என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவை உலுக்கிய போர்ஷே கார்விபத்து வழக்கு - குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம்
    X

    இந்தியாவை உலுக்கிய போர்ஷே கார்விபத்து வழக்கு - குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம்

    • கடந்தாண்டு அந்த சிறுவனுக்கு 18 வயது ஆனநிலையில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற காவல்துறையின் கோரிக்கையை சிறுவர் நீதி வாரியம் நிராகரித்தது.
    • விபத்து நடந்த சிலமணி நேரங்களிலேயே சிறுவனுக்கு ஜாமின்

    கடந்த 2024ஆம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய புனே போர்ஷே கார் விபத்து வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மகாராஷ்டிராவின் புனேயின் கல்யாணி நகர் பகுதியில், மது போதையில் 17 வயது சிறுவன் ஓட்டிய அதிவேக போர்ஷே கார் மோதியதில், பைக்கில் சென்ற அனீஷ் அவாதியா மற்றும் அஸ்வினி கோஷ்டா ஆகிய இரண்டு இளம் ஐடி ஊழியர்கள் உயிரிழந்தனர்.

    விபத்து நடந்த சிலமணி நேரங்களிலேயே விபத்திற்கு முக்கிய காரணமான 17 வயது சிறுவனுக்கு நீதி வாரியம் ஜாமினும் வழங்கியது. இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 15 நாட்கள் காவல்துறையில் பணிபுரியவும், சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுதவும், குடிப்பழக்கத்திற்கு சிகிச்சை பெறவும், ஆலோசனை அமர்வுகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது.

    தொடர்ந்து சிறுவனின் இரத்தத்தில் மது இருப்பதை மறைக்க, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உதவியுடன் அவனது தாயின் இரத்த மாதிரியை மாற்றி வைத்தது விசாரணையில் அம்பலமானது. இதற்காக ரூ.3 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது. இதில் அச்சிறுவனின் தாயும், தந்தையும் கைது செய்யப்பட்டனர்.

    கடந்தாண்டு அந்த சிறுவனுக்கு 18 வயது ஆனநிலையில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற காவல்துறையின் கோரிக்கையை சிறுவர் நீதி வாரியம் நிராகரித்தது. தற்போது வரை இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆதித்யா அவினாஷ் சூட், ஆஷிஷ் சதீஷ் மிட்டல் மற்றும் அமர் சந்தோஷ் கெய்க்வாட் என்ற மூன்று பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

    நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாமின் வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் 18 மாதங்கள் சிறையில் இருந்ததை குறிப்பிட்ட நீதிபதிகள், "தண்டனைக்கு முன்பே சிறைவாசம் இருக்கக் கூடாது" என்று குறிப்பிட்டு இந்த ஜாமினை வழங்கியுள்ளனர்.

    இந்த மூன்றுபேரும் காருக்குள் இருந்த முக்கிய குற்றவாளிகளின் இரத்த மாதிரிகளை அவர்களது இரத்த மாதிரிகளுடன் மாற்றிக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×