என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் கவர்னருக்கே பாதுகாப்பு இல்லை: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் | Congress
- புதுச்சேரி மாநில மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை.
- கவர்னர் மாளிகையில் அந்த நபர் அத்துமீறி நுழைந்த காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கவர்னர் மாளிகையில் காவல்துறை பணியாளர்கள் கண்காணிப்பில் இருந்தும், காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தும் மர்மமான முறையில் ஒருவர் நுழைந்து அங்கே ஒரு அறையில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை கவர்னர் மகன் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்கும் கவர்னர் அலுவலகத்தில் ஒரு மனிதர் எப்படி உள்ளே நுழைய முடிந்தது?
காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது? அவர்கள் சரியான பாதுகாப்பு கொடுத்தார்களா? அவரின் குடும்பத்தினருக்கு சரியான பாதுகாப்பு கொடுத்தார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. கவர்னருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை, புதுச்சேரி மாநிலத்தில் உருவாகி இருப்பதால் சாதாரண மக்களுடைய நிலை என்ன?
சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் வீட்டிற்கு பக்கத்திலே பேக்கரியில் அத்துமீறி நுழைந்து அங்கு பணிபுரிந்தவர்களை எல்லாம் தாக்கிய சம்பவம் வீடியோவில் வெளியானது. நில அபகரிப்பு, வீடு அபகரிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது, கஞ்சா தாராளமாக கிடைப்பது, ரெஸ்டோபார்களில் குடித்துவிட்டு வந்து தெருவிலே கும்மாளம் போடுவது எல்லாம் புதுச்சேரியில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.
புதுச்சேரி மாநில மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. கவர்னர் மாளிகையில் அந்த நபர் அத்துமீறி நுழைந்த காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும். கவர்னர் பாதுகாப்பை இந்த ஆட்சியில் கேள்விக்குறியாக்கியுள்ளனர். சட்டம் ஒழுங்கு புதுச்சேரி மாநிலத்தில் கெட்டுப்போய் உள்ளது.
உள்துறை அமைச்சர் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள், சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது, நாங்கள் உரிய பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று எல்லாம் பேசுகிறார்.
ஆனால் இன்று அவையெல்லாம் உண்மைக்கு புறம்பானவை என்று நிரூபணம் ஆகியுள்ளது. இதற்கு ஆட்சியாளர்கள் தான் காரணம். இதற்கு முழு பொறுப்பையும் முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர், அமைச்சர்கள் ஏற்க வேண்டும்.
கவர்னருக்கே பாதுகாப்பு தர முடியாத அரசு குறிப்பாக உள்துறை அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அங்கே பணிபுரிகின்ற காவல் துறை பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.






