட்டவரும் தமிழ்த் தாத்தாவின் மாணாக்கருமான கி.வா.ஜகந்நாதன்.

    தொலைக்காட்சித் தொடர் மூலம் தமிழ்த் தாத்தா பற்றிப் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளுமாறு திரையில் சொன்னவர் இன்னொரு ஜகந்நாதன். அவர் இயக்குநர் ஜகந்நாதன். (இயக்குநர் ஜகந்நாதனது தமிழ்த் தாத்தா தொடர் ஒளிப்பேழையாகவும் வந்துள்ளது.)

    இந்த இரண்டு ஜகந்நாதன்களும் இப்போது மறைந்து விட்டார்கள். முன்னவர் மறைந்து ஆண்டு பல ஆயிற்று. அடுத்தவர் மறைந்தும் கொஞ்ச காலம் ஆகிவிட்டது.

    இன்று `தமிழ் வாழ்க!` என உரத்து முழக்கமிடுபவர்களில் எத்தனை பேருக்குத் தமிழை உண்மையிலேயே வாழவைத்த தமிழ்த் தாத்தாவைப் பற்றித் தெரியும் என்று தெரியவில்லை.

    பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என நமது தொன்மையான சங்க இலக்கியத்தை வானளாவப் போற்றுகிறோம். எங்கெங்கோ சிதறிக் கிடந்த சங்க இலக்கியத்தைத் தேடிக் கண்டுபிடித்து நமக்குத் தந்தவர் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் தான்.

    உ.வே.சா.வை `தமிழ் வியாசர்` என மூதறிஞர் ராஜாஜி பாராட்டினார் என்ற குறிப்பு, உ.வே.சா. பெருமையைச் சொல்வதோடு கூட அவரைச் சரியாக இனங்கண்ட மூதறிஞர் ராஜாஜியின் பெருமையையும் சேர்த்தே சொல்கிறது!

    உ.வே.சா. காலத்தில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க் கணக்கு ஆகிய சங்க நூல்கள் என்ற இலக்கியக் களஞ்சியத்தைப் பெயரளவிலேயே தெரிந்து கொண்டிருந்தனர் அக்காலப் பெரும்புலவர்கள்.

    ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் முழுமையாகத் தெரியாது. ஆனால், கோவலன் கதை என்கிற ஒரு நாடோடிக் கதையும், அதில் வரும் கண்ணகி, மாதவி என்ற முதன்மைப் பாத்திரங்களும் மட்டும் ஓரளவு தெரியும்.

    இப்படியான சூழலில்தான் சாமிநாதன் என்ற இளைஞர் தாளாத தமிழ்க் காதல் காரணமாக நாடெங்கும் ஏடுதேடி நடக்கலானார். பின்னர் மெல்ல மெல்ல தமிழ்ச் சுவடிகளைத் தேடுவதும் படியெடுப்பதும் பதிப்பிப்பதும் மட்டுமே அவரது வாழ்க்கை என்றாயிற்று. தான் கொண்ட குறிக்கோளிலிருந்து இறுதிவரை விலகவில்லை அவர்.

    தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அவரால்தான் இன்று ஒப்பற்ற தமிழ்ப் பொக்கிஷமான சங்க இலக்கியம் நமக்குப் படிக்கக் கிடைத்திருக்கிறது.

    ஏடுகளில் எழுதப்பட்டிருந்த இலக்கியத்தின் பெருமையை ஏட்டை வைத்திருந்தவர்களில் பலர் அறியவில்லை. அவற்றை அடுப்பெரிக்க விறகாய்ப் பயன்படுத்தியவர்கள் உண்டு. வீட்டில் வைக்க இடமில்லை என்று ஓடும் நதிநீரில் ஓடவிட்டவர்கள் உண்டு.

    ஓடோடிப் போய் அவற்றையெல்லாம் அழிவதற்குள் மீட்டுச் சேகரித்தார் உ.வே.சா. தூசிதட்டிப் படியெடுத்தார். இந்தப் பணியில் அவர் கண்ணும் உடல்நலமும் வீணாயிற்று. ஆனால் கருமமே கண்ணாய் இருந்த அவர் எதையும் பொருட்படுத்தவில்லை.

    இன்று சங்க இலக்கியப் பெருமையை மேடைதோறும் முழங்குகிறோம். சங்க நூல்களைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்கிறோம். உ.வே.சா. இல்லாவிட்டால் இவை எவையும் நிகழ்ந்திராது என்ற உண்மையை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?

