என் மலர்
இந்தியா

கிரிக்கெட் பேட்டுக்காக நடந்த கொடூரம்: 10 வயது சிறுமியை 21 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுவன்
- வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது கொலை நடந்துள்ளது.
- கிரிக்கெட் பேட் திருட விரும்பினால், கத்தி எதற்கு? என போலீசார் விசாரணை.
ஐதராபாத்தில் கிரிக்கெட் பேட்டை திருட விரும்பிய 14 வயது சிறுவன், 10 வயது சிறுமியை கத்தியால் 21 முறை குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் பைக் மெக்கானிக் தொழில் செய்து வருபவரின் மகள் சஹாஸ்ரா. இவர் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு 6 வயது தம்பி உள்ளான்.
சம்பவத்தன்று சஹாஸ்ரா வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமியின் தந்தை வேலைக்கு சென்று, வீடு திரும்பியபோது, மகள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது கண்டு துடிதுடித்து போனார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றினர். அப்போது சிறுமியின் உடலில் 21 கத்துக்குத்து இருந்தது போலீசார் கண்டறிந்தனர்.
கொலையாளியை பிடிக்க காவல்துறை பல தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டது. நான்கு நாட்கள் கழித்து பக்கத்து வீட்டு 14 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவன் சொன்ன காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் வீட்டில் கிரிக்கெட் பேட் இருந்தது. அதை திருட விரும்பினேன். பேட் திருடுவதற்காக வீட்டிற்கு சென்றபோது குத்திக் கொலை செய்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் பேட்டை திருடச் சென்ற சிறுவன், கத்தியுடன் ஏன் சென்றான் என்ற தெரிந்து கொள்ள போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.






