என் மலர்
இந்தியா

பீகாரில் பயங்கரம்: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அண்ணன்-தம்பி சுட்டுக்கொலை
- சகோதரர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
- தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்னா:
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஷாபூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மனிஷ் குமார் (27), மஞ்சீத் குமார் (25). அண்ணன்-தம்பியான இருவரும் அதே கிராமத்தில் நடந்த உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது திருமண வரவேற்பு விழாவில் திடீரென உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சகோதரர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். உடனே மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சகோதரர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் சொத்து பிரச்சனை தொடர்பான முன்பகை காரணமாக சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






