என் மலர்
இந்தியா

சுனேத்ரா பவார் நியமனம்: பா.ஜ.க. மீது 'சாம்னா' தாக்கு!
- அஜித் பவார் மரணத்துக்கு பிறகு பவார் குடும்பத்துக்கும், மராட்டிய அரசியலுக்கும் சிக்கல்கள் அதிகரித்து உள்ளன.
- சுனேத்ரா பவார் கப்பலை செலுத்தினாலும் அதன் எந்திரமும், கட்டுப்பாடும் பா.ஜனதா முதல்-மந்திரி தேவேந்திர ஃபட்னாவிஸிடம் உள்ளது.
மராட்டிய துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் கடந்த 28-ந்தேதி விமான விபத்தில் பலியானார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க., சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரசை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக சுனேத்ரா பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவியை வழங்கியது. அவர் கடந்த 31-ந்தேதி மராட்டிய முதல் பெண் துணை மந்திரியாக பதவியேற்றார்.
இதைத்தொடர்ந்து சரத்பவார் கட்சியுடன் இணையும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது. துணை முதல்-மந்திரியாக அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் பதவியேற்பது பற்றி தங்கள் குடும்பத்தினரிடம் அவர் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் சரத்பவார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சுனேத்ரா பவார் துணை முதல் மந்திரியாக நியமிக்கப்பட்டதற்கு பா.ஜனதா சூத்திரதாரியாக செயல்பட்டதாகவும், பவார் கட்சிகள் இணைவதை விரும்பவில்லை என்றும் பா.ஜனதா மீது உத்தவ் தாக்கரேவின் சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அந்த கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பா.ஜனதா தலைமை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) தலைவர்களான சுனில் தட்கரே, பிரபுல் படேல் ஆகியோர் தேசியவாத காங்கிரசின் 2 பிரிவுகளும் இணைவதை விரும்பவில்லை. அஜித்பவார் மரணத்துக்கு பிறகு என்.சி.பி.யில் சிலர் அதிக லட்சியம் கொண்டவர்களாக மாறினர். துணை முதல்-மந்திரி பதவியை ஏற்க கட்சிக்குள் போட்டி ஏற்பட்டது. தட்கரே, படேல் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. கட்சி படேலிடம் சென்று விடக்கூடாது என்பதற்காகவே சுனேத்ரா பவார் துணை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
சுனேத்ரா பவார் யாருடைய விருப்பத்தின் பேரில் துணை முதல் மந்திரியாக பொறுப்பேற்று உள்ளார் என்பதுதான் மராட்டிய மாநிலம் முன்புள்ள கேள்வியாகும். ஏனென்றால் சரத்பவார், சுப்ரியா சுலே அல்லது பவார் குடும்பத்தினர் யாருக்கும் இது பற்றி தெரியாது. இந்த அரசியலுக்கு பின்னால் பா.ஜனதா தலைமைதான் சூத்திரதாரி.
அஜித் பவார் மரணத்துக்கு பிறகு பவார் குடும்பத்துக்கும், மராட்டிய அரசியலுக்கும் சிக்கல்கள் அதிகரித்து உள்ளன. இந்த சிக்கல்கள் தீர்க்கப்படக் கூடாது என்று பலர் விரும்புகிறார்கள். சுனேத்ரா பவார் கப்பலை செலுத்தினாலும் அதன் எந்திரமும், கட்டுப்பாடும் பா.ஜனதா முதல்-மந்திரி தேவேந்திர ஃபட்னாவிஸிடம் உள்ளது. அவரது கருணையின் பேரில்தான் சுனேத்ரா பவாரும், ஏக்நாத் ஷிண்டேவும் தங்கள் பதவியில் இருக்க முடியும்.
சுனேத்ரா பவார் அலங்கார பொருளாக இருக்கக் கூடாது. பொம்மையாக இல்லாமல் திறமையாக செயல்பட வேண்டும். சுனேத்ரா பவார் தனது கணவரின் இறுதி சடங்குகளுக்கு பிந்தைய சடங்குகள் முடிவடைவதற்கு முன்பே பதவியேற்றது இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு பொருந்தவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






