search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் கள்ளக்காதலால் பேராசிரியரை குக்கரால் அடித்து கொலை செய்த மனைவி
    X

    ஆந்திராவில் கள்ளக்காதலால் பேராசிரியரை குக்கரால் அடித்து கொலை செய்த மனைவி

    • கடந்த 10-ந் தேதி ஆப்பிரிக்காவில் இருந்து முரளி விசாகப்பட்டினம் வந்தார்.
    • அப்போது அக்கம்பக்கத்தினர் மிருதுளாவின் கள்ளக்காதல் குறித்து முரளியிடம் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம், பில்லால வலசை பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 43). இவர் ஆப்பிரிக்காவில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி மிருதுளா (29). தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஆப்பிரிக்காவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு முரளியின் மகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மனைவியையும், மகனையும் அவரது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைத்தார். விசாகப்பட்டினம் ரிக்‌ஷா காலனியில் முரளி சொந்தமாக வீடு கட்டி அங்கு தனது மனைவி மகனை குடிவைத்தார்.

    பின்னர் ஆப்பிரிக்கா நாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சாய்ராம் நகர் காலனியை சேர்ந்த ஹரிசங்கர் வர்மா என்பவருடன் மிருதுளாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    ஹரி ஷங்கர் வர்மா, மிருதுளா இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி ஆப்பிரிக்காவில் இருந்து முரளி விசாகப்பட்டினம் வந்தார். அப்போது அக்கம்பக்கத்தினர் மிருதுளாவின் கள்ளக்காதல் குறித்து முரளியிடம் தெரிவித்தனர்.

    கள்ளக்காதலை கைவிடுமாறு முரளி தனது மனைவியிடம் வற்புறுத்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மிருதுளா இதுகுறித்து அவரது கள்ளக்காதலன் ஹரிசங்கர் வர்மாவிடம் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து முரளியை கொலை செய்ய முடிவு செய்தனர்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு முரளி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மிருதுளா அவரது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்தார்.

    படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த முரளி கையை ஹரிசங்கர் வர்மா பிடித்துக் கொள்ள, மிருதுளா சமையல் செய்யும் குக்கரால் முரளியின் தலையில் சரமாரியாக தாக்கினார்.

    இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே முரளி பரிதாபமாக இறந்தார். முரளியின் பிணத்தை போர்வையால் சுற்றி மறைத்து வலசை பாலத்தின் கீழ் வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து விட்டனர்.

    2 நாட்கள் கழித்து சென்று பார்த்தபோது பிணம் அழுகி துர்நாற்றம் வீசியது. இதையடுத்து முரளியின் பிணத்தின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

    இதனைக் கண்ட பொதுமக்கள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கணவர் பிணத்தை எரித்துக் கொண்டிருந்த மிருதுளா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஹரிசங்கர் வர்மா ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    முரளி தங்களது கள்ளக்காதலை கண்டித்ததுடன், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக தெரிவித்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மிருதுளா மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்தனர்.

    கள்ளக்காதல் கொலையால் அவர்களது 7 வயது மகன் பெற்றோர் இன்றி தவித்து வருவது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×