என் மலர்
இந்தியா

தெலங்கானா அரசு ஊதிய உயர்வு - தூய்மை பணியாளருக்கு ரூ.2 லட்சம்... பொறியாளருக்கு ரூ.7 லட்சம்!
- கடந்த பத்து ஆண்டுகளில் அரசின் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
- கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா அரசு, அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் நீண்டநாட்களாக பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்கள் தற்போது மாதம் ரூ.2 லட்சம்வரை சம்பளம் பெறக்கூடும்.
தெலங்கானா அரசின் இந்த முடிவு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், மாநிலத்தின் நிதிச் சுமையை மேலும் அதிகரித்துள்ளது. அரசுத் தரப்புத் தகவல்களின்படி, தெலங்கானா அரசு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக மாதத்திற்கு சுமார் ரூ. 6,000 கோடி செலவிடுகிறது.
இது 2014-இல் மாநிலம் உருவானபோது செலவிடப்பட்ட தொகையை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும். அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட ஊதிய மாற்றங்கள் மற்றும் தேர்தல் காலங்களில் செய்யப்பட்ட மாற்றங்களே இந்த உயர்விற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
தெலங்கானாவில் அதிக சம்பளம் பெறும் ஊழியர்களாக மின்சாரத்துறையை சேர்ந்தவர்கள் உள்ளனர். தெலங்கானா மாநில மின் உற்பத்தி கழகம் (TGGENCO) மற்றும் மின் விநியோக நிறுவனங்களில் (DISCOMs) பணிபுரியும் மூத்த அதிகாரிகள் இப்போது மாதம் ரூ. 7 லட்சம் வரை சம்பளம் பெறுகின்றனர். ஹைதராபாத் மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் சராசரியாக மாதம் ரூ. 70,000 ஊதியம் பெறுகின்றனர். அனுபவம் வாய்ந்த நான்காம் நிலை ஊழியர்கள் ரூ. 2 லட்சம் வரை ஊதியம் பெறுகின்றனர். மாநகராட்சிப் பணிகளில் புதிதாகச் சேரும் ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஆரம்ப ஊதியமாக ரூ.28,000 வழங்கப்படுகிறது.
துறைகளுக்கு ஏற்ப சம்பளம் மாறுபடுகிறது. ஆனால் அனைத்து ஊழியர்களுக்கும் 33.67% அகவிலைப்படி வழங்கப்படுகிறது. மேலும் பெரும்பாலான ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அடிக்கடி உயர்த்தி வழங்கப்படும் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தால் மாநிலத்தின் நிதிச்சுமை கூறுகிறது என கூறப்பட்டாலும், தெலங்கானாவின் உள்நாட்டு உற்பத்தி வலுவான நிலையிலேயே உள்ளது. வருவாய் ரூ.2.30 லட்சம் கோடி; செலவு ரூ.2.27 லட்சம் கோடி. இதன் மூலம் மாநிலத்தின் நிதி நிலை சமமாகப் பராமரிக்கப்படுகிறது. பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குழு வாரியான ஊதிய விவரங்கள்:
Group 1: ரூ. 54,000 முதல் ரூ. 1,33,000 வரை.
Group 2: ரூ. 38,890 முதல் ரூ. 1,18,230 வரை.
Group 3: ரூ. 32,810 முதல் ரூ. 96,890 வரை
Group 4: ரூ. 24,280 முதல் ரூ. 72,850 வரையிலும் அடிப்படை சம்பளம் வழங்கப்படுகிறது.






