என் மலர்
இந்தியா

திருப்பதி அலிபிரி சோதனை சாவடியில் அரக்கோணத்தை சேர்ந்தவரிடம் ரூ.65 லட்சம் பறிமுதல்
- சோதனை சாவடியில் இருந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் காரை சோதனை செய்தனர்.
- விசாரணையில் இந்த பணம் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரிவித்தனர்.
திருப்பதி:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்தவர் நீலமேகம் (வயது62). திருப்பதி கொர்லகுண்டாவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (29). இருவரும் நேற்று திருப்பதி மலைக்கு செல்வதற்காக காரில் அலிபிரி சோதனை சாவடிக்கு வந்தனர்.
சோதனை சாவடியில் இருந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த ஒரு பையில் ரூ.65 லட்சம் இருந்தது. பணத்தை பறிமுதல் செய்த விஜிலன்ஸ் அதிகாரிகள் அலிபிரி போலீசில் ஒப்படைத்தனர். அலிபிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார். விசாரணையில் இந்த பணம் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரிவித்தனர்.
விசாரணைக்கு பின் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களை சேர்ந்தவர்கள் திருப்பதி மலைக்கு வந்து தங்க நாணயங்களை வரியில்லாமல் வாங்கி செல்கின்றனர்.
இதனை பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து 15 சதவீத கமிஷன் பெற்று வருகின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.50 முதல் ரூ. 60 கோடி வரை பண பரிமாற்றம் நடைபெறுவதாக தெரிவித்தனர். பிடிபட்டவர்களும் அந்த கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிவித்தனர்.






