search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாங்கள் தனித்து போட்டி: பரூக் அப்துல்லா அறிவிப்பால் இந்தியா கூட்டணிக்கு மேலும் பின்னடைவு
    X

    நாங்கள் தனித்து போட்டி: பரூக் அப்துல்லா அறிவிப்பால் இந்தியா கூட்டணிக்கு மேலும் பின்னடைவு

    • மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் கட்சிகள் காங்கிரஸ்க்கு தொகுதிகள் கொடுக்க மறுப்பு.
    • உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும் தொகுதி பங்கீடு வெற்றிகரமாக முடிந்துள்ளது.

    பாராளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. ஆனால், இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் இணைந்து விட்டார்.

    காங்கிரஸ் கட்சி இந்த கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. இதனால் மாநில கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்து கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் மேற்கு வங்காள மாநிலத்தில் மேற்கு வங்காளத்தில் இரண்டு தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என மம்தா அறிவித்தார். இதனால் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது இந்திய கூட்டணிக்கு முதல் சறுக்கலாக கருதப்பட்டது.

    அதன்பின் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி டெல்லியில் காங்கிரஸ்க்கு ஒரு இடம்தான் என அறிவித்தது. மேலும், பஞ்சாபில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இது 2-வது சறுக்கலாக கருதப்படுகிறது.

    மேலும், ஆம் ஆத்மி குஜராத் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸிடம் சில தொகுதிகளை கேட்கிறது. நாங்கள் எங்களுடைய வாக்கு சதவீதம் அடிப்படையில்தான் தொகுதிகளை கேட்கிறோம் என்கிறது. இதனால் காங்கிரஸ்- ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா? என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி தனித்து போட்டியிடும் என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது இந்தியா கூட்டணிக்கு மேலும் பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே, மம்தா பானர்ஜி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் கிடைப்பது கூட சந்தேகம்தான் என விமர்சனம் செய்திருந்தார். காங்கிரஸ்க்கு 40 இடங்களாவது கிடைக்க வேண்டிக் கொள்கிறேன் என பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பரூக் அப்துல்லா இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக கூறுகையில் "பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த வரம்புகளை கொண்டது. தேசிய மாநாடு, பிடிபி கட்சி இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளது. அது தொடரும்" எனத் தெரிவித்துள்ளார்.

    80 தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ்க்கு 11 இடங்களை வழங்கியுள்ளது சமாஜ்வாடி கட்சி. இதனை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளது.

    Next Story
    ×