என் மலர்
இந்தியா

மான்செஸ்டரில் பயங்கரவாத தாக்குதல்: கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா
- மான்செஸ்டரில் யூத வழிபாட்டு தலத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
- இந்தத் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஹீட்டன் பார்க் யூத வழிபாட்டுத் தலத்தின் மீது நேற்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் கூட்டம் மீது காரை மோதி, அதன்பின் கத்தியால் குத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், மான்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
இந்தக் கொடூரமான தாக்குதல் பயங்கரவாதத்தின் தீய சக்திகளிடமிருந்து நாம் எதிர்கொள்ளும் சவால்களை மீண்டும் கடுமையாக நினைவூட்டுகிறது.
சர்வதேச அகிம்சை தினத்தில் இந்த தாக்குதல் நடந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி, அதைத் தோற்கடிக்க உலக சமூகம் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மான்செஸ்டர் நகர மக்களுக்காக பிரார்த்திக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை நட்பு நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.






