

புதுடெல்லி:
இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் 2-வது பெரிய நாடாக பிரான்ஸ் இருந்து வருகிறது. இந்தியாவின் நீண்ட கால, ஐரோப்பியாவின் நெருங்கிய நட்பு நாடாக பிரான்ஸ் இருந்து வருகிறது.
இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை குடியரசு தினவிழா நடைபெற இருக்கும் நிலையில் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இன்று பிரான்சில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார்.
அதிபர் மேக்ரானை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில ஆளுநர், முதல் மந்திரி உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பிரதமர் மோடியுடன் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அதன்பின் இருவரும் சில வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய இடங்களைப் பார்வையிட உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அமர் கோட்டையை இம்மானுவல் மேக்ரான் பார்வையிட்டு, அங்கு நடைபெறும் கலாசார நிகழ்வை கண்டு ரசிக்க உள்ளார்.
ராம்பேக் அரண்மனையில் அதிபர் மேக்ரானுக்கு தனிப்பட்ட இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்தியா பல கோடி ரூபாய் மதிப்பிலான பிரான்ஸ் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் நிலையில் அதிபர் மேக்ரான் இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.