என் மலர்tooltip icon

    இந்தியா

    மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் பலி!
    X

    மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் பலி!

    • உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அண்டை மாநிலமான அசாம் பகுதியைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள்
    • சுரங்கத்தில் சட்டவிரோதமாக டைனமைட் பயன்படுத்தி வெடி வைத்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    மேகாலயாவில் சட்டவிரோதமாக இயங்கிய நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இன்னும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆங்கில ஊடகங்கள் 16 பேர் உயிரிழந்ததாக குறிப்பிடுகின்றன.

    மேகாலயாவின் கிழக்கு ஜெய்ந்தியா மலை மாவட்டத்திலுள்ள தஷ்காய் பகுதியில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒருவர் படுகாயமடைந்து ஷில்லாங்கில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அண்டை மாநிலமான அசாம் பகுதியைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. சுரங்கத்தில் சட்டவிரோதமாக டைனமைட் (Dynamite) பயன்படுத்தி வெடி வைத்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வெடிப்பு மிகவும் பெரிதாக இருந்ததால் அருகிலுள்ள மலைகளும் அதிர்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் மீட்பு பணி கடினமாக இருப்பதாகவும், மேலும் இந்த இடர்பாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    "மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் மீட்புப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இருப்பினும், தொலைதூர இடம், இடிபாடுகள் மற்றும் மோசமான வானிலை ஆகியவை தங்கள் மீட்பு பணிகளுக்கு தடையாக இருப்பதாக" அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மேகாலயாவில் நிலக்கரி சுரங்கங்களுக்குத் தடை விதித்துள்ள போதிலும், இதுபோன்ற சட்டவிரோத சுரங்கச் செயல்பாடுகள் தொடர்கின்றன.

    Next Story
    ×