என் மலர்
இந்தியா

டெல்லியில் மீண்டும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- நேற்று முன்தினமும் மர்ம நபர்களால் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
- டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக உள்ளது.
புதுடெல்லி:
டெல்லி மால்வியா நகரில் உள்ள எஸ்.கே.வி. அவுஸ், கரோல் பாக் பகுதியில் உள்ள ஆந்திரப் பள்ளிகள் உள்ளிட்ட 50 பள்ளிகளை குறிவைத்து கடந்த 48 மணி நேரத்திற்குள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல் நேற்று முன்தினமும் மர்ம நபர்களால் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டு மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். பள்ளிகளில் வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கடந்த மாதம் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மிரட்டல் விடுத்த 12 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். விசாரித்ததில் அவன் விளையாட்டாக செய்ததாக சொல்ல அந்த சிறுவனை எச்சரித்து அனுப்பினர்.
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக உள்ளதால் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