    சிறுவனாக இருந்த உ.வே.சா.விடம் அவர் தந்தை வேங்கட சுப்பையர் ஒரு வித்தியாசமான கேள்வியைக் கேட்டார். உ.வே.சா. எதைப் படிக்க விரும்புகிறார்? வீடுபேறு தரும் சம்ஸ்கிருத மொழியையா, இல்லை உலகியல் வாழ்வில் உயரத்தைத் தரும் ஆங்கில மொழியையா? தன் மகன் சாமிநாதனின் கருத்தை அறிய ஆவலோடு காதைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தார் அவர்.

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    உ.வே.சா. தயக்கமே இல்லாமல் தெளிவாக பதில் சொன்னார்:

    `ஆங்கிலம் இம்மைப் பயனைத் தரும். சம்ஸ்கிருதம் மறுமைப் பயனைத் தரும். நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் இம்மை மறுமை என இரண்டு பயன்களையும் ஒருசேரத் தரக்கூடியது தமிழ் மட்டும்தான். நான் தமிழைப் படிக்க விரும்புகிறேன்!`

    உ.வே.சா.வின் குரு தலபுராண வேந்தர் என அழைக்கப்பட்டவரும் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்தவருமான தமிழறிஞர் மகாவித்வான் மீனட்சிசுந்தரம் பிள்ளை. அவரிடம் ஐந்து ஆண்டுகள் முறையாகத் தமிழ் கற்றுத் தமிழ் அறிஞரானார் உ.வே.சா.

    தொடக்கத்தில் கும்பகோணம் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக இருந்து பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியராக மாறித் தமிழ் கற்பிக்கத் தொடங்கினார்.

    ஏட்டுச் சுவடிக்காகப் பலர் வீட்டு வாயில்களில் போய் நின்றிருக்கிறார் அவர். அவர்களில் சிலர் அவரை உதாசீனம் செய்திருக்கிறார்கள். சுவடிகளை நெருப்பி லிட்டுப் பொசுக்கினாலும் பொசுக்குவோமே அன்றிச் சுவடியைத் தரமாட்டோம் என மறுத்திருக்கிறார்கள். சிலருக்கு வெந்நீர் காய்ச்ச விறகாகப் பயன்படும் சுவடியை இவர் எதற்குக் கேட்கிறார் என ஆச்சரியம். வைரப் பரிசோதகனுக்குத் தானே வைரத்தின் பெருமை தெரியும்? உ.வே.சா.வுக்குத் தெரிந்த சுவடிகளின் இலக்கியப் பெருமை அவர்களுக்குத் தெரியவில்லை.

    அடுத்தவர் எளிதாய்ப் புரிந்து கொள்கிற மாதிரி, வகுத்தும் தொகுத்தும் பேசும் ஆற்றல் இயல்பாகவே உ.வே.சா.விடம் இருந்தது. பல சந்தர்ப்பங்களில் வாதிட்டு ஏட்டுச் சுவடியைப் பெற அவரது இந்த ஆற்றலே அவருக்கு உதவியிருக்கிறது.

    சென்னையில் குண்டு வீசப்படலாம் என்ற நிலையில் சென்னையிலிருந்து திருக்கழுக்குன்றத்திற்குச் சென்றார் தமிழ்த் தாத்தா. பின்னர் அவர் மகன் மூலமாக அவரது ஆய்வுக்கான ஏட்டுச்சுவடிகள் சென்னையில் இருந்து திருக்கழுக்குன்றம் வந்து சேர்ந்தன.

    அவை மொத்தம் பத்து மாட்டு வண்டிகளில் வந்தன என்றால் உ.வே.சா. தமிழ்மொழி மேல் கொண்ட ஈடுபாட்டின் பரிமாணத்தை நாம் எடைபோட்டுக் கொள்ளலாம்.

    அவர் தொண்ணூறுக்கும் மேற்பட்ட பழந்தமிழ் நூல்களை முதன்முதலில் பதிப்பித்தார். மூவாயிரத்திற்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்திருந்தார்.

    `அகரமுதலியைத் தயாரிக்க அஞ்சறைப் பெட்டி போன்று பல சதுரக் குழிகள் கொண்ட அமைப்பை உ.வே.சா. பயன்படுத்தினார். இப்படி தமக்குத் தாமே தமது ஆய்வுக்குத் தேவையான கருவிகளை உருவாக்கிக் கொண்டார். ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய பணியைத் தனியொரு மனிதராகச் செய்தார். தமிழ்த் தாத்தா தன் வாழ்க்கைச் சரிதத்தை, "என் சரித்திரம்' என்ற பெயரில் 1940ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆனந்த விகடனில் தொடராக எழுதத் தொடங்கினார். அப்போது ஆனந்தவிகடனின் ஆசிரியராக இருந்த கல்கி மற்றும் டி.கே.சி. போன்ற அன்பர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளே அவரை "என் சரித்திரம்' எழுத வைத்தது.

