என் மலர்
இந்தியா

பாதுகாப்பு விதிமுறைகளை மீறுகிறார் ராகுல் காந்தி: சி.ஆர்.பி.எப். குற்றச்சாட்டு
- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இசட் பிளஸ் பிரிவில் இருந்து வருகிறார்.
- ராகுல் காந்தியின் அலுவலகத்துக்கும் சி.ஆர்.பி.எப். நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:
மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் உள்ளார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் துப்பாக்கி ஏந்திய சுமார் 12 சி.ஆர்.பி.எப். கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது நிகழ்வுகளில் அதாவது உள்நாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பயணங்களில் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபடுவதாக சி.ஆர்.பி.எப். குற்றம் சாட்டி உள்ளது. அதாவது, முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் திட்டமிடாத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளது.
இது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால், இது தொடர்பான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சி.ஆர்.பி.எப்-ன் வி.ஐ.பி. பாதுகாப்பு பிரிவு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. மேலும் ராகுல் காந்தியின் அலுவலகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஆனால், சி.ஆர்.பி.எப். குற்றச்சாட்டை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, மத்திய அரசுக்கு எதிராக வாக்கு திருட்டு குற்றச்சாட்டை கூறி வரும் ராகுல் காந்தியை மிரட்டும் செயல் இது என குற்றம் சாட்டியுள்ளது.
இதுபோல் சி.ஆர்.பி.எப். ராகுல் காந்திக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.






