search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது- 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
    X

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது- 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

    • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் புதிதாக 34 நிவராண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
    • மழையின் போது திடீர் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க பேரிடர் மேலாண்மை மையம் அறிவுறுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக திருவனந்தபுரம், கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும், தென்மேற்கு பருவமழையும் விரைவில் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. காலை முதல் மிதமான அளவில் பெய்த மழை, நேரம் செல்லச்செல்ல கனமழையாக மாறியது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியது.

    பிரதான சாலைகள் மற்றும் குறுகிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார்கள், இருசக்கர வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. இதில் சில வாகனங்கள் பழுதாகி நடுவழியின் நின்றன. அதில் பயணித்தவர்கள் வாகனங்களை எடுக்க முடியாமல் அங்கேயே விட்டு விட்டு தண்ணீரில் இறங்கி நடந்தே சென்றனர். நகரின் மையப்பகுதியில் உள்ள பஸ் மற்றும் ரெயில் நிலையங்களுக்குச் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். அவர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளை தூக்கிக் கொண்டு சிரமத்துடன் சென்றனர்.

    மேலும் சாலைகளில் ஓடிய தண்ணீர், வணிக நிறுவனங்களுக்குள்ளும் புகுந்தது. கட்டக்கடை பகுதியில் கோழிப்பண்ணைக்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்த 5 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக இறந்தன. ஆலப்புழா மாவட்டத்திலும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. மழையின் போது வீசிய காற்றில் மரங்கள் சாய்ந்து வீடுகள் மீதும் விழுந்தது. இதில் ஒரு சில வீடுகள் சேதம் அடைந்தன.


    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் புதிதாக 34 நிவராண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு 666 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொல்லம் மாவட்டத்தில் 877 பேரும், ஆலப்புழாவில் 752 பேரும், கோட்டயத்தில் 332 பேரும், எர்ணாகுளத்தில் 58 பேரும், திருவனந்தபுரத்தில் 35 பேரும், ஆலப்புழாவில் 107 பேரும், கோட்டயத்தில் 81 பேரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 184 பேர் குழந்தைகள் ஆவர்.

    மாநிலத்தில் எர்ணாகுளம், களமச்சேரி, காக்கநாடு பகுதிகளிலும் மழைக்கு வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அங்கு வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் சிக்கியவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

    இந்த சூழலில் ஆண்டு தோறும் ஜூன் 1-ந்தேதி கேரளத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இன்றே (30-ந்தேதி) அதற்கான சாதகமான நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தென்மேற்கு பருவமழை மாநிலத்தில் இன்று தொடங்கியது.

    இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு வருகிற 2-ந்தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையின் போது திடீர் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க பேரிடர் மேலாண்மை மையம் அறிவுறுத்தி உள்ளது.

    தென்மேற்கு பருவமழை முதலில் குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையோரத்தில் தொடங்கி, திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் என கேரள மாநிலம் முழுவதும் பெய்யும். தொடர்ந்து கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் வட மாநிலங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே இன்றும், நாளையும் (30,31-ந்தேதிகள்) குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×