    1942 மே மாதம் வரையில் அச்சரிதம் வெளிவந்தது. தமிழின் தன் வரலாற்றுத் துறைக்கு மகுடம் சேர்க்கும் உன்னதப் படைப்பு அது. அக்காலத் தமிழ்ச் சமூகத்தின் மனப்பான்மை பற்றிப் பேசுவதோடு உ.வே.சா. ஏடு தேடுவதில் அடைந்த சிரமங்களையும் சேர்த்துப் பேசுகிறது அது.

    மாபெரும் தமிழ்ப் பண்டிதரான அவர் பண்டிதர்களுக்கு மட்டுமே புரியும் கடின நடையில் எழுதியிருக்கலாம். ஆனால் பொதுமக்கள் அனைவருக்கும் புரியும் வகையில் மிக எளிய நடையில் அந்த நூலை எழுதியிருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மிகவும் விறுவிறுப்பான அந்த நூலை ஒரு நாவலை வாசிப்பது போல கீழே வைக்காமல் வாசித்து முடித்து விடலாம்

    1855-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி பிறந்தவர் உ.வே.சா. 1952 ஏப்ரல் இருபத்தியெட்டாம் தேதி அகவை எண்பத்து ஏழில் முதுமை காரணமாகக் காலமானார். தமிழே வாழ்வாக வாழ்ந்த பெரிய பெருமை அவருடையது.

    உ.வே.சா.வுக்கு தமிழ்த் தாத்தா என்ற பட்டமே பொருத்தம் என எழுதி அந்தப் பட்டத்திற்கான காரணங்களை நகைச்சுவையாகப் பட்டியலிடுகிறார் கல்கி கிருஷ்ணமூர்த்தி.

    `1. அவ்வைப் பாட்டி என்பதுபோல், செய்திருக்கும் தொண்டால் தமிழ்த் தாத்தா... 2. எல்லா ஓலைச்சுவடிகளையும் காப்பாற்றியதால் தமிழ்த் தாதா. 3. மக்கள் உங்களிடம் தமிழ் தாத்தா எனக் கேட்கிறார்கள். 4. மகாம கோபாத்யாய போன்ற பட்டங்கள் வாயில் நுழையவே சிரமமாயிருக்க தமிழ்த் தாத்தா பட்டம் தங்களுடைய வசன நடையைப் போல் எளிதாயிருக்கிறது. முக்கியமாக அதனால்தான் தமிழ்த் தாத்தா!` என்று கல்கி முடிக்கும்போது நம் முகத்தில் முறுவல் படர்கிறது.

    உ.வே.சா.வின் தளராத ஊக்கத்தால் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, புறநானூறு, குறுந்தொகை போன்ற நூல்கள் ஓலைச் சுவடியில் இருந்து அச்சுப் பதிப்பாக வெளிவந்தன.

    அவர் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவராகத் திகழ்ந்தார் தொல்லியல் நிபுணரான ஐராவதம் மகாதேவன். சென்னை திருவான்மியூரில் உள்ள உ.வே.சா. நூலகத்தில் தமிழ்த் தாத்தாவின் சிலை நிறுவப்படவும் ஐராவதம் மகாதேவன் காரணமாக இருந்தார்.

    உ.வே.சா. பதிப்பித்த குறுந்தொகை மறுபதிப்புக் காணவும் ஐராவதம் பொருளுதவி செய்தார். குறுந்தொகை வெளியிடப் பெருந்தொகை கொடுத்தவர் ஐராவதம் என சுந்தரமூர்த்தி போன்ற தமிழறிஞர்கள் அவரைப் பாராட்டினார்கள்.

    "கண்ணுஞ் சடையாமல், கையுந் தளராமல்

    உண்ணப் பசிஎழுவ(து) ஓராமல் -

    எண்ணியெண்ணிச்

    செந்தமிழ்த் தாய்க்குநீ செய்த

    திருத்தொண்டுக்(கு)

    இந்த நிலத்(து) உண்டோ இணை?'

    என்று தமிழ்த் தாத்தாவைப் பற்றிக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் அழகிய வெண்பா எழுதியுள்ளார்.

    `பொதியமலைப் பிறந்த மொழி

    வாழ்வறியும் காலமெலாம்

    புலவோர் நெஞ்சின்

    துதியறிவாய் அவர்நெஞ்சின்

    வாழ்த்தறிவாய் இறப்பின்றித்

    துலங்குவாயே!`

    என அவரின் சமகாலத்தில் வாழ்ந்த மகாகவி பாரதி அவரை வாழ்த்திப் பாடியிருக்கிறார். மகாகவியின் வாழ்த்து உண்மைதான். தமிழ் உள்ள மட்டும் தமிழ்த் தாத்தா போற்றப்படுவார்.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    ×