search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2024 தேர்தலுக்கு ஆயத்தமாகும் எதிர்கட்சி கூட்டணி: பல்வேறு பணிகளுக்கு குழுக்கள் அமைப்பு
    X

    2024 தேர்தலுக்கு ஆயத்தமாகும் எதிர்கட்சி கூட்டணி: பல்வேறு பணிகளுக்கு குழுக்கள் அமைப்பு

    • கூட்டணியை வழிநடத்த 13-பேர் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டியை அறிவித்தது
    • சமூக வலைதள பணிக்குழு, பிரச்சார கமிட்டி, ஊடக பணிக்குழு, தேர்தல் ஆராய்ச்சி பணிக்குழு அமைக்கப்பட்டது

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.

    ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள், இந்தியா (I.N.D.I.A.) எனும் பெயரில் ஒரு பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளன.

    இந்த கூட்டணியின் முதல் சந்திப்பு கூட்டம் கடந்த ஜூன் 23 அன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது. இந்நிலையில் இந்த கூட்டணியின் அடுத்த சந்திப்பு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெற்றது.

    கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள், கூட்டு செயல் கமிட்டிகள் அமைத்தல், கூட்டணியின் இலச்சினையை மக்களிடம் அறிமுகப்படுத்துதல், கூட்டணியின் கொள்கைகள் மற்றும் குறைந்தபட்ச செயல் திட்டங்கள் வகுத்தல், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டிய வியூகம், எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது.

    இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவையாக இருப்பதாலும், தலைவர்களுக்கிடையே கருத்து மோதல்கள் தோன்றாமல் இருக்கும் வகையிலும், தேர்தலுக்கு கூட்டணியை வழிநடத்த 13-பேர் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டியை இந்த கூட்டணி அறிவித்துள்ளது.

    அதே போன்று கூட்டணியில் உள்ள கட்சிகளில் இருந்து 11-பேர் அடங்கிய சமூக வலைதளங்களுக்கான பணிக்குழுவும், 18-பேர் அடங்கிய பிரச்சார கமிட்டியும், 16-பேர் கொண்ட ஊடக பணிக்குழுவும், 10-பேர் கொண்ட தேர்தல் திட்டங்களுக்கான ஆராய்ச்சி பணிக்குழுவும் அமைத்துள்ளது.

    இவையனைத்திலும், மேலும் ஒருவராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் பின்னர் சேர்க்கப்படுவார் என எதிர்கட்சி கூட்டணி தெரிவித்துள்ளது.

    Next Story
    ×