search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நானும் கட்சி பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்: அஜித்பவாரை தொடர்ந்து, சகன் புஜ்பால் பேச்சு
    X

    நானும் கட்சி பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்: அஜித்பவாரை தொடர்ந்து, சகன் புஜ்பால் பேச்சு

    • கட்சியின் நிறுவன அமைப்புக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கி உள்ளது.
    • மாநில தலைவர் பதவிக்கான விருப்பத்தை அனைவரும் தெரிவிக்கலாம்.

    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் கூட்டம் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் விருப்பம் இல்லை, கட்சி பணியாற்ற விரும்புவதாக கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவார் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பதவிக்கு அவர் அடிபோடுவதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் சகன் புஜ்பாலும் தனது பங்கிற்கு களத்தில் குதித்துள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான சகன் புஜ்பால் இதுகுறித்து நேற்று கூறியதாவது:-

    இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவரை தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில பிரிவு தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். நானும் மாநில பிரிவு தலைவராக பணியாற்ற விரும்புகிறேன். கட்சியில் சுனில் தத்காரே, ஜிதேந்திர அவாத், தனஞ்செய் முண்டே உள்ளிட்ட பல இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த தலைவர்கள் உள்ளனர்.

    கட்சியின் நிறுவன அமைப்புக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கி உள்ளது. எனவே மாநில தலைவர் பதவிக்கான விருப்பத்தை அனைவரும் தெரிவிக்கலாம். இதில் தவறு எதுவும் இல்லை.

    மராட்டிய மக்கள் தொகையில் 54 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். எனவே கட்சியின் மாநில தலைவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக இருந்தால் அவர்களை சென்றடைவது எளிதாக இருக்கும்.

    தற்போது கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் 5 ஆண்டுகளாக பதவியில் இருக்கிறார். பா.ஜனதாவின் மாநில தலைவர்கள் சந்திரசேகர் பவன்குலே மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் நானா படோலே ஆகியோர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்.

    கட்சி விதிகளின் படி கட்சியின் மாநில பிரிவு தலைவர் ஒரு ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி சிறிய சமூகத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி 1999-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது கட்சியின் முதல் மாநில பிரிவு தலைவராக இருந்தவர் சகன் புஜ்பால் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×