search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடற்கரை தூய்மை இயக்கத்தின் கீழ் 20 நாட்களில் 200 டன் கழிவுகள் அகற்றம்
    X

    ஜிதேந்திர சிங்

    கடற்கரை தூய்மை இயக்கத்தின் கீழ் 20 நாட்களில் 200 டன் கழிவுகள் அகற்றம்

    • 24 மாநிலங்களைச் சேர்ந்த 52,000க்கும் அதிகமானோர் இதில் பங்கேற்பு.
    • தூய்மையான கடல் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை.

    கடந்த ஜூலை 5ந் தேதி அன்று தொடங்கப்பட்ட 75 நாள் கடற்கரை தூய்மை இயக்கம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பிரபலங்கள், திரைப்பட ஆளுமைகள், மாணவர்கள் உள்பட வாழ்க்கையின் அனைத்துத் தரப்பு மக்களும் இந்த இயக்கத்தில் பங்கேற்றுள்ளதாகவும், இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்றும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

    கடற்கரை தூய்மை இயக்கத்தை மேலும் விரிவுபடுத்த www.swachhsagar.org என்ற இணையதளத்தை நேற்று தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த இயக்கத்தில் புவி அறிவியல் அமைச்சகத்தோடு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், ஜல் சக்தி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், வெளியுறவு, தகவல் ஒலிபரப்பு ஆகிய அமைச்சகங்களும் தீவிரமாக பங்கேற்றுள்ளன என்றார்.

    கடற்கரை தூய்மை இயக்கத்தின் கீழ் 20 நாட்களில் கடற்கரைகளிலிருந்து 200 டன் கழிவுகள் குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.

    அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த இயக்கத்திற்கு முழுமையான ஆதரவு அளிக்க உறுதி தெரிவித்துள்ளனர் என்று அவர் கூறினார். இதுவரை 24 மாநிலங்களைச் சேர்ந்த 52,000க்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்றுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

    தூய்மையான கடல், பாதுகாப்பான கடல் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான இந்த இயக்கம் சர்வதேச கடற்கரை தூய்மை தினமான செப்டம்பர் 17 அன்று நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.

    Next Story
    ×