என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND : தவளை தன் வாயால் கெடும்... சர்ச்சை பேச்சுக்களால் அடி சறுக்கிய பொன்முடி
- விழுப்புரத்தில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டம் தொடர்பான பேனரில் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டது.
- பதவியில் இருக்கிறோம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பொன்முடி பேசிவிட முடியுமா?.
தி.மு.க. அமைச்சர்களில் சிலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி அவ்வப்போது பிரச்சனையில் மாட்டிக்கொள்வது இந்த ஆண்டும் தொடர்ந்தது. இதில் அமைச்சராக இருந்த பொன்முடி நிறைய சர்ச்சைகளில் சிக்கியதோடு, அமைச்சர் பதவி, கட்சி பதவி ஆகியவற்றை இழந்துள்ளார்.
பொன்முடி பேசிய சர்ச்சை பேச்சுகள் குறித்து பார்ப்போம்...
பொன்முடி சர்ச்சைகள்:
அரசு பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம் செய்வதை பொன்முடி, 'ஓசி பயணம்' என்று பேசியதும், அதன் பின்னர் பெண் மக்கள் பிரதிநிதி ஒருவரை சாதியின் பெயரைக் குறிப்பிட்டுக் கேள்வி கேட்டது பெரும் சர்ச்சையானது.

மேலும், பள்ளிக்கட்டிட திறப்பு விழா ஒன்றில் பொன்முடி பங்கேற்றிருந்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய பெண் ஒருவர், தங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்சனை உள்ளதாக புகார் அளித்தார். பெண்ணின் கோரிக்கையை தொடர்ந்து அப்பகுதி கவுன்சிலரிடம் பொன்முடி விசாரித்துக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, பேசிய பொன்முடி, "எனக்கா ஓட்டு போட்டு கிழி கிழினு கிழிச்சிட்டீங்க. நீங்க வந்து கேக்குறீங்க. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஓட்டு போட்டவர்கள், போடாதவர்களுக்கும் நல்லதைச் செய்ய சொல்லியிருக்கிறார் முதலமைச்சர். ரோடு போட்டது நான், பஸ் விட்டது நான், குடி தண்ணீர் விட்டது நான்! ஏதாவது குறை இருந்தால் எழுதிக் கொடுங்கள், சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு கத்திக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்?" என்று காட்டமாக கூறினார்.
இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அய்யா ஆஸ்பத்திரி வேணும் என்று கேட்டவர்களிடம், "நீ என்ன எனக்கா ஓட்டுப் போட்டாய்" என்று மீண்டும் கேட்டதாக பெரும் சர்ச்சையாக மாறியது.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் பகுதியில் மகளிர் உரிமைத் தொகை குறித்து சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஆய்வு செய்த பொன்முடி, அங்கிருந்த பெண்களிடம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து கேள்வி கேட்டு விளக்கம் அளித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தக்காளி விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் பொன்முடி விளக்கம் அளிக்காமல் ஒருமையில் பேசினார். இதனை தொடர்ந்து, அவரது உயர்க் கல்வித்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, வனத்துறை ஒதுக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில், பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தும் விதமாகவும், சைவ, வைணவ மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொன்முடியின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, அவர் தி.மு.க.வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
மேலும், சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த போது,
"பதவியில் இருக்கிறோம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பொன்முடி பேசிவிட முடியுமா?. ஒரு நபரை கொலை செய்துவிட்டு நான் கொலை செய்ய விரும்பவில்லை என்று கூற முடியுமா? சைவம் வைணவம் பிரிவுகள் தொடர்பாக இஷ்டம் போல் கருத்து தெரிவிப்பது சரியா? இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது. இது ஜனநாயக நாடு, மக்களுடன்தான் தானும் வசிக்கிறோம் என்ற எண்ணம் அமைச்சருக்கு வரவேண்டும்," என்று நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.
ஓரம்கட்டப்பட்ட பொன்முடி:
இதற்கிடையே, தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.வில் ஏழு மண்டல பொறுப்பாளர்களை கட்சித் தலைமை நியமித்தது. கே.என்.நேரு, எ.வ. வேலு, ஆ.ராசா, கனிமொழி, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, செந்தில் பாலாஜி ஆகியோர் ஏழு மண்டலங்களிலும் கூட்டங்களை நடத்தி வந்தனர். ஏழு மண்டங்களாக இருந்தது எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. கட்சி ரீதியில் கடலூர் கிழக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு ஆகிய பகுதிகளுக்கு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மண்டல பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். இதில் பொன்முடிக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
மேலும் பொன்முடி மகன் கவுதமசிகாமணியின் வசம் இருந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் 2 சட்டமன்ற தொகுதிகளை பறித்து கட்சியில் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் கவுதமசிகாமணியின் பொறுப்பையும் கட்சி மேலிடம் குறைத்தது. இதனால், பொன்முடி மீது கட்சி தலைமை கடும் கோபத்தில் உள்ளது வெட்ட வெளிச்சமானது.

விழுப்புரத்தில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டம் தொடர்பான பேனரில் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டது. விழுப்புரத்திலேயே பொன்முடி ஓரம்கட்டப்பட்டதால் தி.மு.க.வில் இருந்து மொத்தமாக அவர் ஓரங்கப்பட்டப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.
பொன்முடி என்றால் விழுப்புரம், விழுப்புரம் என்றால் பொன்முடி என்ற வகையில் பிரபலமான அவருக்கு இறங்குமுகமாகவே இருந்தது.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராக பொன்முடி மீண்டும் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இருப்பினும் அவருக்கு அமைச்சருக்கான பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
2025-ம் ஆண்டு பொன்முடிக்கு போதாத காலமாக அமைந்துவிட்டது. தவளை தன் வாயால் கெடும் என்பது போல பொன்முடி தனது அரசியல் வாழ்க்கையை கெடுத்துக்கொண்டார். வரவிருக்கும் 2026-ம் ஆண்டு பொன்முடி தனது அரசியல் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகருவாரா? காலம் தான் முடிவு செய்யும்.






