என் மலர்
இந்தியா

மேற்கூரையால் உயிருக்கு ஆபத்து? ஹெல்மெட் அணிந்து பணியாற்றும் அரசு ஊழியர்கள்
- அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து வேலை பார்க்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஜக்தியால் மாவட்டத்தில் பீர்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து தான் ஓட்ட வேண்டும். ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து வேலை பார்க்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அங்குள்ள ஜக்தியால் மாவட்டத்தில் பீர்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் அதன்பிறகு அந்த கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்சத்தில் இவ்வாறு ஹெல்மெட் அணிந்து வேலை பார்ப்பதாக கூறுகின்றனர்.
இந்த கட்டிடம் வாடகையில் இயங்கி வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையிலும், உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைக்காததால் அங்கு அலுவலகத்தை மாற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.






