என் மலர்
இந்தியா

டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டம்
- சுற்றுலா தலங்களையும் தகர்க்க முடிவு செய்துள்ளதாக உளவு அமைப்பு தனது எச்சரிக்கையில் தெரிவித்து உள்ளது.
- செங்கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ந்தேதி நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காரை இயக்கிய பயங்கரவாதி டாக்டர் உமர் நபி உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்த சம்பவத்தில் உமர் நபியின் கூட்டாளிகளான சில டாக்டர்கள் உள்பட 10-க்கும் மேற்பேட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட டாக்டர்கள் அரியானாவின் பரிதாபாத்தில் செயல்படும் அல்பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் டெல்லியில் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
செங்கோட்டை அருகே உள்ள பகுதிகள், சாந்தினி சவுக்கின் சில பகுதிகள் மற்றும் டெல்லியில் உள்ள மத வழிபாட்டு தலங்கள், பாரம்பரிய கட்டிடங்களை தாக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவு அமைப்பு அந்த எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
சாந்தினி சவுக்கில் உள்ள ஒரு கோவிலும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருப்பதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களையும் தகர்க்க முடிவு செய்துள்ளதாக உளவு அமைப்பு தனது எச்சரிக்கையில் தெரிவித்து உள்ளது.
இதை தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதை தவிர தீவிரவாதிகள் இலக்காக நிர்ணயித்த இடங்களில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கண்காணிப்பு கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்துக்கிடமான பொருட்கள் அல்லது செயல்பாடுகள் குறித்து போலீசாருக்கு தெரிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பீதி அடைய வேண்டாம் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 6-ந்தேதி மசூதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 31 பேர் பலியானார்கள். 160 பேர் காயம் அடைந்தார்கள். இதற்கு பழி வாங்கவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தலாம் என்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.






